4ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

நான்காம் பத்து

4ஆம் பத்து 1ஆம் திருமொழி

1248

போதலர்ந்த பொழில்சோலைப்

புறமெங்கும் பொருதிரைகள்

தாதுதிர வந்தலைக்கும்

தடமண்ணித் தென்கரைமேல்

மாதவன்றா னுறையுமிடம்

வயல்நாங்கை வரிவண்டு

தேதெனவென் றிசைபாடும்

திருத்தேவ னார்தொகையே (4.1.1)

 

1249

யாவருமா யாவையுமா

யெழில்வேதப் பொருள்களுமாய்

மூவருமாய் முதலாய

மூர்த்தியமர்ந் துறையுமிடம்,

மாவரும்திண் படைமன்னை

வென்றிகொள்வார் மன்னுநாங்கை

தேவரும்சென் றிறைஞ்சுபொழில்

திருத்தேவ னார்தொகையே (4.1.2)

 

1250

வானாடும் மண்ணாடும்

மற்றுள்ள பல்லுயிரும்

தானாய வெம்பெருமான்

தலைவனமர்ந் துறையுமிடம்,

ஆனாத பெருஞ்செல்வத்

தருமறையோர் நாங்கைதன்னுள்

தேனாரு மலர்பொழில்சூழ்

திருத்தேவ னார்தொகையே (4.1.3)

 

1251

இந்திரனு மிமையவரும்

முனிவர்களும் எழிலமைந்த

சந்தமலர்ச் சதுமுகனும்

கதிரவனும் சந்திரனும்,

எந்தையெமக் கருள், எனநின்

றருளுமிடம் எழில்நாங்கை

சுந்தரநல் பொழில்புடைசூழ்

திருத்தேவ னார்தொகையே (4.1.4)

 

1252

அண்டமுமிவ் வலைகடலு

மவனிகளும் குலவரையும்

உண்டபிரா னுறையுமிடம்

ஓளிமணிசந் தகில்கனகம்,

தெண்டிரைகள் வரத்திரட்டும்

திகழ்மண்ணித் தென்கரைமேல்,

திண்திறலார் பயில்நாங்கைத்

திருத்தேவ னார்தொகையே (4.1.5)

 

1253

ஞாலமெல்லா மமுதுசெய்து

நான்மறையும் தொடராத

பாலகனா யாலிலையில்

பள்ளிகொள்ளும் பரமனிடம்,

சாலிவளம் பெருகிவரும்

தடமண்ணித் தென்கரைமேல்

சேலுகளும் வயல்நாங்கைத்

திருத்தேவ னார்தொகையே (4.1.6)

 

1254

ஓடாத வாளரியி

னுருவாகி யிரணியனை

வாடாத வள்ளுகிரால்

பிளந்தளைந்த மாலதிடம்,

ஏடேறு பெருஞ்செல்வத்

தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,

சேடேறு பொழில்தழுவு

திருத்தேவ னார்தொகையே (4.1.7)

 

1255

வாராரு மிளங்கொங்கை

மைதிலியை மணம்புணர்வான்,

காரார்திண் சிலையிறுத்த

தனிக்காளை கருதுமிடம்

ஏராரும் பெருஞ்செல்வத்

தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,

சீராரும் மலர்பொழில்சூழ்

திருத்தேவ னார்தொகையே (4.1.8)

 

1256

கும்பமிகு மதயானை

பாகனொடும் குலைந்துவிழ

கொம்பதனைப் பறித்தெறிந்த

கூத்தனமர்ந் துறையுமிடம்,

வம்பவிழும் செண்பகத்தின்

மணங்கமழும் நாங்கைதன்னுள்,

செம்பொன்மதிள் பொழில்புடைசூழ்

திருத்தேவ னார்தொகையே (4.1.9)

 

1257

காரார்ந்த திருமேனிக்

கண்ணனமர்ந் துறையுமிடம்,

சீரார்ந்த பொழில்நாங்கைத்

திருத்தேவ னார்தொகைமேல்

கூரார்ந்த வேற்கலியன்

கூறுதமிழ் பத்தும்வல்லார்

எரார்ந்த வைகுந்தத்

திமையவரோ டிருப்பாரே (4.1.10)

Leave a Reply