திருப்புகழ் கதைகள்: திருப்பரங்குன்ற தலத்து பாடல்!

ஆன்மிக கட்டுரைகள்

thirupugazhkathaikal 1
thirupugazhkathaikal 1

திருப்புகழ் கதைகள் பகுதி 18
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

திருப்பங்குன்றம் தலத்து ‘அருக்கு மங்கையர்’ பாடல்

ஓம் நமோ நாராயணாய,  என்று வைணவ பெரிய திருமந்திரத்திலும், ஓம் பிரசன்னாஞ்சநேயம் பிரபா திவ்யகாயம் என்று மாத்வர்களது திருமந்திரத்திலும், ஓம் பகவதி பாக்யவதி என்று சாக்தேயர்களது திருமந்திரத்திலும், ஓம் கஜமுகாய அஜ முகாய நம: என்று கணாதிபத்தியர்களது திருமந்திரத்திலும், ஓம் சரஹனபவஷண்முகதேவ என்று கெளமார்த்தர்களது திருமந்திரத்திலும், ஓம்ஸ்ரீ சாயாசுவர்சலா சமேத சூர்ய நாராயண ஸ்வாமினெ நம என்ற சௌர மார்க்கத்தாரின் திருமந்திரத்திலும் ஓம் முதன்மையாக நின்று ஒலிக்கின்றது .

வேதங்களுக்கெல்லாம் நானே பிரணவமாய் இருக்கிறேன் என்று ஶ்ரீ கிருஷ்ணபகவான் பகவத்கீதையிலும், நான் அகார உகர மகாரம்ஆக இருக்கிறேன் என்று மைத்தேயருக்கு மகாதேவன் உபதேசித்தாரென்று மாண்டூக்ய உபநிடத்திலும் குருகுலவாசத்தால்அறியத்தக்க பிரமஸ்வரூபமாயிருக்கிற இந்தப் பிரணவம் ஓமென்பதேயாம் என்று யமதேவன், நசிகேதன் என்பவருக்கு வுபதேசித்தாரென்று மாண்டூக்ய வுபநிஷத்து கெளடபாதக பிரணவத்தியான விதி மூன்றாவது வல்லியிலும்,  கூறப்பட்டிருக்கிறது.

எழுவகை முனி என்பதன் விளக்கமாவது – முனிவர் என வரவேண்டியது முனியென ஒன்றன்பாலில் வந்தது. இது பால்வழுவமைதி. இவர்கள் சப்த ரிஷிகளாவர். அகத்தியர், ஆங்கீரசர், கௌதமர், காசிபர், புலத்தியர், மார்க்கண்டர், வசிட்டர் (அத்ரி, ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரசர் ஆகிய 7 ரிஷிகள் என்றும் சொல்வதுண்டு)

இம்முனிவர் எழுவர்க்கும் முருகப் பெருமானே குருமூர்த்தியாக எழுந்தருளி உபதேசித்தனர். இம் முனிபுங்கவர்கள் குகமூர்த்தியின் சீடர்கள் என்பதனால் அப்பெருமானைப் பாடி வழிபட்டுளார் என்றும், அவர்களது பாடலில் பொருள்வடிவாக குகமூர்த்தி எழுந்தருளி வருகிறார் என்றும் அருணகிரியார் பிறிதோரிடத்தில் கூறியிருப்பதைக் காண்க.

“வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
 அகத்ய மாமுனிய யிடைக்காடர் கீரனு
 வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே”
                                                                            — (விலைக்கு) திருப்புகழ்.

சரவணபவ என்ற சொல்லின் மூலமாக தேவர்களது இன்னலை நீக்குவான் கருதி பிறப்பும் இறப்பும் இல்லா நெடுஞ்சுடர் வடிவேலண்ணல், சரவண தடாகத்தில் ஆறுமுகங்களும் (நெற்றிக் கண்ணோடு) பதினெட்டு விழிகளும், பன்னிரு தோள்களுமாக வெளிப்பட்டனர் என்றசெய்திசொல்லப்பட்டுள்ளது.

குகன் என்ற சொல்முருகன் குறிஞ்சி நிலத் தெய்வமாய் இருத்தலினால் “மலைக்கு நாயக” என்ற பொருள் தரும். அதாவது மலைக் குகைகளில் வசிப்பவன் என்பது பொருள். குகை என்பதனை இதயக்குகை எனவும் கொள்ளலாம்.

இதனை தகராகாசம் என்பர். இதய ஆகாசம் வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும்.

பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். “த்” என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப் பெறும் இடம் தகராகாசம் ஆகும்.

“த”கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு – மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ என எண்ணத் தோன்றுகிறது.

தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப் படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும் ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை “உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி” எனப் பாடி மகிழ்கின்றார்.

தகரமாகிய இதய புண்டரீகத்தில் சிதாகாசமாகிய வித்தை இருத்தலின் அது தகர வித்தை என்றும் சொல்லப்படும்.

இந்த இதய குகையில் இருப்பவன் குகன் எனப்படுவன். அதனால், குகனாகிய முருகன் சகல ஆன்மாக்களின் இதய கமலங்களில் வாசஞ் செய்கின்ற அந்தர்யாமி எனலாம்.

இங்கித மிலகிய அறுமுகஎழில் வேள் – முருகப் பெருமானது ஆறுமுகங்களிலும் மாறா இன்பம் இலகுகின்றது.அழகு மிக்கோன் ஆன படியால் அப்பெருமானை எல்லோரும் விரும்புகின்றனர்.

திருப்புகழ் கதைகள்: திருப்பரங்குன்ற தலத்து பாடல்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply