அறப்பளீஸ்வர சதகம்: புகழ்ச்சி..!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

புகழ்ச்சி

பருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,
பாரில்மறை யாத நிதியம்,
பரிதிகண் டலராத நிலவுகண் டுலராத
பண்புடைய பங்கே ருகம்
கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்
கானில் உறை யாத சீயம்;
கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்
காசினியில் அருமை யாகும்!
தெரியவுரை செய்யின்மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,
சீரிதயம், ஈகை, வதனம்,
திடமான வீரம், இவை யென்றறிகு வார்கள்! இச்
செகமெலாம் கொண்டா டவே
அருள் கற்ப தருஎன்ன ஓங்கிடும் தான துரை
ஆகும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அருள் மிகுந்த கற்பகத் தருவைப்போல,
ஓங்கிடும் உயர்ந்த கொடைத்தலைவன் ஆகிய, எமது அருமை தேவனே!,
உண்ணாத அமுதம்,
ஒருவராற் செய்யப்படாத அணிகலம்; உலகில் அழியாத செல்வம், ஞாயிற்றைக் கண்டு மலராததும் திங்களைக் கண்டு
வாடாததும் ஆகிய தன்மையுடைய தாமரை, கருநிறம் பெறாது பெய்யும் முகில், கலைகள் குறையாத
திங்கள், கொடிய காட்டில் வாழாத சிங்கம்,
நினைவிற்கு எட்டாத இப்பண்புகள் யாவும் உடையவர் இவ்வுலகிற் கிடைப்பது அருமையாகும், (எனினும், இவைகட்கு ஒப்பாக) விளங்க எடுத்துக் கூறினால் (முறையே), உரையும், புகழும், வளரும் கல்வியும், சிறப்புள்ள
உள்ளமும், கொடையும், முகமும், அசையாத வீரமும் ஆகிய இவை என்று
தெரிந்துகொள்வார்கள்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply