பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து

பெரியாழ்வார்

மூன்றாம்பத்து- 1ஆம் திருமொழி

முதல்திருமொழி – தன்னேராயிரம்

(யசோதைப் பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக்

கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்)

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

223:

தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்

பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்

மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே.

அன்னே. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. (2) 1.

 

224:

பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால்

வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து

மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த

அன்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 2.

 

225:

கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகி

பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்

இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்

அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 3.

 

226:

மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய்

கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய்

பொய்யா. உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன்

ஐயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 4.

 

227:

முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி

கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி

மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற

அப்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 5.

 

228:

கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக் கற்றாநிறைமண்டித்தின்ன

விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே.

சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச் சூழ்வலைவைத்துத்திரியும்

அரம்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 6.

 

229:

மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி

சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச் சுற்றும்தொழநின்றசோதி.

பொருட்டாயமிலேன்எம்பெருமான். உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு

அரட்டா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 7.

 

230:

வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து

தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய்

கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன். வாழ்வில்லை நந்தன்

காளாய். உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 8.

 

231:

தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்

நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி

காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும்

ஆயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 9.

 

232:

தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச் சோலைத்தடம்கொண்டுபுக்கு

முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய்

ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்

அத்தா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 10.

 

233:

கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சி

ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம்

பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல்

ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே. 11.

 

 

Leave a Reply