ஸ்ரீதத்தாத்ரேய ஜெயந்தி: சகலமும் பெற.. வழிபாடு!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
thathatreyar - 1

மும்மூர்த்தியர் அம்சமாக அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் அவதரித்தவர்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர்.

மார்கழி மாதம் பௌர்ணமி தினத்தில் தத்தாத்ரேயர் அவதார தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர்.

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை வழிபாடு செய்தால் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

தத்தாத்ரேயர் உருவம் வித்தியாசமானது மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, ஜெபமாலை, கமண்டலம் முதலானவற்றை கரங்களில் தாங்கியவராகத் திகழ்கிறார்.

காளையும் அன்னமும், கருடனும் அவருக்கு வாகனங்களாக உள்ளன. அவரைச் சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம் கொண்டு திகழ்கின்றன.

உலகில் பல பெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள். அனுசுயாதேவி மட்டும் மூம்முர்த்திகளுக்கும் தாயாக இருக்கும் மாபெரும் பேற்றினைப் பெற்றாள் என்று புராணம் கூறுகிறது.

அத்திரி மகரிஷியின் புதல்வரானதால் ஆத்ரேயன் என்றும், விஷ்ணுவால் தத்தம் செய்யப்பட்டதால் தத்தாத்ரேயன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீதத்தாத்ரேயர் ஜெயந்தி
தத்தாத்ரேயர் வழிபாடு

ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம்.

உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தன்வந்திரி பீடத்தில் மட்டுமே அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி, கார்த்த வீர்யார்ஜூனர் மற்றும் தத்தாத்ரேயருக்கு விசேஷ சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது

தத்தாத்ரேயர் அவதார தினத்தில் ஸ்ரீ தத்தாத்ரேய காயத்ரி மந்திரம் கூறி வணங்கலாம். ‘ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே திகம்பராய தீமஹி தந்நோ தத்த பிரசோதயாத் ‘ என்ற மந்திரத்தை தினசரி ஜெபித்து வழிபட, நம் வாழ்வு அற்புதங்களால் நிறைந்து வளமுடன் காணப்படும் என்பது உண்மை என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒரே மூர்த்தியாக தோன்றியதே தத்தாத்ரேயர் அவதாரம் ஆகும். மும்மூர்த்திகளின் மனைவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு தாங்களே உலகில் சிறந்த பதிவிரதைகள் என்ற கர்வம் உண்டானது.

அந்த கர்வத்தைப் போக்க எண்ணிய இறைவன், அதற்கு கருவியாக நாரதரை தேர்வு செய்தார். அத்ரி மகரிஷியின் மனைவி அனுசுயா தேவிதான் சிறந்த கற்புக்கு அரசி என்று நாராதர் சொன்னதை கேட்டு பொறாமை கொண்டனர் முப்பெரும் தேவியர்.

முப்பெரும் தேவியர்களும், அனுசுயாவின் மீது பொறாமை கொண்டனர். தங்கள் கணவர்களிடம் கூறி அனுசுயாவின் கற்பை சோதனை செய்யும்படி அனுப்பி வைத்தனர்.

அதன்படி சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும், முனிவர் வேடம் பூண்டு அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். முனிவர்களுக்கு உணவளிப்பதற்காக பலகாரங்களை தயார் செய்தார் அனுசுயா. பின்னர் உணவு பரிமாற தொடங்கியபோது, முனிவர் வேடத்தில் இருந்த முப்பெரும்தேவர்களும், நாங்கள் நிர்வாண நிலையில்தான் உணவருந்துவோம் என்றனர்.

தன் பதிவிரதை தன்மையால் அந்த மூவரையும் குழந்தைகளாக உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அவர்களுக்கு அமுது அளித்து தொட்டிலில் தூங்கச் செய்தாள்.

அனுசுயாவின் கற்பை பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், பலகாலம் ஆகியும் இருப்பிடம் திரும்பாததை எண்ணி மனம் கலங்கிய முப்பெரும் தேவியர்கள், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர்.

மும்மூர்த்திகளும் அங்கு குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அனுசுயாவின் கற்பை எண்ணி மலைத்தனர்.

இதையடுத்து அனுசுயாவிடம் சென்ற அவர்கள், தாயே! கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழைய படியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து அனுசுயா, மும்மூர்த்திகளையும் பழைய உருவத்திற்கு மாற்றினார்.

பின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயா அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, என்ன வரம் வேண்டும்? என்று கேட்டனர். அதற்கு அனுசுயா, இறைவா! தாங்கள் மூவரும் எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்ற வரத்தை வேண்டினர்.

இறைவனும் வரம் அளித்தார். அதைத் தொடர்ந்து பல காலம் தவத்தில் ஈடுபட்டிருந்த அத்ரி மகரிசி அனுசுயா தம்பதியருக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் பிறந்தார்.

அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை வழிபாடு செய்தால் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும்.

குருவுக்கு குருவானவர்
தத்தாத்ரேயர் அவதரித்த ஸ்தலம் சுசீந்திரம் என்றும் தாணுமாலயனின் வடிவமே தத்தாத்ரேயர் அம்சம்தான் என்றும் சொல்லப்படுகிறது.

பிறந்தது முதலே ஞானவடிவாக விளங்கிய தத்தாத்ரேயர் வேத உபன்யாச ஞானியர்களுக்கு ஸத்குருவாகவும், பிரம்ம யோகியர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார்.

பரசுராமனால் அழிக்கப்பட்ட கார்த்தவீரியார்ஜுனன் இவரது சீடரே. காணாமல் அல்லது திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைக்க இன்றும் கார்த்த வீரியார்ஜுன மந்திரம் ஜெபிக்கப்படுகிறது. தத்தாத்ரேயரை வழிபட்டால் பித்ரு தோஷங்கள் நீங்கும்.

இவர் மிக இளம் வயதிலேயே பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைய பல இடங்களை சுற்றி கர்நாடகா மாநிலத்தில் உள்ள கங்காபுரத்தில் பிரம்ம ஞானத்தை அடைந்தார்.

இவரது பத்தினியின் பெயர் அனகா தேவி. ஆந்திராவில் அனகா தேவி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுது.

இந்த விரதம் கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட அனுஷ்டிக்கப்படுது. வட இந்தியாவில் தத்தாத்ரேயர் விரதம் பரவலாக அனுஷ்டிக்கப்படுது.

மூன்று திருமுகங்கள், ஆறு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார் தத்தாத்ரேயர். சிவன் அம்சமாக சூலம், சங்கும், பிரம்மா அம்சமாக கமண்டலமும், துளசி மாலையும், விஷ்ணு அம்சமாக சங்கு சக்கரம் தாங்கி காட்சி தருகிறார். நான்கு வேதங்களும் நாய்களாகவும், தர்ம நெறிகளும் பசு உருக்கொண்டு இவர் அருகில் இருக்கின்றது.

தத்தாத்ரேயரை வாங்கினால் ஞானம்,மோட்சம்,நற்குணங்களை பெறலாம்.இவர் மந்திரம் ஞாபக சக்தியை தரும்.குழந்தை இல்லாதவர்கள் இவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு நினைவாற்றல் கூடும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வீட்டில் இன்பம் பெருகும்.

இவரை வழிப்பட கடுமையான விரத முறைகள் ஏதுமில்லை. ஒரு மிட்டாய்க்கு தாவி வரும் பிள்ளைப்போல இவரை உள்ளன்போடு நினைத்து காயத்ரி மந்திரத்தை ஜபித்தாலே போதும். நினைத்தது நடக்கும்.

தத்தாத்ரேயருக்கு வட நாட்டிலும், ஆந்திராவிலும் ஏராளமான கோவில்கள் உண்டு. ஆந்திராவில் எல்லார் வீட்டுலயும் தத்தாத்ரேயரின் படங்கள் வைத்து வழிப்படுவர்.

தமிழகத்தில் தத்தாத்ரேயர் பற்றி அறிந்தோர் சொற்பமே. இவருக்கு சேந்தமங்கலம், சுசீந்தரம் தானுமலையான் கோவில் மற்றும் ஆற்காடு அருகில் உள்ள வாலாஜாபாத் தன்வந்திரி பீடத்திலும் இவருக்கு தனிச்சன்னிதி உண்டு.

Leave a Reply