பரந்தாமன் பார்ப்பது பக்தியை.. பகட்டல்ல..!

செய்திகள்

ஸ்ரீமகாவிஷ்ணுவிடம், தன் மனதை பறி கொடுத்த காஞ்சி நகர் ஊழிசேரன் எனும் மன்னர், பெருமாள் பள்ளி கொண்ட வடிவத்தை, விக்ரகமாக செய்வித்து, தினமும், விதவிதமான அலங்காரங்கள், நைவேத்தியங்கள் என, வழிபட்டு வந்தார்.

நாளாக நாளாக, நாம் இறைவனுக்கு எவ்வளவு விலை உயர்ந்த ஆடைகளும், ஆபரணங்களும் சமர்ப்பிக்கிறோம்… வாசனையும், அழகும் கலந்த மலர்கள், விதவிதமான பழங்கள்; உயர்ந்ததான நைவேத்தியப் பொருட்கள்… இம்மாதிரியான வழிபாட்டை யாருமே செய்ய முடியாது… என்ற எண்ணம், அவர் மனதில் தோன்ற, ஆணவம் எனும் நச்சு மரம், அவருள் வேர் விட துவங்கியது.

ஒருநாள், மன்னர் ஊழிசேரன் உலாவச் சென்று அரண்மனை திரும்புகையில், வழியில், மரத்தடியில், ஏழை பக்தர் ஆதிரன் என்பவர் , விஷ்ணு பகவானின் சிறிய விக்ரகம் ஒன்றை வைத்து, துளசியால் அர்ச்சனை செய்வதை பார்த்தார்.

உடனே, அவரை கூப்பிட்டு, என் பகவானை, வெறும் துளசியை சாற்றி, அலங்கோலமாக்கி விட்டாயே… அரண்மனையில் வந்து பார்… என்றார் மன்னர் ஊழிசேரன்….பெருமையுடன்!

மன்னா !!
உங்கள் வசதியை காட்டி, பகவானை வசப்படுத்த முடியாது; தூய்மையான பக்தி ஒன்றிற்கே பகவான் வசப்படுவார் என்றார்.

உடனே, மன்னருக்கு கோபம் வந்து, போதும் உன் பேச்சு;
நீ, முதலில் பகவானை பார்க்கிறாயா அல்லது நான் பார்க்கிறேனா என்று பார்க்கலாம் என்று சொல்லி, அரண்மனை திரும்பினார்.

பின், முத்கல ரிஷி மூலம், பிரமாண்டமான யாகம் செய்தார்.
காஞ்சியில் நடந்த அந்த யாகத்தை பற்றி, அனைவரும் சிலாகித்து, மன்னரின் பக்தியை பாராட்டினர்.

அதேசயம், ஏழை பக்தர் ஆதிரன், பகவானை தரிசிக்காமல், காஞ்சி திரும்ப மாட்டேன்… என்று உறுதி எடுத்து, காஞ்சி நகருக்கு வெளியே விரதமிருந்து, வழிபாட்டைத் துவக்கினார்.

தானே நைவேத்தியம் தயாரித்து, கடவுளுக்கு படைத்து, அப்பிரசாதத்தையே ஒரு வேளை உண்டு, வழிபாடு நடத்தி வந்தார்.

ஒருநாள், வழக்கமாக, வழிபாட்டை முடித்தவர், கண்மூடி இறைவனை நமஸ்கரித்து, பிரசாதத்தை எடுக்க குனிந்த போது, அங்கே, பிரசாதத்தை காணவில்லை.

இவ்வாறாக ஆறு நாட்கள் நீடித்தது. ஏழாவது நாள் பிரசாதத்தை ஸ்ரீ விஷ்ணு விக்ரகத்தின் முன் படைத்து, மறைந்து நின்று கவனித்தார்.

அப்போது, மெலிந்த, கந்தலாடை, பரட்டைத் தலையுடன் இருந்த ஒருவன் பிரசாதத்தை அள்ளிக் கொண்டு ஓடினான்.

அதைப் பார்த்த பக்தர், அவன் பின் ஓடினார். முன்னால் ஓடியவன் கல் தடுக்கி, கீழே விழுந்து, மயக்கமடைந்தான்.

உடனே, அவனை தூக்கி உட்கார வைத்து, தன் மேலடையால் அவனுக்கு விசிறினார் பக்தர் ஆதிரன்.

அடுத்த நிமிடம், பக்தா… உன் அன்பால் என்னை நீ வென்று விட்டாய் என்றபடியே, ஏழை வடிவம் மறைய, அங்கே, பக்தருக்கு சங்கு சக்கர கதாதாரியாய் தரிசனம் தந்தார் பரமாத்மா ஸ்ரீ மஹாவிஷ்ணு

தகவல் அறிந்த மன்னர், தூய்மையான பக்தியே உயர்ந்தது என கூறி, ஆடம்பரங்களை நீக்கி, யாக குண்டத்தில் குதிக்க, அவருக்கும் பகவான் தரிசனம் தந்தார்.

அன்பும், இரக்கமும் நிறைந்த தூய்மையான பக்தியே, பகவானை வசப்படுத்தும் என்பதை விளக்கும் கதை இது !

ஆக பகவான் நம்மை ஆட்கொள்ள எதுவுமே தேவையில்லை ஆத்மார்த்தமான நம்முடைய பக்தி ஒன்றே போதுமானது.

பரந்தாமன் பார்ப்பது பக்தியை.. பகட்டல்ல..! News First Appeared in Dhinasari

Leave a Reply