பெரியாழ்வார் திருமொழி நான்காம் பத்து

பெரியாழ்வார்

 

இரண்டாம் திருமொழி – அலம்பாவெருட்டா

(திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு)

கலிநிலைத்துறை

338:

அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை

குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை

சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர்

சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. (2) 1.

 

339:

வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை

பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை

எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி

செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே. 2.

 

340:

தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை

தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை

எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை

அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே. 3.

 

341:

ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம்

கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை

வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி

தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 4.

 

342:

ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன்

ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை

கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன்

திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே. 5.

 

343:

ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை

சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை

ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும்

சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 6.

 

344:

மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்

முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை

கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன்

தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 7.

 

345:

குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச்

சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை

அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி

சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 8.

 

346:

சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு பூதங்கள்

அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை

இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான்

சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே. 9.

 

347:

எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார்

விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை

பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவாய்த்

தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 10.

 

348:

மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை

கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை

விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல்

கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. (2) 11.

 

Leave a Reply