பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார்

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

பூதத்தாழ்வார் அருளிச்செய்த

இரண்டாம் திருவந்தாதி

தனியன்

திருகுருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது

நேரிசை வெண்பா

என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா

அன்பே தகளி யளித்தானை, – நன்புகழ்சேர்

சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்

பூதத்தார் பொன்னங்கழல்.

இரண்டாம் திருவந்தாதி

2182:

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான். (2) 1

 

2183:

ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,

தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், – வானத்

தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள்

பணியமரர் கோமான் பரிசு? 2

 

2184:

பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,

புரிவார் புகழ்பெறுவர் போலாம், – புரிவார்கள்

தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து

நல்லமரர் கோமான் நகர். 3

 

2185:

நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே

திகழும் அணிவயிரம் சேர்த்து, – நிகரில்லாப்

பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,

அங்கம்வலம் கொண்டான் அடி. 4

 

2186:

அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்

அடிமூன் றிரந்தவனி கொண்டாய், – படிநின்ற

நீரோத மேனி நெடுமாலே நின்னடியை

ஆரோத வல்லார் அறிந்து? 5

 

2187:

அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்

செறிந்த மனத்தராய்ச் செவ்வே, – அறிந்தவன்றன்

பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,

காரோத வண்ணன் கழல். 6

 

2188:

கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்

அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த

போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை

ஓராழி நெஞ்சே. உகந்து. 7

 

2189:

உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை

அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, உகந்து

முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்

அலைபண்பா லானமையால் அன்று. 8

 

2190:

அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,

நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று

வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,

பெருமுறையா லெய்துமோ பேர்த்து? 9

 

2191:

பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து

காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய

நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்

காவடியேன் பட்ட கடை. 10

 

Leave a Reply