3ஆம் பத்து 8 ஆம் திருவாய்மொழி
3090
முடியானே. மூவுலகும் தொழுதேத் தும்சீர்
அடியானே ஆழ்கடலைக் கடைந்தாய். புள்ளூர்
கொடியானே கொண்டல்வண் ணா.அண்டத் துமபரில்
நெடியானே. என்று கிடக்குமென் நெஞ்சமே. (2) 3.8.1
3091
நெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென்
தஞ்சனே தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற
நஞ்சனே ஞாலங்கொள் வான்குற ளாகிய
வஞ்சனே என்னுமெப் போதுமென் வாசகமே. 3.8.2
3092
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்
நாயகனே நாளிளந் திங்களைக் கோள்விடுத்து
வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்
தாயவனே என்று தடவுமென் கைகளே. 3.8.3
3093
கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை
வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி
பைகொள் பாம்பேறி உறைபர னேஉன்னை
மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே. 3.8.4
3094
கண்களால் காண வருங்கொலைன் றாசையால்
மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்
பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து
திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே. 3.8.5
3095
செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று
புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே
அவிவின்றி யாதரிக் கும்என தாவியே. 3.8.6
3096
ஆவியே. ஆரமு தே.என்னை ஆளுடை
தூவியம் புள்ளுடை யாய்.சுடர் நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்
கூவியும் காணப் பெறேனுன கோலமே. 3.8.7
3097
கோலமே. தாமரைக் கண்ணதோர் அஞ்சன
நீலமே நின்றென தாவியை யீர்கின்ற
சீலமே சென்றுசொல் லாதன முன்நிலாம்
காலமே உன்னையெந் நாள்கண்டு கொள்வனே? 3.8.8
3098
கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீரஓ ராயிரம் தோள்துணித்த
புள்வல்லாய் உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே? 3.8.9
3099
பொருந்திய மாமரு தின்னிடை போயவெம்
பெருந்தகாய் உன்கழல் காணிய பேதுற்று
வருந்திநான் வாசக மாலைகொண்டு உன்னையே
இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே. 3.8.10
3100
புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை
நலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்சொல்
வலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்ப்பத்து
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2) 3.8.11