தினசரி ஒரு வேத வாக்கியம்: 43. பூமியைத் தாங்கும் யக்ஞம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

veda vaakyam
vedha vaakyam

43. பூமியைத் தாங்கும் யக்ஞம்.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்  

“யஞ்ஜா: ப்ருதிவீம் தாரயந்தி” – அதர்வணவேதம்.

“யக்ஞங்கள் பூமியைத் தாங்குகின்றன”.

பாரத தேசம் யக்ஞ பூமி. வேதங்களும் பாரதிய கலாச்சாரமும் யக்ஞத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கின்றன.

பகவத்கீதையின்படி – ஸ்ருஷ்டிக்கு முன்பே யக்ஞங்களால் மனிதர்களைப் படைத்து யக்ஞங்கள் மூலம் தேவதைகளை வணங்கும்படி பகவான் ஆணையிட்டார். தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் யக்ஞங்களே ஊடகம்.

இயற்கையை இயக்கும் தெய்வீக சக்திகளே தேவர்கள். அவர்களை யக்ஞங்களால் வழிபடும் நாகரீகத்தை பாரததேசம் சாதித்தது. இது உலக நியமம்.

பிரதானமாக நாம் மூவருக்கு கடன் பட்டுள்ளோம்.
“ருணைஸ்த்ரி பிர்த்விஜோ ஜாதோ 
தேவர்ஷி பித்ரூணம் ப்ரபோ
யஞ்ஜாத்யயன புத்ரைஸ்தா
ன்யநிஸ்தீர்ய த்யஜன் பதேத் !!”

“தேவ ருணம், ருஷி ருணம், பித்ரு ருணம் – மூன்றும் ஒவ்வொரு மனிதனும் தீர்க்க வேண்டிய கடன்கள். யக்ஞகளால் தேவர்களின் கடன் தீர்க்கப்படுகிறது. அத்யயனங்களின் மூலம் ருஷிகளின் கடனும், நல்ல பிள்ளைகள் மூலம் பித்ருக்களின் கடனும் தீர்க்கப்படுகின்றன.

ஒவ்வொருவரும் அவரவருக்கு தகுந்த விதத்தில் யக்ஞங்களை கடைபிடிக்கவேண்டும். இறை வழிபாடு, ஜபம் – இவை முக்கியமான யக்ஞங்கள்.

எத்தனைதான் கோரிக்கையற்றவர் ஆனாலும், விராகியானாலும்  காமிய கர்மாக்களை விடலாமே தவிர, யக்ஞ கர்மாக்களை விடக்கூடாது.

“யஞ்ஜதானதப: கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவதத் !
யஞ்ஜோதானம் தபஸ்சைவ பாவனானி மனீஷிணாம் !!”
-கீதை.

“யக்ஞம், தானம், தவம், கடமைகள் – இவை அறிவுடையவர்களின் உடலைத் தூய்மைப்படுத்தும். தூய்மையான சித்தத்திற்கு ஞானமும் கைவல்யமும் கிட்டும்”.

“நாயம் லோகோஸ்த்ய யஞ்ஜஸ்ய குதோன்ய: குருசத்தம!!” என்பது கீதாசார்யன் அறிவிப்பு. யக்ஞம் இல்லாதவனுக்கு இகமும் இல்லை. பரமும் இல்லை. 

“அயஞ்ஜியோ ஹதவர்சா பவதி !!”- யக்ஞம் செய்யாதவனுக்கு வர்ச்சஸ் அழியும் என்று அதர்வண வேதம் எச்சரிக்கிறது.

“தேவபித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதிதவ்யம்” என்று வேதம் ஆணையிடுகிறது. “தேவ, பித்ரு காரியங்களில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது” என்று  மானுட வாழ்வின் வழிமுறையை நிர்ணயித்துள்ளது.

ஆத்ம ஞானிகள் ஆகிவிட்டோம் என்ற பிரமையில் அரைகுறை ஞானத்தோடு சிலர் நித்திய, நைமித்திக கர்மாக்களை விட்டு விடுகிறார்கள். அவர்களுக்கு ஞானம் சித்திக்காது. அதோடு இகத்திலும் பரத்திலும் உய்வு ஏற்படாது.

ஏதாவது ஒரு சாஸ்திர சம்மதத்தோடாவது கூடிய உபாசனை முதலான நியமங்களையும் சத்தியம், சௌசம் போன்றவற்றையும் கடைபிடிப்பது தவம்.

யக்ஞங்களோடு கூட இவற்றையும் கடைபிடிக்க வேண்டும். அதேபோல் கர்மம், பந்தம் போன்றவற்றின் விமோசனத்திற்கு சுயமாக சம்பாதித்த திரவியத்தால் சாஸ்திரத்தில் கூறிய தானங்களைச் செய்ய வேண்டும். 

யக்ஞம், தானம், தவம் இவற்றோடு கூடிய தெய்வபக்தியோ, ஆத்ம  விசாரணையோ மோட்சத்திற்கு காரணமாகின்றன.  மோட்ச விருப்பமுள்ளவர்கள் பலனில் பற்றற்று இந்த மூன்றையும் கடைபிடிப்பர். சாமானியர்கள் பலனில் பற்றோடு இவற்றை செய்யலாம்.

 “ந புத்தி பேதம் ஜனயேத் அஞ்ஜானம் கர்ம சங்கினாம்” – பெருமைக்காக கர்மாக்களை செய்பவர்களை ஆத்ம ஞானம் என்ற பெயரோடு குழப்ப வேண்டாம் என்பது ஸ்ரீகிருஷ்ண வசனம்.

“அயஞ்ஜோ ந ச பூதாத்ம நஸ்யதி சின்ன பர்ணவத்!!” யக்ஞம் பலமில்லாதவன் பவித்திரம் ஆகமாட்டான். உதிர்ந்த  இலையைப் போல நிலையிலிருந்து வீழ்வான் என்பது சாஸ்திரம் வசனம். இந்த சாசுவதமான சத்தியங்களை மறக்கக்கூடாது.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 43. பூமியைத் தாங்கும் யக்ஞம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply