திருமாலை

தொண்டரடிப்பொடியார்

ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த

 

 

திருமாலை

 

 

திருமாலை தனியன்


திருவரங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது

 

மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.

 

ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த

 

 

திருமாலை

872:
காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே,
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வ.நின் நாமம் கற்ற,
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே. (2) (1)

873:
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே. என்னும்,
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. (2) (2)

874:
வேதநூல் பிராயம் நூறுமனிசர்தாம் புகுவ ரேலும்,
பாதியு முறங்கிப் போகும்நின்றதில் பதினை யாண்டு,
பேதைபா லகன தாகும்பிணிபசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன்அரங்கமா நகரு ளானே. (3)

875:
மொய்த்தவல் வினையுள் நின்றுமூன்றெழுத் துடைய பேரால்,
கத்திர பந்து மன்றேபராங்கதி கண்டு கொண்டான்,
இத்தனை யடிய ரானார்க்கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே. (4)

876:
பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது உடலுக்கே கரைந்து நைந்து,
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடி,
தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்கு மாறே. (5)

877:
மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு,
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்,
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே,
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே. (6)

878:
புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்,
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்,
தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா,
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவ னாவான். (7)

879:
வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே. (8)

880:
மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்,
உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்,
அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே. (9)

881:
நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே,
காட்டினான் திருவ ரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க,
சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே. (10)

 

Leave a Reply