கொடிய நோயையும் தீர்க்கும் சதுஸ்ஸ்லோகீ ராமாயணம்!

செய்திகள்
ramar sitha
ramar sitha

1943ம் வருடம். கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் ‘ஆசுகவி சார்வபௌமர்’ என்று போற்றப்படும் வடமொழிக் கவிச் சக்கரவர்த்தியான வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி வாழ்ந்து வந்தார். அவர் வடுவூர் ராமனின் மேல் பேரன்பும் பக்தியும் கொண்டவர்.

அம்மை நோயால் பலர் மடிந்து வந்த அக்காலக்கட்டத்தில் ஸ்ரீநிதி சுவாமிக்கும் அம்மை நோய் ஏற்பட்டது. மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்த்து விட்டு அவரது மனைவியிடம், “இன்று இரவைத் தாண்டுவதே கடினம்! என்னை மன்னித்துவிடுங்கள்!” என்று சொல்லி விட்டுச் சென்றார். அன்று இரவு அவரது வாழ்க்கையின் இறுதி இரவு என்றே நிச்சயித்த அந்த இரவில் ஸ்ரீநிதி சுவாமி தன் இஷ்ட தெய்வமான ராமனிடம் வேண்டினார்.

ராமா! என் உயிர் போவதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. ஏனெனில் உடலை நீத்தவுடன் நான் வைகுந்தத்தை அடையப் போவது நிச்சயம். ஆனால், முப்பதே வயதில் நான் மாண்டு போனால் என் தெய்வமான உனக்கன்றோ அவப்பெயர் ஏற்படும்! ராமன் ஏன் அந்த அடியவனைக் காக்கவில்லை என உலகம் உன்னைப் பழித்துப் பேசுமே!

அதனால் “ராமா! நீ….உன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள விழைந்தால் என்னுயிரைக் காப்பாற்று!” என்று சொன்ன அவர், அன்று இரவு நான்கே ஸ்லோகங்களில் முழு ராமாயணத்தையும் எழுதினார். முதல் ஸ்லோகத்தில் ராமன் பிறந்தது முதல் சீதா கல்யாணம் வரை, இரண்டாம் ஸ்லோகத்தில் பரசுராமரை வீழ்த்தியது முதல் சுக்ரீவ பட்டாபிஷேகம் வரை,

மூன்றாம் ஸ்லோகத்தில் அநுமனின் தூது முதல் ராவண வதம் வரை, இறுதி ஸ்லோகத்தில் ராம பட்டாபிஷேகத்தைச் சொல்லி, “அந்த ஜானகி ராமன் எப்போதும் என்னுடன் இருக்கையில் நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்!” என்று சொல்லி நிறைவு செய்தார்.

அடுத்த நாள் காலை அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவரது மனைவியை அழைத்து, “அம்மா! என்ன அதிசயம்! இவர் நன்கு குணமடையத் தொடங்கி விட்டார்!” என்றார். ராமனின் அருளால் வெகு சில நாட்களிலேயே அவர் பூரணமாகக் குணமடைந்தார். மஞ்சு ராமாயணம் என்றும் மந்தஸ்மித ராமாயணம் என்றும் மேலும் இரண்டு ராமாயணங்கள் எழுதினார்.

1986-ம் வருடம் இந்தியக் குடியரசுத் தலைவர் அவருக்கு வடமொழி இலக்கியத்துக்கான சிறப்பு விருதும் வழங்கினார். சுமார் 90 வயது வரை நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து பற்பல ஸ்தோத்திரங்களை இயற்றினார்.

அம்மை நோயால் தவித்த அந்த இரவில் அவர் எழுதிய நான்கு ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணம் “சதுஸ்ஸ்லோகீ ராமாயணம்” என்றழைக்கப்பட்டது. அந்த 5 ஸ்லோகங்களையும் வாசித்து இன்று உள்ள கடுமையான உயிர்க்கொல்லி நோயிலிருந்து நம்மை ராமன் காத்தருள்வான்.

ராம ஜனனம் முதல் ஸீதா கல்யாணம் வரை

ராம: கௌசிகம் அன்வகாத் பதிமுனேர் வாசா வதீத் தாடகாம்
ஸத்ரம் தஸ்ய ரரக்ஷ தேன கதிதா: ஸுச்ராவதாஸ்தா: கதா:
கத்வாதோ மிதிலாம் விதாய த்ருஷதம் யோஷிந்மணிம் ஸந்முநே:
பங்க்த்வா தூர்ஜடி சாபமாப ரமணீம் ஸீதாபிதானாமபி ||

பரசுராமரை வெல்வது முதல் சுக்ரீவ பட்டாபிஷேகம் வரை

ஸீதாயா: கரலாலனேன ஸ க்ருதி ஜித்வா முனிம் பார்கவம்
ஸாகேதம் தரஸா ப்ரவிச்ய ஜனனீம் ஆனந்தயன் மத்யமாம் |

ஆஸீத் யோ விபினே சதுர்தச ஸமா ரக்ஷன் முனீன் ஆனதான்
ரக்ஷஸ்ஸங்கம் அதாவதீத் அகடயத் ராஜ்யம் ச ஸூர்யாத்மஜே ||

அநுமன் தூது செல்வது முதல் ராவண வதம் வரை

வாயோராத்ம புவா ததோ ஹநூமதா பாதோதி பார ஸ்திதாம்
ப்ராணேப்யோபி கரீயஸீம் ப்ரியதமாம் விஜ்ஞாய ரக்ஷோ ஹ்ருதாம் |

ஸேதும் வாரிநிதௌ விதாய விவிதானந்தாக வித்வம்ஸனம்
லங்காயாம் விலுலாவ ராவண சிரோ ப்ருந்தானி வந்தேய தம் ||

சீதா ராம பட்டாபிஷேகம்
ஆருஹ்யாத விபீஷணேன ஸுபகம் பக்த்யா ஸமா வேதிதம்
மான்ய புஷ்பகம் அஞ்ஜஸா நிஜபுரீம் ஆகத்ய மித்ரைர் வ்ருத: |
ஆனந்தாய வஸிஷ்ட காச்யப முகை: பட்டாபிஷிக்தோ விபு:
தஸ்மின் ஜாக்ரதி ஜானகீ ப்ரியதமே கா நாம பீதிர் மம ||

இந்த ஸ்தோத்திரத்தின் பலன்
தநுஷ்கர சதுச்ச்லோகீ தநுஷ்புர கவீரிதா |
மாரீகாதர சித்தானாம் மாரீதிமிதராம் திசேத் ||

கலியுகத்திலும் ராமாயணம் நான்கே ஸ்லோகங்களில் சொன்னாலும் ராமாயணம் உயிர் காக்கும் மருந்தாக விளங்கும் என்பதை ஸ்ரீநிதி சுவாமியின் உயிரை ராமன் காத்த இச்சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது.

எனவே தன் அடியார்கள் விரும்பும் பலன் எதுவாக இருந்தாலும் இம்மைக்கான பலனாக இருந்தாலும் சரி, மறுமைக்கானதாக இருந்தாலும் சரி அவற்றைத் தந்தருள்பவராகத் திருமால் விளங்குவதால் ஸர்வாதிஹி என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 100-வது திருநாமம். “ஸர்வாதயே நம:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் தர்மத்துக்கு விரோதமின்றி விரும்பும் அனைத்துப் பலன்களையும் திருமால் தந்தருள்வார்.

Leave a Reply