சிவகாசி மாரியம்மன் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற அக்னிச்சட்டி திருவிழா!

செய்திகள்
sivakasi mariamman temple - Dhinasari Tamil

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறைக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த ஒரு வாரமாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பங்குனிப் பொங்கலின் முக்கிய நிகழ்ச்சியான கயிறுகுத்து, அக்கினிச்சட்டி திருவிழா நேற்று நடைபெற்றது. நேற்று காலையில் இருந்து, இன்று அதிகாலை வரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்கினிச்சட்டி ஏந்திவந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கயிறுகுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மன் அரிசிக்கொட்டகை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இன்று அதிகாலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மன், நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ரதவீதிகளில் வலம்வந்த ஸ்ரீமாரியம்மன் தேர் அலங்காரம் காணும் காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது. நாளை 13ம் தேதி (புதன் கிழமை) காலை தேர்வடம் தொடும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் பங்குனிப் பொங்கல் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply