ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தி: கோயில் கொண்ட இடங்கள்..!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
dhathathreyar - 1

தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது.

கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் ! இவரை முறையாக உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும். மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை!

இமயமலையில் ஆத்ரேய மலைப்பகுதியில் உள்ள குகைஒன்றில், தத்தாத்ரேயர் பல ஆண்டுகள் தங்கி தவமியற்றியதாக கூறப்படுகிறது. எனவே அந்தக் குகை `தத்தர் குகை’ என்று அழைக்கப்படுகிறது.

வடக்கே ஜூனகாட் செல்லும் வழியில் உள்ளது, கிர்நார் மலை. இந்த மலையின் உச்சியில் தத்தாத்ரேயர் சரண பாதுகை அமைந்துள்ளது. இந்த இடத்தை அடைவதற்கு மலையின் மீது 10 ஆயிரம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் உள்ள மிகப் பெரிய மலை உச்சி ஒன்றில் (கடல் மட்டத்திலிருந்து 5650 அடி உயரம்) தத்தாத்ரேயர் ஆலயம் இருக்கிறது. இங்குள்ள சன்னிதியின் உயரம் மொத்தமே இரண்டு அடிதான். அதனுள் மூன்று முக தத்தாத்ரேயர் சிலையும், அவரது பாதச்சுவடுகளும் உள்ளன.

தத்தாத்ரேயர் ஸஹ்ய மலையில் வெகுகாலம் தவமிருந்தார். அதுவே தத்தஷேத்திரம்’ என்றும், தற்போதுமகாபலேஷ்வர்’ என்றும் விளங்கி வருகிறது.

குல்பர்காவுக்கு அருகே காங்காப்பூரில் மூன்று முகமுடைய தத்தாத்ரேயர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரை இங்குள்ள ஜன்னல் கதவைத் திறந்துதான் தரிசனம் செய்ய வேண்டும்.

மராட்டியத்தில் கிருஷ்ணா நதி தீரத்தில் அமைந்திருக்கும் நரசிம்ம வாடியில், தத்தாத்ரேயர் சன்னிதி உள்ளது. இங்குள்ள பாதுகைகளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் குருமூர்த்தி என்று கூறுவது, தத்தாத்ரேயரையே குறிக்கும். அங்கு தத்தகுரு ஆராதனை அதிக அளவில் உள்ளது.

ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஔதும்பரம் என்ற இடம் தத்தஷேத்திரமாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் தத்தகிரி குகாலயம் என்ற இடத்தில் தத்தாத்ரேயர் சிலை வடிவம் காணப்படுகிறது.

குடவாசல் எனும் புதுக்குடியில் தத்தகுடீரம் உள்ளது. இங்குள்ள தத்தர் ஆலயத்தில் தத்த பாதுகை, கார்த்தவீர்யார்ஜூன் சக்கரம் ஆகிய இரண்டிற்கும் தினந்தோறும் பூஜை நடைபெற்று வருகிறது.

உடையார்பட்டி என்ற இடத்தில் 16 அடி உயரத்தில் மிக எழில் வாய்ந்த தத்தாத்ரேயரின் சிலை உருவம் உள்ளது. இது `கந்தகிரி விஸ்வ ரூப தத்தர்’ என அழைக்கப்படுகிறது.

சுசீந்தரம் தாணுமாலயன் திருக்கோவில் தாணு, அயன், மால் – அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் ஓர் உருவாக வீற்றிருக்கும் தலமாகும். இது ஒரு முக்கியமான தத்த ஷேத்திரமாகும்.

கார்த்தவீர்யகுரும் மத்ரிதனூஜம்
பாதனம்ரசிர ஆஹிதஹஸ்தம்
ஸ்ரீதமுக்யஹரிதீச்வரபூஜ்யம்
தத்ததேவமனிசம் கலயாமி
சிருங்கேரி சந்த்ரசேகரேந்த்ர பாரதி சுவாமிகள் அருளிய தத்தாத்ரேயர் ஸ்லோகம்

பொதுப் பொருள்:

கார்த்தவீர்யாஜுனனின் ஆசானும், அத்ரி முனிவரின் புத்திரருமான தத்தாத்ரேயரை நமஸ்கரிக்கிறேன். அவர் பாத கமலங்களில் சரணடையும் பக்தர்களின் சிரசில் கை வைத்து நம் சக்தியை அளிப்பவரும், குபேரன் முதலிய அஷ்டதிக் பாலகர்களால் பூஜிக்கப்படுபவரும், தேவருமான தத்தாத்ரேயரை நான் எப்போதும் தியானிக்கிறேன்.

ஸ்ரீ வித்யா உபாஸனை மந்திர சாஸ்திரத்தில் உயர்வான வித்தை இதைப் பற்றி இயற்றப்பட்ட கிரந்தங்களில் பெரியதும் சிறந்ததும் ஸ்ரீ தத்தாத்ரேயரால் இயற்றப்பட்டதே. அதை பின்பற்றி இவரது சீடரான ஸ்ரீ பரசுராமரால் சுருக்கமாக ஒரு கிரந்தம் இயற்றப்பட்டது. இன்றளவும் அந்த கிரந்தமே ஸ்ரீ வித்யா உபாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அவதூதர்களுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரே சத்குரு. சகுன உபாசகர்களுக்கு கற்பக மரம் போல் நல்வாழ்வு தருபவரும். நிர்குண உபாசகர்களுக்கு சத்குருவாய் விளங்கி ஆன்ம உயர்வு தந்து ஜீவசமாதி ஆகும் நிலை வரை அருள் செய்பவர்.

Leave a Reply