ஸ்ரீ ராமானுஜர்: வாழ்வும் வாக்கும்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
sriramanuja - Dhinasari Tamil

ஸ்ரீ ராமானுஜர் (1017 – 1137)
கட்டுரை: திரு. ராகவன்

பாரத நாட்டில் நமது தர்மமானது தாழ்ந்த நிலைக்கு சென்ற சமயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு சமுதாயத்தை வழி நடத்த வந்த ஹிந்து சிந்தனையை, உயர்ந்த தத்துவங்களை மீண்டும் புத்தெழுச்சி பெறுவதற்கு அவதரித்த மூவரில் ஒருவரானவர் ஸ்ரீமத் பகவத் ராமானுஜர் ஆவார்.

கலியுகம் 4118 (கிபி 1017) சித்திரை மாதம் சுக்லபக்ஷ பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை தினத்தன்று ஸ்ரீமத் ராமானுஜர் அவதரித்தார். ஐந்து ஆச்சார்யர்களில் ஒருவரான திருமலைநம்பி, இவருக்கு இளையாழ்வார் என்று நாமமிட்டார். காஞ்சிபுரத்தில்  யாதவபிரகாசரிடம் கல்வி பயின்றார்.

ஸ்ரீராமானுஜரின் கல்வி மேன்மையினால் பொறாமை கொண்டு அவரை கொல்ல நினைத்து அவரது கல்விக்கு காரணமான யாதவபிரகாசரிடம் இருந்து அவரை காஞ்சி தேவப்பெருமான் காப்பாற்றினார். பூந்தமல்லியிலிருந்து நடைபயணமாக வந்து காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப்பெருமாள், பேரருளாளன், தேவராஜம் பெருமானுக்கு பூக்கட்டிக்கொண்டு வந்து, ஆலவட்டம் (விசிறி) வீசி, பெருமாளுடன் பேசுகின்ற பெரும் பாக்கியம் பெற்ற திருக்கச்சி நம்பியை தனது ஆசார்யராய் ஆக வேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீராமானுஜர்.

வைணவத்திற்கு ஜாதி ஒரு தடையில்லை, தூய்மையான மனதுடன் சரணாகதி செய்கின்ற ஒவ்வொரு ஹிந்துவும் மோக்ஷம் பெறும் அஷ்டோத்ர மந்திரமான “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமந்திரத்தை தனது ஆசார்யரின் வார்த்தையை மீறி, தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை எல்லோருக்கும் மோக்ஷம் அளிக்கும் திருமந்திரத்தை கோபுர உச்சியிலிருந்து அன்பர்களுக்கு உபதேசித்த உத்தமர் ஸ்ரீராமானுஜர்.

தான் மிகவும் உயர்ந்தவராக கருதும் பரம பாகவதரான திருக்கச்சி நம்பி உண்ட உணவை தான் உண்ண விரும்பி அதற்கு பங்கம் விளைவித்த தனது ஆசாரமான மனைவியை விட்டு பிரிந்து சன்னியாசம் மேற்கொண்டு, தனது தூய வாழ்க்கையை வைணவத்திற்காக அர்பணித்தார்.

உயர்ந்த, சரணாகதி தத்துவத்தை போதிக்கும் தத்துவமான விசிஷ்டாத்வைதத்தை நாடு முழுவதும் பரவுவதற்காக சமஸ்கிருத நூல்களை இயற்றினார்.  வேதத்திற்கு ஒப்பான ஆழ்வார்கள் அருளிய தமிழ் மறை திவ்ய பிரபந்தங்களை எல்லா வைணவ திருத்தலங்களில் எம்பெருமான் முன்பு கோஷ்டியாக பாடுகின்ற முறையை ஸ்ரீரங்கத்திலிருந்து ஆரம்பித்தார்.

தனது ஆச்சாரியருக்காக தங்களையே சமர்ப்பித்த மிக உயர்ந்த ஆழ்வார்கள் வரிசையில் கூரத்தாழ்வார், முதலியாண்டார் என்ற இரண்டு பெருமை வாய்ந்த சிஷ்ய பரம்பரை உடையவர். பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்யானம் எழுதினபடியால் பாஷ்யக்காரர் என்ற பெருமை பெற்றார். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை மீண்டும் உலகில் நாட்டி, விசிஷ்டாத்வைத தத்துவத்தின் மூலம், சாதாரண மானிடர்களையும் உய்விக்க வழிவகை தந்த பெருமைக்கு உரியவர் ஸ்ரீராமானுஜர்.

வேதாந்த சங்க்ரஹ, ஸ்ரீ பாஷ்யம், பகவத்கீதை பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்தகாரர், கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம்), ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம், நித்ய க்ரந்தம் என்றும் பல தத்துவ நூல்களை உலகுக்கு தந்தார் ஸ்ரீராமானுஜர்.

ஹிந்து தர்மத்தின் உயர்ந்த சிந்தனைகள் இன்றும் உயிரோட்டமாக இருப்பதற்கு அடித்தளம் நாட்டிய பெருந்தகைகளுல் ஒருவர் ஸ்ரீராமானுஜர். பெரிய ஒரு நீரோட்டமான வைணவ பரம்பரை இன்றளவும், ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கட்டிக்காத்து வருவது ஸ்ரீ ராமானுஜருடைய உயர்ந்த தத்துவத்தினால் ஈர்க்கப்பட்ட பல உயர்ந்த ஆசார்ய பரம்பரைகளால் மட்டுமே காரணம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply