அரசாங்க வேலை, காரிய வெற்றிக்கு.. ஆதித்ய ஹ்ருதயம்.. தழிழ் அர்த்தத்துடன்..!

செய்திகள்

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்

இன்றைய மார்கழி மாத மங்களம் தரும் ரவி வாரம் காலையில் பாராயணம் செய்வதால் சகல செளபாக்யமும் கிடைக்கும்.

அதுவும் சிம்ம லக்னம் சூரிய பகவானின் நட்சத்திரக்காரர்களுக்கு பலன் இரட்டிப்பாகும்.

மேலும் அரசாங்க உத்யோக வேலை கிடைக்க கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டும்

எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் தான் ஆதித்ய ஹ்ருதயம்.

ஸ்ரீராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றி ஆதித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு ஸ்துதி. இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ஸ்ரீராமர் இதை பாராயணம் செய்து ராவணனை வெற்றி கொண்டார்.

ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ஸ்ரீராமர். அருகில் இருந்த விபீஷணன் ஸ்ரீராமரைக் குறிப்பாக பார்த்தார். விபீஷணன் ஏதோ சொல்ல விரும்புவதைத் தெரிந்து கொண்ட ராமர் விபீஷணனை அருகில் அழைத்தார்.

ஸ்ரீராமரை நோக்கி விபீஷணன், ஐயனே! அன்னையை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கிறான் ராவணன். உலகத்திற்கே அருள்பாலிக்கும் அன்னையை அவன் இடைவிடாது அடி மனத்திலிருந்து நினைப்பதால் இயல்பாகவே நினைப்பவர் தம்மைக் காக்கும் அன்னையின் சக்தி அவனைக் காக்கிறது. ஆகவே அந்த ஆசையை முதலில் நீங்கள் அழித்தால், பின்னர் அவன் அழிந்து விடுவான் என்று ராவணனின்-உயிர் ரகசியத்தைக் கூறினார்.

உடனே ராமர், ஒரு பாணத்தை எடுத்து அவன் நாபியை நோக்கி அடித்தார். அடிவயிற்றில் இருந்த அன்னை நினைவு போனவுடன் அது ராவணன் மரணத்திற்கு வழி வகுத்தது. அடுத்து பத்து பாணங்களால் பத்துக் தலைகளையும், இருபது பாணங்களால் இருபது கைகளையும் அறுத்துக் தள்ளினார் ஸ்ரீராமர். ஆக முப்பத்தியொரு பாணங்களை ஸ்ரீராமர் செலுத்தி ராவணனை அழித்ததை துளசிதாசர் அழகாக அரக்கன் அழிவின் ரகசிய விளக்கமாக ஸ்ரீராமசரித மானசத்தில் கூறுகிறார்.

ஆதித்ய ஸ்ருதயம் தரும் பலன்கள்

இப்படி பலம் பொருந்திய எதிரியை அழிக்க வகுத்தது. ஆதித்ய ஹ்ருதயம், எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.

ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் பாராயணம் செய்தால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர்.

நம் அன்றாட வாழ்வின் செயல்பாட்டில் சோர்வினை நீக்கி, நம் உடலுக்கு சக்தி தருவது தான் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தை உச்சரித்து வந்தால் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

ஸ்ரீராமர் ராவணனோடு யுத்தம் செய்த சமயத்தில் ஸ்ரீராமனுக்கு ஏற்பட்ட சோர்வினை நீக்க அகத்திய முனிவரால் உபதேசிக்கப்பட்ட ஸ்லோகம் தான் இது. இந்த ஸ்லோகமானது சூரியனை வணங்கும் வகையில் அமைந்துள்ளது. ராமன் இந்த ஸ்லோகத்தை உச்சரித்த பின்பு ராவணனை எளிதாக வீழ்த்தி விட்டார்.

ராவணனை வீழ்த்திட ஸ்ரீராமன் பிரயோகித்த மந்திரம்

இதோ தமிழாக்கத்துடன்

ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
தைவதைச்சஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷிஹி

ராம-ராவண யுத்தத்தை தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த
அகத்தியர், அப்போது போரினால் களைத்து,கவலையுடன் காணப்பட்ட
ராமபிரானை அணுகிப் பின் வருமாறு கூறினார்.

ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா… ராமா… போரில் எந்த
மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லாபகைவர்களையும் வெல்ல
முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை
உனக்கு நான் உபதேசிக்கிறேன், கேள்.

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன் நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

எல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடியதும் மிகுந்த புண்ணியத்தை
அளிக்கக்கூடியதும் வெற்றியைத் தரக்கூடியதும் அளவற்ற உடல் வலிமையை
தரக்கூடியதும் உத்தமமான, மங்களகரமுமான ஆதித்ய ஹ்ருதயம் என்ற
ஸ்தோத்திரத்தை நீ அனுதினமும் ஜபிக்க வேண்டும். இந்த ஸ்தோத்திரம்,
சூரியனுடைய இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தைஅளிப்பதாகும்.

ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம்

எல்லாவகையான மங்களங்களையும் வழங்கக்கூடிய மந்திரங்களுக்கு
மேலான மந்திரம் இது. எல்லா பாவங்களையும்போக்கவல்லது. மனக்கவலை,
உடற்பிணிகளைத் தீர்க்கவல்லது. ஆயுளை விருத்தி செய்யும். எல்லா
மந்திரங்களை விடவும்சிறந்ததான இந்த ஸ்தோத்திரத்தை நீ ஜபிக்க வேண்டும்.

ரஷ்மி மந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

ஒளிமிகுந்த கிரணங்களை உடையவனும் நித்தம் உதிக்கின்றவனும்
தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்பட்டவனும் எல்லா
ஐஸ்வர்யங்களையும் கொண்டவனும் ஒளிமிகச் செய்பவனும்
ஈஸ்வரனுமாகிய சூரியனை நீ பூஜை செய்ய வேண்டும்.

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரஷ்மி பாவனஹ:
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபிஹீ:

எல்லா தேவதைகளும் இந்த சூரியனுக்குள் அடக்கம். பிரகாசமாக
உடற்பொலிவு கொண்டவர். தன் கிரணங்களாலேயேஉலகை ரட்சிப்பவர்.
தேவர்கள், அசுரர்கள் மற்றும் இந்த உலகமனைத்தையும் தன்
கிரணங்களால் காப்பாற்றுபவர் இந்தசூரியனே.

ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஷ்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி:

இவரே பிரம்மாவாகவும், விஷ்ணுவாகவும், சிவனாகவும், முருகனாகவும்,
பிரஜாபதியாகவும், மகேந்திரனாகவும், குபேரனாகவும் காலமாகவும்
யமனாகவும், சந்திரனாகவும், வருணனாகவும் விளங்குகிறார்.

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:
வாயுர்வஹ்னி:ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர:

இந்த சூரியனே பித்ருக்களாகவும், அஷ்டவசுக்களாகவும், சாத்யர்கள் என்ற
தேவர்களாகவும், அச்விநி தேவர்களாகவும், ஸப்தமருந்துகளாகவும்,
மனுவாகவும், வாயுவாகவும், அக்கினியாகவும், பிரஜைகளாகவும்,
பிராணனாகவும், பருவ காலங்களை உருவாக்குபவராகவும்
ஒளி பரப்புபவராகவும் திகழ்கிறார்.

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ண – ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர:

இந்த சூரியனே அதிதியின் புத்திரன். உலகை உண்டுபண்ணுகிறவர்.
கர்மாக்களைச் செய்யச் செய்பவர். ஆகாயத்தில் சஞ்சரிப்பவர். மழையால்
உலகையே வளமாக்குபவர். ஒளிமிகுந்த கிரணங்களைக் கொண்டவர்.
பொன்னிறமானவர். தங்கமயமான பிரமாண்டத்தை உருவாக்கியவர்.
பகலை சிருஷ்டித்தவர்.

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்

பச்சை குதிரையை வாகனமாகக் கொண்டவர். ஆயிரக்கணக்கான
கிரணங்களை உடையவர். ஸப்த என்னும் பெயருள்ள குதிரையை உடையவர்.
பிரகாசத்துடன் விளங்குபவர். இருளை அழிப்பவர். சுகம் அளிப்பவர்.
உலகையே ஸம்ஹாரம் செய்பவர். உலகம் தோன்றுவதற்கு முன்னாலேயே
உருவானவர்.

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ திதே: புத்ர: சங்க: சிசிரநாசன:

தங்கமயமான பிரமாண்டத்துக்குரியவர் இந்த சூரியன். காம, க்ரோத,
லோப குணங்களைப் போக்குபவர். எரிச்சலைக்கொடுப்பவர்.
ஒளி மிகுந்தவர். எல்லோராலும் போற்றப்படுபவர். பகலில் அக்கினியைத்
தன் கர்ப்பத்தில் வைத்திருப்பவர்.அதிதியின் புத்திரன். ஆகாசம்
முழுவதும் வியாபித்தவர். பனியை விலக்குபவர்.

வ்யோமநாத ஸ்தமோபேதீ ருக்யஜுஸ் ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்ய வீதி ப்லவங்கம:

இவர் ஆகாயத்தை உருவாக்கியவர். இருளைப் போக்குகிறவர். ரிக், யஜுர்,
ஸாம வேதங்களுடையப் பொழிவானஉபநிஷத்துகளால்
கொண்டாடப்படுகி றவர். அதிகமான மழையைக் கொடுப்பவர்.
நல்ல நீர்நிலைகளை உருவாக்குபவர். தட்சிணாயனத்தில் விந்திய மலை
வழியாக சஞ்சரிப்பவர்.

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கள: ஸர்வதாபன:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:

இவர் வெயிலைக் கொடுப்பவர். வட்டமான பிம்பம் உள்ளவர்.
நட்புருவானவர். பொன் நிறமுள்ளவர். நடுப்பகலில் அனைவருக்கும்
தாகத்தை உண்டு பண்ணுகிறவர். அனைத்து சாஸ்திரங்களையும்
உபதேசிப்பவர். உலகத்தை நடத்திச் செல்பவர். தேஜஸ் மிகுந்தவர்.
எல்லோரிடமும் அன்பு கொண்டவர். எல்லோருடைய உற்பத்திக்கும்
காரணமானவர்.

நக்ஷத்ர க்ரஹதாராணா மதிபோ விச்வபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்துதே

அஸ்வினி முதலான நட்சத்திரங்கள், நவகிரகங்கள், பிற ஒளிகள்
எல்லாவற்றிற்கும் அதிபர் சூரியன். உலகத்தைக் காப்பாற்றுகிறவர்.
அக்கினி முதலான ஒளிகளுக்கெல்லாம் மேலாக ஒளிர்பவர். பன்னிரண்டு
உருவங்களாக இருப்பவர். இத்தகைய மகிமை பொருந்திய சூரிய பகவானே
நமஸ்காரம்

நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம:

கிழக்கு திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம். மேற்கு
திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம்.நட்சத்திரங்களுக்கும்
கிரகங்களுக்கும் அதிபதியே, பகலுக்குத் தலைவனே நமஸ்காரம்.

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

என்றும் ஜெயிப்பவரே, வெற்றியையும் மங்களத்தையும் அளிப்பவரே,
பச்சை குதிரை வாகனரே நமஸ்காரம். ஆயிரக்கணக்கான கிரணங்களைக்
கொண்டவரே, சூரிய பகவானே நமஸ்காரம்.

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

பாவிகளுக்கு பயங்கரமானவரே, சிறந்த வீரரே, விரைந்து செல்பவரே
நமஸ்காரம். தாமரைப் பூவை மலரச் செய்பவரே, உலகிலேயே முதலில்
உண்டானவரே சூரிய பகவானே, நமஸ்காரம்.

ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸூர்யாயாதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:

பிரம்மா, பரமசிவன், விஷ்ணு இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனானவரே,
சூரியனே, ஒளிவடிவானவரே, எல்லா யாகங்களிலும்கொடுக்கப்படும்
ஹவிஸை ஏற்றுக்கொள்பவரே, உக்கிரமான சரீரம் கொண்டவரே, நமஸ்காரம்.

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

இருளை விலக்குபவரே, பனியை உருக்குபவரே, எதிரிகளை அழிப்பவரே,
அளவற்ற ஆற்றல் கொண்டவரே, செய்நன்றியை மறப்பவரை வீழ்த்துபவரே,
நட்சத்திரம் முதலான ஒளிகளுக்கு நாயகனே, நமஸ்காரம்.

தப்தசாமீகராபாய வஹ்னயே விச்வகர்மணே
நமஸ்தமோ பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

உருக்கிய தங்கம் போல ஒளிர்பவரே, அக்கினி ஸ்வரூபமானவரே, உலகத்தை
உருவாக்கியவரே, அஞ்ஞானத்தைப் போக்குபவரே, பிரகாசம் மிகுந்த வரே,
உலகத்துக்கு சாட்சியானவரே, நமஸ்காரம்.

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

மகாபிரபுவான இந்த சூரியனே பிரளயத்தை உருவாக்குகிறார். மீண்டும்
உலகத்தை இவரே சிருஷ்டிக்கிறார். இவரேபாது காக்கிறார். இவரே
தவிக்கவும் வைக்கிறார். இவரே தன் கிரணங்களால் மழை
பொழிய வைக்கிறார்.

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோ த்ரிணாம்

பிற அனைத்து பூதங்களும் உறங்கும்போது, அந்தர்யாமியாக இந்த சூரியன்
விழித்துக் கொண்டிருக்கிறார். இவரே யாகம் வளர்க்கும் அக்கினியாகவும்
அந்த அக்கினி யாகத்தின் பலனாகவும் திகழ்கிறார்.

வேதாச் சக்ரதவைச்சைவ க்ரதூனாம் பலமேவ ச
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:

வேதங்களாகவும் யாகங்களாகவும் யாகங்களின் பலனாகவும்
உலகத்திலுள்ள எல்லா செயல்களுக்கும் மூல காரணனாகஇந்த
சூரியனே விளங்குகிறார்.

ஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷுச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ:

ராகவா! எந்த ஆபத்து காலத்திலும் சரி, எந்த வகையான கஷ்டம்
நேர்ந்தாலும் சரி, காய்ச்சல் முதலான உடல் நோய்கள் எப்போது
ஏற்பட்டாலும் சரி, காடுகளினூடே பயணம் செய்யும்போது எந்த ஆபத்து
எதிர்ப்பட்டாலும் சரி, எப்போது பயம் தோன்றினாலும் சரி, அப்போது
மேற்கண்ட ஸ்லோகங்களால் சூரியனைத் துதித்தால் போதும், எந்தத்
துன்பமும் நெருங்கமுடியாது, ராகவா!

பூஜயஸ்வ மேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

ஒருநிலைப்பட்ட மனதுடன், தேவர்களுக்கெல்லாம் தேவனான, உலகத்துக்கே
அதிபதியும் ஆன இந்த சூரியனைவழிபடுவாயாக. இந்த ஸ்தோத்திரத் தை
மூன்று முறை ஜபித்தாயானால், இந்த யுத்தத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவார்.

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாஸ்கஸ்த்யோ ஜகாம ச யதாகதம்

மனிதருள் மாணிக்கமே, இந்தக் கணத்திலேயே நீ ராவணனை வென்று
வெற்றிவாகை சூடியவனாகிறாய், என்று சொல்லி, அகத்தியர் ராமனை
ஆசிர்வ தித்து விட்டுச் சென்றார்.

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ பவத்ததா
தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான்

அகத்தியர் கூறியதைக் கேட்ட ராமன் அப்போதே தன் சோர்வு முற்றிலும்
நீங்கியவனானான். மிகுந்த சந்தோஷத்துடன், புதுஉற்சாகத்துடன்
மேற்க ண்ட ஸ்லோகங்களை ஜபிக்கத் தொடங்கினான்.

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய வீர்யவான்

மூன்று முறை நீரெடுத்து ஆசமனம் செய்து, பரிசுத்தனாகி, சூரியனைப்
பார்த்து இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்து, புது பலமும்,புதுப்பிக்கப்பட்ட
தன்னம்பிக்கையுடனும் ராமன் தன் வில்லை எடுத்துக்கொண்டார்.

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத்

மகா வீரனான ராமன், வில்லேந்தியவராய் சூரியனை நோக்கி ஜபம் செய்து
பரமானந்தத்தை அடைந்தார். திடமானமனோபலத்துடன் ராவணனுக்கு
எதிரான போருக்குத் தயாரானார். அவனை வதைக்க வேண்டும் என்ற
எண்ணத்தை மனத்திண்மையாகக் கொண்டார்.

அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ்த்வரேதி

ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹீ
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்.

இதி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.

அப்பொழுது தேவகணங்களின் நடுவிலிருந்த சூரிய பகவான், உவகை பூத்து உள்ளக் களிப்புடன் ஸ்ரீராமரை நோக்கி, ‘ராவண வதத்தை துரிதமாய் முடிப்பாயாக’ என்று உபதேசித்து ஆசிர்வதித்தார்

நமக்கு ஏற்படும் கஷ்ட காலங்களில் இருந்து விடுபட 11 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து சூரிய பகவானுக்கு தூப தீபம் காட்டி கோதுமை நிவேதனம் செய்தால் மனதில் நினைத்தது நிறைவேறும்.,
நம் மனதில் உள்ள பயத்தினை நீக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்து பயன்பெறலாம்.

அரசாங்க வேலை, காரிய வெற்றிக்கு.. ஆதித்ய ஹ்ருதயம்.. தழிழ் அர்த்தத்துடன்..! News First Appeared in Dhinasari

Leave a Reply