திருச்சந்தவிருத்தம்

திருமழிசையாழ்வார்

772:
அரங்கனே.த ரங்கநீர்க லங்கவன்று குன்றுசூழ்,
மரங்கடேய மாநிலம்கு லுங்கமாசு ணம்சுலாய்,
நெருங்கநீ கடைந்தபோது நின்றசூர ரெஞ்செய்தார்,
குரங்கையா ளுகந்தவெந்தை. கூறுதேற வேறிதே. (21)

773:
பண்டுமின்று மேலுமாயொர் பாலனாகி ஞாலமேழ்,
உண்டுமண்டி யாலிலைத்து யின்றவாதி தேவனே,
வண்டுகிண்டு தண்டுழாய லங்கலாய்.க லந்தசீர்ப்,
புண்டரீக பாவைசேரு மார்ப.பூமி நாதனே. (22)

774:
வானிறத்தொர் சீயமாய்வ ளைந்தவாளெ யிற்றவன்,
ஊன்நிறத்து கிர்த்தலம ழுத்தினாய்.உ லாயசீர்,
நால்நிறத்த வேதநாவர் நல்லயோகி னால்வணங்கு,
பால்நிறக்க டல்கிடந்த பற்பநாப னல்லையே? (23)

775:
கங்கைநீர்ப யந்தபாத பங்கயத்தெம் மண்ணலே,
அங்கையாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்தினாய்,
சிங்கமாய தேவதேவ. தேனுலாவு மென்மலர்,
மங்கைமன்னி வாழுமார்ப. ஆழிமேனி மாயனே. (24)

776:
வரத்தினில்சி ரத்தைமிக்க வாளெயிற்று மற்றவன்,
உரத்தினில்க ரத்தைவைத்து கிர்த்தலத்தை யூன்றினாய்,
இரத்தநீயி தென்னபொய்யி ரந்தமண்வ யிற்றுளே
கரத்தி,உன்க ருத்தையாவர் காணவல்லர் கண்ணனே. (25)

777:
ஆணினோடு பெண்ணுமாகி யல்லவோடு நல்லவாய்,
ஊணொடோ சை யூறுமாகி யொன்றலாத மாயையாய்,
பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்,
காணிபேணும் மாணியாய்க்க ரந்துசென்ற கள்வனே. (26)

778:
விண்கடந்த சோதியாய்வி ளங்குஞான மூர்த்தியாய்,
பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே,
எண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்,
மண்கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே? (27)

779:
படைத்தபாரி டந்தளந்த துண்டுமிழ்ந்து பௌவநீர்,
படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்த பெற்றியோய்,
மிடைத்தமாலி மாலிமான்வி லங்குகால னூர்புக,
படைக்கலம் விடுத்தபல்ப டைத்தடக்கை மாயனே. (28)

780:
பரத்திலும்ப ரத்தையாதி பௌவநீர ணைக்கிடந்து,
உரத்திலும்மொ ருத்திதன்னை வைத்துகந்த தன்றியும்,
நரத்திலும்பி றத்திநாத ஞானமூர்த்தி யாயினாய்,
ஒருத்தரும்நி னாதுதன்மை யின்னதென்ன வல்லரே. (29)

781:
வானகம்மும் மண்ணாகம்மும் வெற்புமேழ்க டல்களும்,
போனகம்செய் தாலிலைத்து யின்றபுண்ட ரீகனே,
தேனகஞ்செய் தண்ணறும்ம லர்த்துழாய்நன் மாலையாய்,
கூனகம்பு கத்தெறித்த கொற்றவில்லி யல்லையே? (30)

Leave a Reply