11ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

11ஆம் பத்து 7ஆம் திருமொழி

தரவு கொச்சக் கலிப்பா

2012

நீணாகம் சுற்றி நெடுவரைநட்டு, ஆழ்கடலைப்

பேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை,

பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை,

காணாதார் கண்ணென்றும் கண்ணல்ல கண்டாமே (2) 11.7.1

2013

நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண்,

தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை,

தோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை,

கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே 11.7.2

2014

தூயானைத் தூய மறையானை, தென்னாலி

மேயானை மேவா ளுயிருண் டமுதுண்ட

வாயானை, மாலை வணங்கி யவன்பெருமை,

பேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே 11.7.3

2015

கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த,

ஓடா அடலரியை உம்பரார் கோமனை,

தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால்

பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே 11.7.4

2016

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,

கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட

மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்

கையானை, கைதொழா கையல்ல கண்டாமே 11.7.5

2017

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்,

முள்ளார் முளரியும் ஆம்பலுமுன் கண்டக்கால்,

புள்ளாயோர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று,

உள்ளாதா ருள்ளத்தை யுள்ளமாக் கொள்ளோமே 11.7.6

2018

கனையார் கடலும் கருவிளையும் காயாவும்

அனையானை, அன்பினால் ஆர்வத்தால், என்றும்

சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று,

நினையாதார் நெஞ்சென்றும் செஞ்சல்ல கண்டாமே 11.7.7

2019

வெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர் வைத்த

உறியார் நறுவெண்ணெய் தானுகந் துண்ட

சிறியானை, செங்க ணெடியானைச் சிந்தித்

தறியாதார், என்றும் அறியாதார் கண்டாமே 11.7.8

2020

தேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை,

தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய்,

ஆன்விடையே ழன்றடர்த்தாற் காளானா ரல்லாதார்,

மானிடவர் அல்லரென் றென்மனத்தே வைத்தேனே (2) 11.7.9

2021

மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக்

கைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி,

கைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை,

ஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே (2) 11.7.10

Leave a Reply