திருவாய்மொழி ஐந்தாம் பத்து

நம்மாழ்வார்

திருவாய்மொழி ஐந்தாம் பத்து

5ம் பத்து 1ஆம் திருவாய்மொழி

3233

கையார் சக்கரத்தெங்கருமாணிக்கமே என்றென்று

பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி

மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க்கின்று காப்பாரார்

ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே (2) 5.1.1

 

3234

போனாய் மாமருதின் நடுவேயென்பொல் லாமணியே

தேனே இன்னமுதே என்றென்றேசில கூற்றுச்சொல்ல

தானே லெம்பெருமானவனென்னா கியொழிந்தான்

வானே மாநிலமேமற்றுமுற்றுமென் னுள்ளனவே. 5.1.2

 

3235

உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி

வள்ளல் மணிவண்ணனே என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்

கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்ந்தொழிந்தேன்

வெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே? 5.1.3

 

3236

என்கொள்வ னுன்னைவிட்டென் னும்வாசகங் கள்சொல்லியும்

வன்கள்வ னேன்மனத்தை வலித்துக்கண்ண நீர் கரந்து

நின்கண் நெருங்கவைத்தே என்தாவியை நீக்ககில்லேன்

என்கண் மலினமறுத் தென்னைக்கூவி யருளாய்கண்ணனே. 5.1.4

 

3237

கண்ணபி ரானைவிண்ணோர் கருமாணிக்கத் தையமுதை

நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோ ருடம்பிலிட்டு

திண்ண மழுந்தக்கட்டிப் பலசெய்வினை வன்கயிற்றால்

புண்ணை மறையவரிந் தெனைப்போரவைத் தாய்புறமே. 5.1.5

 

3238

புறமறக் கட்டிக்கொண்டிரு வல்வினை யார்குமைக்கும்

முறைமுறை யாக்கைபுகலொழியக் கண்டு கொண்டொழிந்தேன்

நிறமுடை நால்தடந்தோள் செய்யவாய்செய்ய தாமரைக்கண்

அறமுய லாழியங்கைக் கருமேனியம் மான்தன்னையே. 5.1.6

 

3239

அம்மா னாழிப்பிரான் அவனெவ்விடத் தான்?யானார்?

எம்மா பாவியர்க்கும்விதிவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்

கைம்மா துன்பொழித்தாய். என்றுகைதலை பூசலிட்டே

மெய்ம்மா லாயொழிந்தேனெம்பிரானுமென் மேலானே. 5.1.7

 

3240

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்

மாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்

சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்

மேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே. 5.1.8

 

3241

ஆவா ரார்துணையென்றலைநீர்க்கட லுளழுந்தும்

நாவாய் போல்பிறவிக் கடலுள்நின்று நான்துளங்க

தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும்

ஆவா வென்றருள் செய்தடியேனொடு மானானே. 5.1.9

 

3242

ஆனான் ஆளுடையானென்றஃதேகொண் டுகந்துவந்து

தானே யின்னருள்செய்தென்னைமுற்றவும் தானானான்

மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்

கானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே. 5.1.10

 

3243

கார்வண்ணன் கண்ணபிரான் கமலத்தடங் கண்ணன்தன்னை

ஏர்வள வொண்கழனிக்குருகூர்ச்சட கோபன்சொன்ன

சீர்வண்ண வொண் தமிழ்களிவையாயிரத் துளிப்பத்தும்

ஆர்வண்ணத் தாலுரைப்பார் அடிக்கீழ்புகு வார்பொலிந்தே. 5.1.11

Leave a Reply