3ஆம் பத்து 5 ஆம் திருவாய்மொழி
3057
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மா வுக்கருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மா னைச்சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும்துள் ளாதார்
தம்மால் கருமமென் சொல்லீர்
தண்கடல் வட்டத்துள் ளீரே. (2) 3.5.1
3058
தண்கடல் வட்டத்துள் ளாரைத்
தமக்கிரை யாத்தடிந் துண்ணும்
திண்கழற் காலசு ரர்க்குத்
தீங்கிழைக் கும்திரு மாலை
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்துழ லாதார்
மண்கொள் உலகில் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே. 3.5.2
3059
மலையை யெடுத்துக்கல் மாரி
காத்துப் பசுநிரை தன்னை
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச்சொல் லிநிறெப் போதும்
தலையினோ டாதனம் தட்டத்
தடுகுட்ட மாய்ப்பற வாதார்
அலைகொள் நரகத் தழுந்திக்
கிடந்துழைக் கின்ற வம்பரே. 3.5.3
3060
வம்பவிழ் கோதை பொருட்டா
மால்விடை யேழும் அடர்த்த
செம்பவ ளத்திரள் வாயன்
சிரீதரன் தொல்புகழ் பாடி
கும்பிடு நட்டமிட் டாடிக்
கோகுகட் டுண்டுழ லாதார்
தம்பிறப் பால்பய னென்னே
சாது சனங்க ளிடையே? 3.5.4
3061
சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்ப தற்கு
ஆதியஞ் சோதி யுருவை
அங்குவைத் திங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும்துள் ளாதார்
ஓதி யுணர்ந்தவர் முன்னா
என்சவிப் பார்ம னிசரே? 3.5.5
3062
மனிசரும் மற்றும் முற்றுமாய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானை
கனியைக் கரும்பினின் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவின்றி ஏத்திக் குனிப்பார்
முழுதுணர் நீர்மையி னாரே. 3.5.6
3063
நீர்மை நூற்றுவர் வீய
ஐவர்க் கருள்செய்து நின்று
பார்மல்கு சேனை அவித்த
பரஞ்சுட ரைநினைந் தாடி.
நீர்மல்கு கண்ணின ராகி
நெஞ்சம் குழைந்துநை யாதே
ஊர்மல்கி மோடு பருப்பார்
உத்தமர்க்கட் கென்செய் வாரே? 3.5.7
3064
வார்ப்புனல் அந்தண் ணருவி
வடதிரு வேங்கடத் தெந்தை
பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப்
பித்தரென் றேபிறர் கூற
ஊர்ப்பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்கநின் றாடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படு வாரே. 3.5.8
3065
அமரர் தொழப்படு வானை
அனைத்துல குக்கும் பிரானை
அமரர் மனத்தினுள் யோகு
புணர்ந்தவன் தன்னோடொன் றாக
அமரத் துணியவல் லார்கள்
ஒழியஅல் லாதவ ரெல்லாம்
அமர நினைந்தெழுந் தாடி
அலற்றுவ தேகரு மமே. 3.5.9
3066
கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னை
திருமணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளங் குழைந்தெழுந் தாடி
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதமை தீர்ந்தே. 3.5.10
3067
தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்ந்த புகழச் சுதனை
அமரர் பிரானையெம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளங்குரு கூர்ச்சடகோபன்
நேர்ந்தவோ ராயிரத் திப்பத்
தருவினை நீறு செய்யுமே. (2) 3.5.11