ஆஷாட ஏகாதசி! பண்டரிநாதன் பதம் பணிவோம்!

ஆன்மிக கட்டுரைகள் விஷ்ணு ஆலயம்
pandurankan

தேவசயன ஏகாதசி ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியாகும்.

தேவர்களுடன் சயனத்திற்கு பகவான் விஷ்ணு செல்லும் நேரமாக இந்த ஏகாதசி வரும் நேரம் இருப்பதால் இந்த ஏகாதசிக்கு தேவசயன ஏகாதசி எனப் பெயர் வந்தது.

தேவர்கள் சயனத்திற்கு செல்லும் நேரமாக இருப்பதால் இந்த ஏகாதசி விரதத்திற்கு பிறகு வைதீக காரியங்கள் சிறிது நாட்களுக்கு நடப்பதில்லை.(தேவர்கள் ஹோமத்தில் அளிக்கும் அன்னத்தை உண்ண வர மாட்டார்கள். இது அவர்கள் உறங்கும் வேளை).

தேவசயன ஏகாதசிக்கு பத்ம ஏகாதசி என்றும் ஆஷாட ஏகாதசி என்றும் பெயர் உண்டு. மகாராஷ்டிர மாநிலத்தில் இதனை ஆஷாட ஏகாதசி என அழைத்து இந்த நாளில் பண்டரிபுரம் சென்று விட்டலனை வழிபடுகிறார்கள். மற்ற வட இந்திய மாநிலங்களில் இன்றைய தினம் கோதாவரி நதியில் நீராடி காலா ராமர் கோவில் சென்று வழிபடுகிறார்கள்

சயனி ஏகாதசி கதையை பகவான் கிருஷ்ணன் தருமருக்கு எடுத்து சொல்லும் போது அதனை நாரதருக்கு பிரம்மா எடுத்து சொல்லியதாக கூறினார்.

thukaram gnaneshwar

பிரம்மா சொன்ன கதையாவது:

முன்னொரு காலத்தில் மந்தாதர் என்னும் அரசர் செம்மையாக இராஜிய பரிபாலனம் செய்து வந்தார். அவரின் அரசாட்சியில் குடிமக்கள் குறையில்லா வாழ்வு வாழ்ந்தார்கள். அரசரும் முறை தவறாத ஆட்சி மேற்கொண்டார். ஒரு தடவை வறட்சியும் பஞ்சமும் மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து இருந்து குடிமக்களை வாட்டி வதைத்தன. மக்கள் வழி தெரியாது மன்னனிடம் முறையிட்டனர்.

மன்னனும் காரணம் அறியாது கலங்கினார். அவருக்கு தெரிந்த வரை அவர் ஒரு தவறும் இழைக்கவில்லை. தனது சேனைகளையும், பரிவாரங்களையும் கூட்டிக் கொண்டு காடு காடாக சென்று சாதுக்களை தரிசித்தார். எங்காவது ஒரு வழி கிடைக்குமா எனத் தேடினார்.

இவ்வாறு பிரயாணம் செய்த நேரத்தில் ஆங்கிரஸ முனிவரை மன்னன் தரிசித்தார். அவரிடம் தனது கஷ்டத்தை அவர் எடுத்து கூறிய போது, முனிவர் தனது தவ வலிமையால் கண்டறிந்து மன்னனின் ராஜ்யத்தில் பிராமணன் இல்லாத ஒருவன் வேள்வி யாகங்களில் ஈடுபட்டதன் பலனே இது என உரைத்தார். அவனை கொன்றுவிடும்படி மன்னனிடம் கூறினார்.

dnayaneshwar

கொல்லும் அளவுக்கு இது பெரிய குற்றமில்லை என்பதால் மன்னன் அதனை மறுத்து வேறு உபாயம் கேட்டார். முனிவரும் சயன ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னார். பிரச்னை தீரும் என்றார். நாடு திரும்பிய மன்னன் தன் பிரஜைகளையும் தேவ சயன ஏகாதசி விரதம் இருக்க சொன்னான். விளைவாக நாட்டில் வரட்சியும், பஞ்சமும் நீங்கியது. சுபிக்ஷம் ஏற்பட்டது.

சயன ஏகாதசி விரத பலன்கள்:

தேவ சயன ஏகாதசி விரதமிருந்தால் எந்தொரு பாபமாக இருந்தாலும் தொலையும்.

ஆன்மீக சக்தி அதிகரிக்கும். அதில் ஒரு முழுமை கிடைக்கும். நடுவில் இருக்கும் தடை கற்கள் நீங்கும்.

பாபத்தினால் விளையும் தீமைகள் மறையும். வாழ்வு வளம் பெரும்.

thukaram

இப்படியாக கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு தேவ சயன ஏகாதசியை பற்றி எடுத்தியம்பியதாக பவிஷ்ய உத்தர புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

ஆஷாட ஏகாதசி பண்டரிபுரம்: பண்டரிபுரத்தில் முக்கிய நாளாக ஆஷாட ஏகாதசி கொண்டாடப்படுகிறது . இது ஆஷாட மாதத்தில் ( ஜூன்-ஜூலை ) வரும் வளர்பிறை ஏகாதசியாகும் .

ஸ்ரீ பாண்டுரங்கனின் சிறந்த பக்தர்களான ஸ்ரீ துக்காராம் மகாராஜ் அவர்களும் ஸ்ரீ ஞானேஸ்வரரும் தமது பக்தர்களுடன் ஸ்ரீ பாண்டுரங்கனை தரிசிக்க பல மைல்கள் பாத யாத்திரையாக ( 150 – 200 கிமீ மேல் ) வந்து பண்டரிபுரம் அடைந்த நாள் ஆஷாட ஏகாதசி நாளாகும் .

ஓவ்வொரு ஆண்டும் இந்த சமயத்தில் மராட்டிய மாநிலம் தேஹு என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ.துகாராம் அவர்களின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு ஏராளமான பக்தர்களுடன் பண்டரிபுரம் நோக்கி வருகிறது. பக்தர்கள் பாத யாத்திரையாக ஸ்ரீ துக்காராம் மஹாராஜூடனேயே பாடிக்கொண்டு வருவதாக பாவித்து பாண்டுரங்கன் மேல் பல பாடல்களை பாடிக்கொண்டு ( இவற்றை அபங்கங்கள் என்று கூறுகிறார்கள் ) அந்த பல்லக்கை தொடர்ந்து வருகிறார்கள் .

panduranga

இதுபோலவே மராட்டிய மாநிலம் ஆலந்தி என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ ஞானேஸ்வரரின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு பக்தர்களுடன் புறப்படுகிறது. இவை சரியாக ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரம் சென்று சேரும் வகையில் பல நாட்களுக்கு முன்பாகவே புறப்பட்டு வருகிறது . ஆங்காங்கே பல ஊர்களிலிருந்தும் மக்கள் வழியில் சேர்ந்துகொள்ள பக்தர்கள் வெள்ளம் ஆஷாட ஏகாதசியன்று பாண்டுரங்கனின் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டு பண்டரிபுரத்தில் பிரவேசிக்கிறது.

 

Leave a Reply