காளிங்கனும் கண்ணனும்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
kalinganarthana - Dhinasari Tamil

காளிங்கனும் கண்ணனும்
கே.ஜி. ராமலிங்கம்

“விற்பெரும் தடந்தோள் வீர!
வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நற்பெரும் தவத்தள் ஆய
நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற்பிறப்பு என்பது ஒன்றும்
இரும்பொறை என்பது ஒன்றும்
கற்பெனப் படுவதொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்”

இராமன் உள்ளம் பூரித்தான்; உவகைக்கு எல்லை இல்லை…. ஆமாம் இது ராமாயணத்தில் கம்பரின் வரிகள்,
இதே மாதிரி பூரித்துப் போன அனுபவம் யமுனை நதிக்கும் வந்ததாம்…. ஆம்.. எப்போது என்று கேட்டால்…. கண்ணன் பிறந்த இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது, வசுதேவர் கண்ணனை கூடையில் வைத்துக் கொண்டு நந்த கோபர் வீட்டிற்கு இரவோடு இரவாக யமுனை நதியை கடந்து செல்லும் நேரத்தில் யமுனா தேவிக்கு கண்ணனின் பாதம் ஸ்பரிசம் செய்ய ஆசை ஏற்பட்டது, அதை நிறைவேற்ற அவள் தன் பிரவாஹத்தை அதிகரித்து வசுதேவரின் கழுத்து வரை கொண்டு வந்த சமயத்தில் கண்ணனின் பாதம் யமுனை நதியின் நீர் பட்டதும் அவள் கண்ணனை வணங்கி தன் பிரவாஹத்தை குறைத்து கொண்டு விட்டாள்…… பி. ஆர். சோப்ராவின் மகாபாரத சீரியலில் இந்த காட்சியை அருமையாக படமாக்கி இருப்பார்கள்.
அதே மாதிரி காளிங்கனும்…..

முன்னொரு சமயம் ஸௌபரி என்ற முனிவர், திருமாலைத் தரிசிக்க ஆவல் கொண்டு, பன்னிரண்டு வருடம் காளிந்தி நதியின் உள்ளே நீரில் தவம் செய்தார். அப்போது நீரில் இருந்த மீன்கூட்டங்களிடம் அன்பு கொண்டார். ஒரு நாள் எதிரே கருடன் வருவதைக் கண்டார். கருடன் பசியால் மீன்களைத் தின்பதைக் கண்டார். துயரமடைந்த அவர் ‘இங்கு உள்ள ஏதாவது ஒரு ஜீவனைத் தின்றால் உடனே உயிரிழப்பாய்’ என்று கருடனைச் சபித்தார்.

காளியன் என்ற பாம்பு, கருடனுக்கு வைக்கப்பட்ட பாகங்களைத் தின்று வந்தது. கோபமடைந்த கருடன், தன் இறக்கைகளால் காளியனை அடித்து விரட்டினான். காளியனும் கருடன் வரமுடியாத அந்த காளிந்தி மடுவிற்குச் சென்றான். அந்த மடுவில் காளியன் புகுந்ததும், அதன் விஷமான மூச்சுக் காற்றால் மடுவின் கரையிலுள்ள மரங்கள் கருகின. மடுவிற்கு மேல் வானில் பறக்கும் பறவைகளும் இறந்து விழுந்தன.

ஒரு முறை, இடையர்களும், கண்ணனும், பலராமனை விட்டுத் தனியே யமுனை நதியின் கரையில் விளையாடச் சென்றார்கள். கடுமையான வெய்யிலினால் துன்பமடைந்த இடையர்களும், பசுக்களும் அந்த மடுவின் விஷ நீரைப் பருகினார்கள். உடனே உயிரிழந்து கீழே விழுந்தார்கள். கண்ணன் கருணையுடன் அவர்கள் அருகே வந்து, அமிர்தமாகிற தன்னுடைய கடைக்கண் பார்வையால் அவர்களைப் பிழைக்கச் செய்தான். உயிர் பிழைத்த அவர்கள், இந்த ஆனந்தம் எங்கிருந்து உண்டாகிறது? என்று கூறிக் கொண்டு எதிரில் கண்ணனைக் கண்டார்கள். கண்ணனே காரணம் என்று உணர்ந்து அவனைக் கட்டித் தழுவினர்.

நொடிப்பொழுதில் பிழைத்த பசுக்களும், ஆனந்தமுடன் மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே கண்ணனைச் சுற்றி வந்தன. ‘எங்கள் தேகத்தில் மயிர்க்கூச்சலுடன், சொல்லமுடியாத ஆனந்தம் உண்டாகிறது. இந்த விஷவேகம் ஆச்சர்யமாக உள்ளது’ என்று கூறி இடையர்கள் வணங்கி வேண்டினார்கள்.

கண்ணன், அந்தப் பாம்பின் கொடிய செயலைத் தடுக்க முடிவு செய்து, மடுவின் கரையில் விஷக்காற்றால் வாடி நின்ற கடம்பமரத்தின்மீது ஏறினான். சிவந்த மென்மையான பாதங்களால் மரத்தின் மீது ஏறி, அலைகள் நிறைந்த அந்த மடுவில் உயரத்திலிருந்து குதித்தான்.

கண்ணன் குதித்ததும், அவனுடைய பாரத்தால் அலைகள் உயரே கிளம்பி, மிகுந்த ஓசையுடன், கரைகளை மூழ்கடித்தது. அந்த ஓசையைக் கேட்ட காளியன் கோபத்துடன் நீரிலிருந்து வெளியே வந்தான். ஆயிரக்கணக்கான அவன் எடுத்த தலைகளிலிருந்து கொடிய விஷம் பெருக்கெடுத்து ஓட, காளியன் ஒரு பெரிய மலை போலத் தோற்றமளித்தான்.

பயங்கரமான விஷ மூச்சை விட்டுக் கொண்டு, கண்ணனை அசையாமல் இருக்கும்படி சுற்றிக் கொண்டான். கரையில் நின்ற இடையர்களும், பசுக்களும், சிறுவர்களும் கண்ணனைக் காணாமல் துயரமடைந்தனர். கோபர்களும், பல கெட்ட சகுனங்களைக் கண்டு யமுனைக் கரைக்கு விரைந்து வந்தனர். கண்ணனுடைய நிலையைக் கண்ட அனைவரும் பிராணனை விட நினைத்தார்கள்.

அப்போது கண்ணன், அப்பாம்பின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, புன்சிரிப்புடன் ஆற்றிலிருந்து வெளியே வந்தான். மென்மையான சிறிய தன்னுடைய கால்களால் அப்பாம்பின் தலைகளில் மேல் ஏறி நடனம் செய்தான். அவனுடைய கால்களில் அணிந்திருந்த கொலுசுகளும், கைவளைகளும் அந்த நடனத்திற்கு ஏற்றவாறு சப்தித்தன.

காளியனுடைய படமெடுத்த தலைகளின் மீது ஏறி நடனம் செய்தான். கண்ணா என் தலைகள் எல்லாவற்றிலும் உன் பாதம் படவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஒவ்வொரு தலைகளாக உருவாக்க, காளியனுடைய ஒவ்வொரு தலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொங்கியது. தொங்கிய தலைகளை விட்டுவிட்டு, மீண்டும் படமெடுத்த தலையின் மீது ஏறி, தனது தாமரைப் பாதங்களால் தாளமிட்டுக் கொண்டு நர்த்தனமாடினான்.

அந்த நடனத்தைக் கண்ட கோபர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆகாயத்தில், தேவ மங்கையர் துந்துபி வாசிக்க, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். முனிவர்கள் ஆனந்தத்துடன் துதித்தனர். இவ்வாறு கண்ணன் ஆடியதும், காளியனுடைய படமெடுத்த தலைகள் தொங்கி, காளியன் உடலில் ரத்தம் வடிந்தது. அவன் சோர்ந்து விழுந்தான்.

அப்போது, மடுவின் உள்ளே இருந்த காளியனின் மனைவியர் கண்ணனை சரணடைந்து, “எங்கள் கணவரை விட்டுவிடுங்கள்” என்று கூறி, பலவித ஸ்தோத்திரங்களால் கண்ணனைத் துதிக்க, காளியனும் துதித்தான். கண்ணன் அவர்கள் மீது இரக்கம் கொண்டான். அவர்களிடம்,” உங்களை நான் கொல்ல மாட்டேன். இந்த மடுவில் குழந்தைகளும், பசுக்களும் நீர் அருந்த வருவதால், நீங்கள் இந்த மடுவை விட்டு சமுத்திரத்தில் இருக்கும் ரமணகம் என்னும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு கருடன் உங்களைத் தொந்திரவு செய்ய மாட்டான்” என்று கூறினான். இவ்வாறு சொன்னதும், காளியன் மற்ற பாம்புகளுடன் ரமணகத்திற்குப் புறப்பட்டான். காளியனின் மனைவியர் கண்ணனுக்கு விலையுயர்ந்த ரத்தினங்களையும், ஜொலிக்கும் ஆபரணங்களையும், பட்டுத் துணிகளையும் கொடுத்தனர்.

அவற்றை அணிந்துகொண்டு ஆனந்தத்துடன் காளிந்தி மடுவின் கரையில் நிற்கும் சுற்றத்தாரிடம் வந்தான். தன்னுடைய அழகான கடைக்கண் கடாக்ஷத்தால், அங்குள்ளோரின் தாபங்களைப் போக்கி மகிழ்வித்தான். கண்ணனைக் கண்ட ஆயர்கள், அவனைத் தோளில் சுமந்துகொண்டனர். பசுக்களும், ஆனந்தமுடன் மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே கண்ணனைச் சுற்றி வந்தன. இடைச்சிறுவர்கள் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டு ஆடிப் பாடி ஆனந்தித்தனர்.

எத்தனை வடிவம் எடுத்தாலும் அத்தனை வடிவிலும் கண்ணனைப் போல் ஒரு பேரழகன் இருக்க முடியாது. கண்ணன் என்றாலே அழகுதான்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply