பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார்

நம்மாழ்வார் அருளிச்செய்த

பெரிய திருவந்தாதி

தனியன்

எம்பெருமானார் அருளிச்செய்தது

 

முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து

வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த

முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்

குருகூரன் மாறன் பேர் கூறு.

 

2585:

 

முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,

இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய

நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்

பூவீன்ற வண்ணன் புகழ் (1)

 

2586:

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்

இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற்

றெங்கள் மால். செங்கண் மால். சீறல்நீ, தீவினையோம்

எங்கள் மால் கண்டாய் இவை. (2)

 

2587:

இவையன்றே நல்ல இவையன்றே தீய,

இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்

என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,

என்னால் செயற்பால தென்?(3)

 

2588:

என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்

றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன

கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்

பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று?

 

2589:

பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ

மற்றையா ராவாரும் நீபேசில், எற்றேயோ

மாய.மா மாயவளை மாயமுலை வாய்வைத்த

நீயம்மா. காட்டும் நெறி.

 

2590:

நெறிகாட்டி நீக்குதியோ, நின்பால் கருமா

முறிமேனி காட்டுதியோ, மேனாள்-அறியோமை

எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே, ஈதுரையாய்

எஞ்செய்தா லென்படோ ம் யாம்?

 

2591:

யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்

தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய

செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த

அம்மா. நின் பாதத் தருகு.

 

2592:

அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே

பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம்

பண்புடையீர். பாரளந்தீர். பாவியேம்கண் காண்பரிய

_ண்புடையீர் _ம்மை _மக்கு.

 

2593:

_மக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென், மாலார்

தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால்?-எமக்கினி

யாதானு மாகிடுகாண் நெஞ்சே, அவர்த்திறத்தே

யாதானும் சிந்தித் திரு.

 

2594:

இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ

டொருநால்வர் ஓரிருவர் அல்லால், திருமாற்கு

யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே

நாமா மிகவுடையோம் நாழ்?

 

2595:

நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,

வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத

பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,

நீரும்நீ யாய்நின்ற நீ.

 

2596:

நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்?

போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும்

காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்

வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.

 

2597:

வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,

இழக்கவும் காண்டும் இறைவ.-இழபுண்டே,

எம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்

தம்மால்காட் டுன்மேனிச் சாய்?

 

2598:

சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,

பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த்

தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்

பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து.

 

2599:

பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்

பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம்

தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய

செம்மேனிக் கண்வளர்வார் சீர்.

 

2600:

சீரால் பிறந்து சிறப்பால் வளராது,

பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப்

புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே?

சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.

 

2601:

சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்

வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும்

வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,

தாள்வரைவில் லேந்தினார் தாம்.

 

2602:

தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,

பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப்

பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்

தொல்லுருவை யாரறிவார் சொல்லு?

 

2603:

சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,

எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்

மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,

காத்தானைக் காண்டும்நீ காண்.

 

2604:

காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,

நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி

உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,

திருவாகம் தீண்டிற்றுச் சென்று.

 

2605:

சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,

இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப்

பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,

காருருவன் தன் நிமிர்த்த கால்

 

2606:

காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,

மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால்

தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம், வீற்

றிருக்குமிடம் காணா திளைத்து.

 

2607:

இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே. சொன்னேன்,

இளைக்க நமன்தமர்கள் பற்றி-இளைப்பெய்த

நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,

தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.

 

2608:

தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்

தானே பிறர்கட்ட்கும் தற்றோன்றல்,-தானே

இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,

அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்?

 

2609:

ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை

ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார்

மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன், வானோர்

இனத்தலைவன் கண்ணனால் யான்.

 

2610:

யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்

கானும் மலையும் புகக்கடிவான்,-தானோர்

இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,

அருளென்னும் தண்டால் அடித்து.

 

2611:

அடியால் படிகடந்த முத்தோ,அ தன்றேல்

முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய்.

செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,

அறிகிலாமால் நீயளந்த அன்று.

 

2612:

அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,

இன்றேநாம் காணா திருப்பதுவும்,-என்றேனும்

கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்

உட்கண்ணால் காணு முணர்ந்து.

 

2613:

உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,

இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்

தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,

எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு.

 

2614:

இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய

செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே

மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்,மீண்

டடியெடுப்ப தன்றோ அழகு?

 

2615:

அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,

நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்

குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்

தடங்கடலை மேயார் தமக்கு.

 

2616:

தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,

தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று

தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,

யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?

 

2617:

யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,

யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,-யாதானும்

தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்

பாறுபா றாக்கினான் பால்.

 

2618:

பாலாழி நீகிடக்கும் பண்பை, யாம் கேட்டேயும்

காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்

சோதியாய். ஆதியாய். தொல்வினையெம் பால்கடியும்,

நீதியாய். நிற்சார்ந்து நின்று.

 

2619:

நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,

ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை

வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார் விடந்தான்,

அன்புடைய னன்றே யவன்?

 

2620:

அவனாம் இவனாம் உவனாம், மற் றும்பர்

வனாம் அவனென் றிராதே,-அவனாம்

அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,

அவனே எவனேலும் ஆம்.

 

2621:

ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?

நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்

மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்

அதுகரமே அன்பால் அமை.

 

2622:

அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,

இமைக்கும் பொழுதும் இடைச்சி-குமைத்திறங்கள்,

ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே,

பேசியே போக்காய் பிழை.

 

2623:

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே. பேசாய்,

தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்

போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே

வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு?

 

2624:

வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,

போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால

பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை

மாய்த்தானை வாழ்தே வலி.

 

2625:

வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்

வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்

பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,

பன்னாளும் நிற்குமிப் பார்.

 

2626:

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்

பாரிடம் முன்படைத்தா னென்பரால்,-பாரிடம்

ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு

ஆவான் பூகாவால் அவை.

 

2627:

அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,

நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்

மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ ,

மனத்துயரை மாய்க்கும் வகை?

 

2628:

வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,

மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து

மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,

மேலைத்தாம் செய்யும் வினை?

 

2629:

வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,

தினையாம் சிறிதளவும் செல்ல-நினையாது

வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,

நாயகத்தான் பொன்னடிகள் நான்.

 

2630:

நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்

தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத

மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,

நீகதியா நெஞ்சே. நினை.

 

2631:

நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,

நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச

எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்

எவ்வளவு முண்டோ எமக்கு?

 

2632:

எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,

அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப் பொலிந்த

மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,

கொன்றானை யேமனத்துக் கொண்டு?

 

2633:

கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்

வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள்

காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்

பேருருவென் றெம்மைப் பிரிந்து.

 

2634:

பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,

திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்

ஆவா. எனவிரங்கார் அந்தோ. வலிதேகொல்,

மாவை பிளந்தார் மனம்?

 

2635:

மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை,

சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய

தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே,

வண்டுழாம் சீராக்கு மாண்பு?

 

2636:

மாண்பாவித் தந்நான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்

சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங்

கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா

துண்ணவாய் தானுறுமோ ஒன்று?

 

2637:

ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது, உன்னடியார்க்

கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில்

வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு

வைகுந்த மென்றருளும் வான்?

 

2638:

வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ,

கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால், ஆனீன்ற

கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,

வன்துயரை யாவா. மருங்கு.

 

2639:

மருங்கோத மோதும் மணிநா கணையார்,

மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங்கே

எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,

மனக்கவலை தீர்ப்பார் வரவு.

 

2640:

வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே.

ஒருவா றொருவன் புகவாறு,-உருமாறும்

ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,

மாயவர்தாம் காட்டும் வழி.

 

2641:

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,

தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும்

தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,

வாழ்வடங்க மார்விடந்த மால்?

 

2642:

மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது

பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால்

பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,

மறப்பின்மை யான்வேண்டும் மாடு.

 

2643:

மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்

காடானும் ஆதானும் கைகொள்ளார்,-ஊடேபோய்ப்

போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்

பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.

 

2644:

பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்

ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே, பேர்ந்தெங்கும்

தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு

இல்லைகாண் மற்றோர் இறை.

 

2645:

இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,

மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்

தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்

மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.

 

2646:

மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்

வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்

மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான், நங்கள்

பிணிக்காம் பெருமருந்து பின்.

 

2647:

பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,

வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று

திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,

பருச்செவியு மீர்ந்த பரன்.

 

2648:

பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,

உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்

றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்

கைதான் தொழாவே கலந்து?

 

2649:

கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே

மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்

தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,

சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.

 

2650:

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,

மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட

வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே.

அறிகண்டாய் சொன்னேன் அது.

 

2651:

அதுவோநன் ரென்றங் கமருலகோ வேண்டில்,

அதுவோ பொருளில்லை யன்றே?, அதுவொழிந்து

மண்ணிறாள் வேனெனிலும் கூடும் மடநெஞ்சே,

கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.

 

2652:

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,

புல்லென் றழிந்தனகொல் ஏபாவம்,-வெல்ல

நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,

அடியேன துள்ளத் தகம்.

 

2653:

அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,

முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்

சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,

ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?

 

2654:

அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,

சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்

மாதா பிதுவாக வைத்தேன் எனதுளலே

யாதாகில் யாதே இனி?

 

2655:

இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,

தனிநின்ற சார்விலா மூர்த்தி,-பனிநீர்

அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு

முகத்தான்நின் உந்தி முதல்.

 

2656:

முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே

முதலாகும் மூன்றுக்கும் மென்பர்-முதல்வா,

நிகரிலகு காருருவா. நின்னகத்த தன்றே,

புகரிலகு தாமரையின் பூ?

 

2657:

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,

காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்

மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை

எல்லாம் பிரானுருவே என்று.

 

2658:

என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,

ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று

குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே.

புடைதான் பெரிதே புவி.

 

2659:

புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்

செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,-அவிவின்றி

யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,

ஊன்பருகு நேமியாய். உள்ளு.

 

2660:

உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,

விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள

உலகளவு யானும் உளனாவன் என்கொல்,

உலகளந்த மூர்த்தி. உரை.

 

2661:

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,

இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,

நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்

சொல்நன்றி யாகும் துணை.

 

2662:

துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத்

திணைநாளு மின்புடைத்தா மேலும், கணைநாணில்

ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,

ஓவாத வூணாக உண்.

 

2663:

உண்ணாட்டுத் தேசன்றே. ஊழ்வினையை யஞ்சுமே,

விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்

ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்

பேராயற் காளாம் பிறப்பு?

 

2664:

பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்

இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம்

ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்

பாதமே யேத்தாப் பகல்?

 

2665:

பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை

இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,–தகவாத்

தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என் றோரார்,

செழும்பரவை மேயார் தெரிந்து.

 

2666:

தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா

இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்

அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை

அம்மானை யேத்தா தயர்ந்து.

 

2667:

அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய், செயற்பால

அல்லவே செய்கிறுதி நெஞ்சமே. அஞ்சினேன்

மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.

 

2668:

வாழ்த்தி அவனடியைய்ப் பூப்புனைந்து, நிந்தலையைத்

தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,

எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,

தங்கத்தா னாமேலும் தங்கு.

 

2669:

தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,

எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்

தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய

கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்?

 

2670:

கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,

பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த

சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,

என்நினைந்து போக்குவரிப் போது?

 

2671:

இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்

எப்போது மீதேசொல் என்னெஞ்சே–எப்போதும்

கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்

மெய்கழலே ஏத்த முயல்.

 

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

 

Leave a Reply