எளிய பக்திக்கு இறைவன் அருள்..!

செய்திகள்
krishnar - Dhinasari Tamil

ஏழை குடியானவன் செந்தில், குடும்ப கஷ்டங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்தான்.

தன்னுடைய பணிக்காக அதிகாலையில் செல்லும் செந்தில் , இரவு வேளையில்தான் வீடு திரும்புவான்.

எனவே அவனால் தினமும் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட முடியவில்லை.

இறைவனை வழிபட்டு தன்னுடைய துன்பங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால், வேலைப்பளு காரணமாக ஆலயத்திற்குச் செல்ல முடியவில்லையே என்று வருந்தினான் செந்தில்.

ஒரு நாள் சிறிய கிருஷ்ணர் சிலையை வாங்கி வந்து, தன்னுடைய குறைகளைச் சொல்லி வழிபட்டு வந்தான் செந்தில்.

செந்தில் தினமும் பணிக்கு செல்லும் போதும், இரவு தூங்கும் வேளையிலும் கிருஷ்ணரின் சிலையை வணங்கினான்.

ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற நறுமணப் பொருட்களை வைத்து வழிபட்டான்.

பல மாதங்கள் ஆகியும் அவனது வறுமை அகலவில்லை. இதனால் கிருஷ்ணரின் மீது செந்திலுக்கு கோபம் வந்தது.

‘நான் தினமும் இந்த கிருஷ்ணரை வழிபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கஷ்டத்தை இவர் கண்டுகொள்வதே இல்லை’ என்று நினைத்தவன், சந்தைக்குச் சென்று வேறு ஒரு அம்மன் சிலையை வாங்கி வந்தான் செந்தில் .

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இருந்த இடத்தில் இப்போது புதிய அம்மன் சிலையை வைத்த செந்தில், கிருஷ்ணர் சிலையை அதற்கு மேல் உள்ள அலமாரியில் வைத்தான்.

பின்னர் அம்மன் சிலைக்கு வழிபாட்டைச் செய்தான். ஊதுபத்தியை கொளுத்தி அருகே வைத்தான். அந்த ஊதுபத்தியின் புகை மெல்ல மெல்ல, மேல்நோக்கிச் சென்று, அலமாரியில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணரின் சிலை மீதும் பட்டது.

உடனே அந்த ஏழை செந்தில், ‘கிருஷ்ணா! இவ்வளவு நாட்களாக நான் உன்னை வழிபட்டும் எனக்கு எந்த கைமாறும் நீ செய்யவில்லை. அப்படியிருக்கையில் அம்மனுக்கு ஏற்றிவைத்திருக்கும் ஊதுபத்தி நறுமணத்தை மட்டும் நீ அனுபவிக்கலாம் என்று நினைக்கிறாயா?’ என்று கேட்டபடி, சிறிய பஞ்சை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணர் சிலையின் மூக்கில் வைத்து அடைத்தான்.

அடுத்த கணமே செந்திலின் முன்பாக வந்து காட்சிகொடுத்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணபிரான். செந்தில் பக்தி பரவசத்தில்
மெய்சிலிர்த்தான். ஆனந்த கண்ணீர் பெருக்கேடுத்தது

பக்தா! நீ என்னை மண்ணாக பாவிக்காமல், உயிருள்ளவன் என்று எண்ணி பஞ்சை வைத்து அடைத்தாயே. அந்த பக்தியால் மிகவும் அகமகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்றார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணபிரான்.

குடியானவன் செந்தில் விருப்பப்படியே அவனது வறுமையைப் போக்கி அருளினார்.

நாம் வழிபடும் இறை உருவங்களை, வெறும் கல்லாகவும், மண்ணாகவும் கருதாமல், நிஜம் என்று நினைத்தாலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணபிரான் ஓடி வந்து உதவிபுரிவான். அதுவே பக்தியின் ரகசியம்.

நம் ஒவ்வொரு வீட்டின் வறுமைகளையும், தேவைகளையும் புரிந்து அருள் புரிய ஸ்ரீ கிருஷ்ணபிரான் ஓடி வந்து உதவிபுரிவான், பக்தியுடன் அவன் திருவடி பணிவோம்

Leave a Reply