திருவாய்மொழி பத்தாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

10ஆம் பத்து 2ஆம் திருவாய்மொழி

3794

கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும்

கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்

விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்

தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே. (2) 10.2.1

 

3795

இன்றுபோய்ப் புகுதிராகி லெழுமையும் ஏதம்சார

குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை

மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்

ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. 10.2.2

 

3796

ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான்

சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்

தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம்

பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே. 10.2.3

 

3797

பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து

வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்

நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி

பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. 10.2.4

 

3798

புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி

எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்

திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து

அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். 10.2.5

 

3799

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து

அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்

நமர்களோ. சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்

குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. 10.2.6

 

3800

துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும்

படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்

மடைத்தலை வாளைபாயும் வயலணியனந்தபுரம்

கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. 10.2.7

 

3801

கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை

இடவகை கொண்டதென்பர் எழிலணியனந்தபுரம்

படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண

நடமினோ நமர்களுள்ளீர். நாமுமக் கறியச்சொன்னோம். 10.2.8

 

3802

நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான

சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம்

தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு

வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. 10.2.9

 

3803

மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்

ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று

சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல

ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. 10.2.10.

 

3804

அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை

கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்

ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்

பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. (2) 10.2.11

Leave a Reply