திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயில்: பிப்.17ல் புதிய திருத்தேர் வீதியுலா

செய்திகள்

இந்தக் கோயிலில் மாசி மகப் பெருவிழா 5-ம் நாளை முன்னிட்டு, காலையில் விநாயகர், சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர், வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு விஷேச மகா அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் உற்சவமூர்த்திக்கு அலங்கார மண்டபத்தில் சோடச உபசார தீபாராதனையும், 108 விசேஷ மூலிகைப் பொருள்களினால் யாக வேள்வியும் நடைபெற்றது. அதன் பிறகு, அதிகார நந்தி வாகனத்தில் ஸ்வாமி கோபுர தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலையில் பஞ்சமூர்த்திகள் மற்றும் சோமாஸ்கந்தருக்கு விசேஷ அபிஷேகம், கலசாபிஷேகம், சோடச உபசார தீபாராதனை, பரதநாட்டியம் மற்றும் வாணவேடிக்கையுடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

வரும் பிப்.17-ம் தேதி கலை நிகழ்ச்சிகள், சிறப்பு நாகஸ்வர இன்னிசைக் கச்சேரி, வேதபாராயணம், திருமுறை தேவாரம் மற்றும் பஞ்சவாத்தியங்களுடன் ரூ.32 லட்சம் மதிப்பீட்டிலான புதிய திருத்தேர் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Leave a Reply