புரட்டாசி ஸ்பெஷல்:: புரசைவாக்கத்தில் அருள்புரியும் பெருமாள்

செய்திகள்

இம்மாதிரி பக்தர்களுக்காகவே ​ நாட்டின் பல பகுதிகளில் ‘ஸ்ரீநிவாஸர் திருக்கோயில்கள்’ பல அமைந்துள்ளன.​ ​ ​ தமிழகத் தலைநகரான ​ சென்னை நகரிலேயே பல ஸ்ரீநிவாஸர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.​ அவற்றில் ஒன்றுதான் புரசைவாக்கத்தில்,​​ வெள்ளாளத் தெருவில் அமைந்திருக்கும் ஓர் திருக்கோயில்.

‘புரசைவாக்கம்’ முன்னதாக ‘பலசெபுரி’ என்ற பெயருடன் இருந்தது.​ இங்கு வசித்து வந்த ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களால் அமைக்கப்பட்ட இக்கோயில் சுமார் 400 வருட வரலாறுடையது.​ எத்தனையோ அற்புதங்களை இந்த ஸ்ரீநிவாஸர் நிகழ்த்தியுள்ளார்.​ இவை ஒரு புறமிருக்க,​​ இந்தக் கோயில் உருவான வரலாற்றை காண்போம்.

இங்கு வாழ்ந்து கொண்டிருந்த ஓர் திருமாலடியாரின் கனவில் திருவேங்கடவன்​​ தோன்றினார்;​ தனக்கு ஒரு கோயில் இப்பகுதியில் அமைக்கச் சொல்லி அருள் வாக்களித்தார்.

கனவு கலைந்து விழித்தெழுந்த அவ்வடியார்,​​ கனவைப் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தபோது அவரருகில் ஓர் மணி ​(ஆலயமணி-பூஜைக்கு உபயோகப்படும் அளவில்)​ இருந்ததைக் கண்டு வியந்தார்;​ ‘கனவிற்கும் இந்த மணிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?’ என்பதைப் பற்றியும் யோசிக்கலானார்.​ தனக்குத் தெரிந்த ஒரு வயோதிக அந்தணரிடம் விவரத்தைக் கூறினார்.

அப்பெரியவர் ”திருவேங்கடமுடையானின் ‘மணி’யின் அம்சமாகப் பிறந்த சுவாமி தேசிகனின் அருளால் கோயில் அமைக்கலாம்” என்று கூறினார்.​ ​ அதன்படி,​​ கனவில் பெருமாளை தரிசித்த அடியவர்,​​ தற்போது இருக்கும் இடத்தில் ஸ்ரீநிவாஸருக்கு கோயில் எழுப்பினார்.

ஸ்ரீஅலர்மேல் மங்கைத் தாயார்,​​ ஆண்டாள்,​​ பெரியாழ்வார்,​​ சுவாமி ராமானுஜர் மற்றும் சுவாமி தேசிகன் இவர்களின் சந்நிதிகளையும் அமைத்து,​​ நித்திய பூஜைகளை ஏற்படுத்தினார்.

அத்திருக்கோயிலே படிப்படியாக வளர்ந்து,​​ தற்போது அனுமார்,​​ சக்கரத்தாழ்வார்,​​ சத்திய நாராயணப் பெருமாள் மற்றும் லஷ்மி ஹயக்ரீவர் சந்நிதிகளுடன் சேர்ந்து பொலிவுடன் காட்சியளிக்கிறது.​ இத்திருக்கோயிலில் தினம் தினம் திருவிழாதான் என்றபடி ஏதாவது வைபவங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன.

ஆலயத்தின் முக்கியத் திருவிழாக்கள்:​ புரட்டாசியில் சனிக்கிழமைகளில் நடக்கும் விசேஷ பூஜைகள்,​​ தாயார் நவராத்திரி உத்ஸவம்,​​ மற்றும் பிரதி பௌர்ணமியில்,​​ சுவாமி தேசிகன் அவதார உற்சவம்,​​ சத்திய ​ நாராயணபூஜை ஆகியன.​ ​​ ​ ​ ​ ​ புரசை ஸ்ரீநிவாஸர் ஆலயத்தை,​​ ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் எழுந்தருளியுள்ள திருவிடந்தையின் அபிமானத் தலம் என்பர்.

புரசை ஆலயத்துக்கு ஸ்ரீஅஹோபில மடம்,​​ ஸ்ரீமத் ஆண்டவன்,​​ மைசூர் பரகாலமடம் ஜீயர் சுவாமிகள் மற்றும் காஞ்சிப் பெரியவர்கள் விஜயம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.​ ​ ​​ ​ ​ ​ இக்கோயிலில் வைகானஸ ஆகம சாஸ்திரப்படியும்,​​ வடகலை சம்பிரதாய வழி முறைகளிலும் ஆராதனைகள் நடந்து வருகின்றன.

சாஸ்திர முறைப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹா ஸம்ப்ரோஷணம் நடைபெற்று வருகிறது.​ கடந்த 2006ல் நடைபெற்ற ஸம்ப்ரோஷன வைபவத்தில்,​​ ‘ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள்’ கலந்து கொண்டு சிறப்பித்தார்.​ ​​ ​ ​ ​ 12 ஆண்டுக்கு ஒரு முறை புரட்டாசியில் இரண்டு திருவோண நஷத்திரம் சம்பவிக்கும்.​ இதை,​​ ‘மாமாங்க மாதம்’ என்பர்.

பெருமாளுக்கும்,​​ சுவாமி தேசிகனுக்கும் திருவோண நஷத்திரமாகையால் முதலில் வரும் திருவோண நாளை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.​ ​​ ​ ​ ​ வசதிப்படுபவர்கள் அனைவரும் அவசியம் இத்திருக்கோயிலுக்குச் சென்று,​​ திருவேங்கடமுடையானின் திருவருளைப் பெற வேண்டும்.

படைப்பும்,​​ படங்களும்:​ எம்.என்.​ ஸ்ரீனிவாஸன்

News source :: www.dinamani.com

Leave a Reply