திருவாய்மொழி இரண்டாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

2ஆம் பத்து 8ஆம் திருவாய்மொழி

2980

அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்

புணர்வது இருவரவர்முதலும்தானே

இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்

புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே. 2.8.1

 

2981

நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்

நீந்தும்துயரில்லா வீடுமுதலாம்

பூந்தண்புனல்பொய்கை யானை இடர்க்கடிந்த

பூந்தண்துழா யென்தனிநாயகன்புணர்ப்பே. 2.8.2

 

2982

புணர்க்குமயனா மழிக்குமரனாம்

புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி

புணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர்

புணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே. 2.8.3

 

2983

புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி

நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்

அலமந்துவீய வசுரரைச்செற்றான்

பலமுந்துசீரில் படிமினோவாதே. 2.8.4

 

2984

ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்

மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்

மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்

தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே. 2.8.5

 

2985

தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்

சேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு

பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை

பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே? 2.8.6

 

2986

கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்

கிடந்திடும் தன்னுள்கரக்குமுமிழும்

தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்

மடந்தையை மால்செய்கின்றமாலார்க்காண்பாரே. 2.8.7

 

2987

காண்பாராரெம்மீசன் கண்ணனையென்காணுமாறு

ஊண்பேசிலெல்லாவுலகுமோர்துற்றாற்றா

சேண்பாலவீடோ வுயிரோமற்றெப்பொருட்கும்

ஏண்பாலும்சோரான் பரந்துளனாமெங்குமே. 2.8.8

 

2988

எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து

இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப

அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய என்

சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 2.8.9

 

2989

சீர்மைகொள்வீடு சுவர்க்கநரகீறா

ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும்

வேர்முதலாய்வித்தாய்ப் பரந்துதனிநின்ற

கார்முகில்போல்வண்ணனென் கண்ணனைநான்கண்டேனே. 2.8.10

 

2990

கண்டலங்கள்செய்ய கருமேனியம்மானை

வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன்

பண்டலையில்சொன்னதமி ழாயிரத்திப்பத்தும்வல்லார்

விண்டலையில்வீற்றிருந் தாள்வரெம்மாவீடே. 2.8.11

Leave a Reply