பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து

பெரியாழ்வார்

 

பெரியாழ்வார் திருமொழி 1ம் பத்து 2ம் திருமொழி

 

இரண்டாம் திருமொழி – சீதக்கடல்

(கண்ணனது திருமேனியழகை பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

 

23:

சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி

கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த

பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்

பாதக்கமலங்கள் காணீரே

பவளவாயீர். வந்துகாணீரே. (2) 1.

 

24:

முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்

தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்

பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்

ஒத்திட்டிருந்தவா காணீரே

ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2.

 

25:

பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை

அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை

இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்

கணைக்கால்இருந்தவாகாணீரே

காரிகையீர். வந்துகாணீரே. 3.

 

26:

உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண

இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்

பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான்

முழந்தாள்இருந்தவாகாணீரே

முகிழ்முலையீர். வந்துகாணீரே. 4.

 

27:

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு

உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை

மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்

குறங்குவளைவந்துகாணீரே

குவிமுலையீர். வந்துகாணீரே. 5.

 

28:

மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை

சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்

அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்

முத்தமிருந்தவாகாணீரே

முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6.

 

29:

இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை

பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்

நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்

மருங்கும்இருந்தவாகாணீரே

வாணுதலீர். வந்துகாணீரே. 7.

 

30:

வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து

தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்

நந்தன்மதலைக்கு நன்றுமழகிய

உந்திஇருந்தவாகாணீரே

ஒளியிழையீர். வந்துகாணீரே. 8.

 

31:

அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி

மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த

பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த

உதரம்இருந்தவா காணீரே

ஒளிவளையீர். வந்துகாணீரே. 9.

 

32:

பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு

இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை

குருமாமணிப்பூண் குலாவித்திகழும்

திருமார்புஇருந்தவாகாணீரே

சேயிழையீர். வந்துகாணீரே. 10.

 

33:

நாள்களோர்நாலைந்து திங்களளவிலே

தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய்

வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்

தோள்கள்இருந்தவாகாணீரே

சுரிகுழலீர். வந்துகாணீரே. 11.

 

34:

மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற

செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை

நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய

கைத்தலங்கள்வந்துகாணீரே

கனங்குழையீர். வந்துகாணீரே. 12.

 

35:

வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்

கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு

அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய

கண்டம்இருந்தவாகாணீரே

காரிகையீர். வந்துகாணீரே. 13.

 

36:

எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு

அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர்

தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச்

செந்தொண்டைவாய்வந்துகாணீரே

சேயிழையீர். வந்துகாணீரே. 14.

 

37:

நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்

நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு

வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்

மூக்கும்இருந்தவாகாணீரே

மொய்குழலீர். வந்துகாணீரே. 15.

 

38:

விண்கொளமரர்கள் வேதனைதீர முன்

மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து

திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்

கண்கள்இருந்தவாகாணீரே

கனவளையீர். வந்துகாணீரே. 16.

 

39:

பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய

திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற

உருவுகரிய ஒளிமணிவண்ணன்

புருவம்இருந்தவாகாணீரே

பூண்முலையீர். வந்துகாணீரே. 17.

 

40:

மண்ணும்மலையும் கடலும்உலகேழும்

உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு

வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை

திண்ணம்இருந்தவாகாணீரே

சேயிழையீர். வந்துகாணீரே. 18.

 

41:

முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்

சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை

பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்

நெற்றிஇருந்தவாகாணீரே

நேரிழையீர். வந்துகாணீரே. 19.

 

42:

அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு

கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப

மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்

குழல்கள்இருந்தவாகாணீரே

குவிமுலையீர். வந்துகாணீரே. 20.

 

தரவு கொச்சகக்கலிப்பா

43:

சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன

திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்

விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்

உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. (2) 21.

 

Leave a Reply