10ஆம் பத்து 5ஆம் திருமொழி
கலித்தாழிசை
1888
பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணை புக்குண்ண,
ஆங்கவ ளார்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி யிருந்து சிணுங்கி விளையாடும்
ஓங்கோத வண்ணனே. சப்பாணி
ஒளிமணி வண்ணனே. சப்பாணி (2). 10.5.1
1889
தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண்
டேயெம் பிராக்கள் இருநிலத் தெங்கள்தம்
ஆயர் அழக அடிகள் அரவிந்த
வாயவ னே. கொட்டாய் சப்பாணி
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.2
1890
தாம்மோர் உருட்டித் தயிர்நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வரென் றாய்ச்சியர் தாம்பினால்
தாமோ திரக்கையா லார்க்கத் தழும்பிருந்த
தாமோ தரா. கொட்டாய் சப்பாணி
தமரைக் கண்ணனே. சப்பாணி 10.5.3
1891
பெற்றார் தளைகழலப் பேர்ந்தங் கயலிடத்து
உற்றா ரொருவரு மின்றி யுலகினில்,
மற்றரு மஞ்சப்போய் வஞ்சப்பெண் நஞ்சுண்ட
கற்றாய னே.கொட்டாய் சப்பாணி
கார்வண்ண னே.கொட்டாய் சப்பாணி 10.5.4
1892
சோத்தென நின்னைத் தொழுவன் வரந்தர,
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய், பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றியோ ராயிரம் சப்பாணி
தடங்கைக ளால்கொட்டாய் சப்பாணி 10.5.5
1893
கேவல மன்றுன் வயிறு, வயிற்றுக்கு
நானவல் அப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீள்முடி நந்தன்றன் போரேறே,
கோவல னே. கொட்டாய் சப்பாணி
குடமா டீ.கொட்டாய் சப்பாணி. 10.5.6
1894
புள்ளினை வாய்பிளந்து பூங்குருந்தம் சாய்த்து,
துள்ளி விளயாடித் தூங்குறி வெண்ணெயை,
அள்ளிய கையா லடியேன் முலைநெருடும்
பிள்ளைப்பி ரான். கொட்டாய் சப்பாணி
பேய்முலை யுண்டானே. சப்பாணி. 10.5.7
1895
யாயும் பிறரும் அறியாத யாமத்து,
மாய வலவைப்பெண் வந்து முலைதர,
பேயென் றவளைப் பிடித்துயி ரையுண்ட,
வாயவ னே.கொட்டாய் சப்பாணி
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.8
1896
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி யுதைத்திட்டுத் தாயாய் வருவாளை,
மெள்ளத் தொடர்ந்து பிடித்தா ருயிருண்ட,
வள்ளலே. கொட்டாய் சப்பாணி
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.9
1897
காரார் புயல்கைக் கலிகன்றி மங்கையர்கோன்,
பேராளன் நெஞ்சில் பிரியா திடங்கொண்ட
சீராளா, செந்தா மரைக்கண்ணா. தண்டுழாய்த்
தாராளா, கொட்டாய் சப்பாணி
தடமார்வா கொட்டாய் சப்பாணி. 10.5.10