5ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

5ஆம் பத்து 5ஆம் திருமொழி

1388

வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே .

வேங்கடமே . எங்கின் றாளால்,

மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண்

துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்

உருவாளன் வானவர்த முயிராளன்

ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட

திருவாளன் என்மகளைச் செய்தனகள்

எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (5.5.1)

 

1389

கலையாளா வகலல்குல் கனவளையும்

கையாளா என்செய் கேன்நான்,

விலையாளா வடியேனை வேண்டுதியோ

வேண்டாயோ? என்னும், மெய்ய

மலையாளன் வானவர்த்தம் தலையாளன்

மராமரமே ழெய்த வென்றிச்

சிலையாளன், என் மகளைச் செய்தனகள்

எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (5.5.2)

 

1390

மானாய மென்னோக்கி வாநெடுங்கண்

ணீர்மல்கும் வளையும் சோரும்,

தேனாய நறுந்துழா யலங்கலின்

திறம்பேசி யுறங்காள் காண்மின்,

கானாயன் கடிமனையில் தயிருண்டு

நெய்பருக நந்தன் பெற்ற

ஆனாயன், என் மகளைச் செய்தனகள்

அம்மனைமீரறிகி லேனே . (5.5.3)

 

1391

தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத்

தோடணையாள் தடமென் கொங்கை-

யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான்

திருவரங்க மெங்கே? என்னும்,

பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட

பெருவயிற்றன் பேசில் நங்காய்,

மாமாய னென்மகளைச் செய்தனகள்

மங்கைமீர் . மதிக்கி லேனே . (5.5.4)

 

1392

பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண்

மையெழுதாள் பூவை பேணாள்,

ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான்

திருவரங்க மெங்கே என்னும்,

நாண்மலராள் நாயகனாய் நாமறிய

வாய்ப்பாடி வளர்ந்த நம்பி,

ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள்

அம்மனைமீரறிகி லேனே . (5.5.5)

 

1393

தாதாடு வனமாலை தாரானோ

வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்,

யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான்

திருவரங்கம் என்னும், பூமேல்

மாதாளன் குடமாடி மதுசூதன்

மன்னர்க்காய் முன்னம் சென்ற

தூதாளன், என்மகளைச் செய்தனகள்

எங்ஙனம்நான் சொல்லு கேனே . (5.5.6)

 

1394

வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே

றாயினவா றெண்ணாள், எண்ணில்

பேராளன் பேரல்லால் பேசாள் இப்

பெண்பெற்றே னென்செய் கேன்நான்,

தாராளன் தண்குடந்தை நகராளன்

ஐவர்க்கா யமரி லுய்த்த

தேராளன், என்மகளைச் செய்தனகள்

எங்ஙனம்நான் செப்பு கேனே . (5.5.7)

 

1395

உறவாது மிலளென்றென் றொழியாது

பலரேசும் அலரா யிற்றால்,

மறவாதே யெப்பொழுதும் மாயவனே.

மாதவனே. என்கின் றளால்,

பிறவாத பேராளன் பெண்ணாளன்

மண்ணாளன் விண்ணோர் தங்கள்

அறவாளன், என்மகளைச் செய்தனகள்

அம்மனைமீரறிகி லேனே . (5.5.8)

 

1396

பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும்

பாலூட்டாள் பாவை பேணாள்,

வந்தானோ திருவரங்கன் வாரானோ

என்றென்றே வளையும் சோரும்,

சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு

தைத்திரியன் சாம வேதி,

அந்தோ.வந் தென்மகளைச் செய்தனகள்

அம்மனைமீரறிகி லேனே . (5.5.9)

 

1397

சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத்

தம்மானைச் சிந்தை செய்த,

நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத்

தாய்மொழிந்த வதனை, நேரார்

காலவேல் பரகாலன் கலிகன்றி

ஒலிமாலை கற்று வல்லார்,

மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப்

பொன்னுலகில் வாழ்வர் தாமே (5.5.10)

Leave a Reply