அறப்பளீஸ்வர சதகம்: பயனற்றவன்!

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil

பதர்

மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
வாயிலா தவனொரு பதர்;
வாள்பிடித் தெதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்
மனக்கோழை தானொரு பதர்;
ஏறா வழக்குரைத் தனைவருஞ் சீசியென்
றிகழநிற் பானொரு பதர்;
இல்லாள் புறஞ்செலச் சம்மதித்தவளோ
டிணங்கிவாழ் பவனொரு பதர்;
வேறொருவர் மெச்சாது தன்னையே தான்மெச்சி
வீண்பேசு வானொரு பதர்;
வேசையர்க ளாசைகொண் டுள்ளளவும் மனையாளை
விட்டுவிடு வானொரு பதர்;
ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள்செய்
அமல! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

தணியாத துயரத்தையும் வறுமையையும் போக்கி அருள்புரியும் தூயவனே!
‘எமது தேவனே!’ திரிபு இல்லாத நூல்களையறிந்தும் நிலைபெற்ற
அவையிலே (கற்றதைக்) கூறுந்திறமையற்றவன் ஒரு மக்கட்பதர்,
எதிரி வாளேந்திப் போருக்கு வந்தால் அஞ்சியோடி மறைந்திடும்
மனவுறுதியற்றவன் ஒரு பதர், செல்லாத வழக்கைச் செப்பி, யாவரும்
சீசி! எனப்பழிக்கும்படி நிற்பவன் ஒரு பதர், தன் மனையாள்
அயலானிடத்திற்போக மனம் ஒப்பி, அவளுடன் கூடிவாழ்வான் ஒரு பதர்,
தன்னை மற்றவர் புகழாமல், தானே புகழ்ந்துகொண்டு
வெற்றுரையாடுவான் ஒரு பதர், பரத்தையரிடங்
காமுற்றுக்காலமெல்லாம் இல்லாளைப் பிரிந்திருப்பவன் ஒரு பதர்.

இங்குக் கூறப்பட்டவர்கள் மக்களுக்கு இழிவையுண்டாக்கத்தக்கவர்கள்.

Leave a Reply