ஆண்டாள் அருளிய திருப்பாவை

ஆண்டாள்

ஆண்டாள் அருளிய

திருப்பாவை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருப்பாவை தனியன்கள்
(ஸ்ரீபராசர பட்டர் அருளிச் செய்தது)


நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதிசத: சிரஸ்ஸித்தமத்யா பயந்தீ|
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய:||


(உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை)
இருவிகற்ப நேரிசை வெண்பா


அன்னவயற் புதுவை ஆண்டாள்* அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்* – இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை* பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே!* தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! – நாடிநீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்*
நாம்கடவா வண்ணமே நல்கு.

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

எட்டடி நாற்சீரொருவிகற்பக் கொச்சகக் கலிப்பா
(பிலஹரி ராகம் – அட தாளம்)


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் (1) (474)

(பந்துவராளி ராகம் – ஆதி தாளம்)


வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி*
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய். (2) (475)

 

(பந்துவராளி ராகம் – திரிபுடை தாளம்)


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து*
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயலுகள*
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் (3) (476)

 

(காம்போதி ராகம் – அட தாளம்)

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்*
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி*
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து*
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில்*
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்*
வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். (4) (477)

 

(தோடி ராகம் – ரூபக தாளம்)


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை*
தூய பெருநீர் யமுனைத் துறைவனை*
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை*
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். (5) (478)

 

(பூபாள ராகம் – ஆதி தாளம்)


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்*
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?*
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு*
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி*
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை*
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்*
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். (6) (479)

 

(பூபாள ராகம் – ரூபக தாளம்)


கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன்* கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!*
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து*
வாச நறும் குழல் ஆய்ச்சியர்* மத்தினால்
ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?*
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி*
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?*
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் (7) (480)

 

(பூபாள ராகம் – ஆதி தாளம்)


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு*
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்*
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து* உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்* கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு*
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்*
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். (8) (481)

 

(மோஹன ராகம் – ஆதி தாளம்)


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய*
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்*
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்*
மாமீர் அவளை எழுப்பீரோ* உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ*
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ*
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று*
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். (9) (482)

 

(அஸாவேரி ராகம் – ஆதி தாளம்)


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!*
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்*
நாற்றத் துழாய் முடி நாராயணன்* நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்* பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கருணனும்*
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?*
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே!*
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். (10) (483)

Leave a Reply