பார்க்கும் பார்வையில் பரம்பொருள்!

ஆன்மிக கட்டுரைகள்

vishnu
vishnu

ஓர் அற்புதமான சிற்பி, தீவிர கிருஷ்ணன் பக்தர், பார்க்கும் பொருள் அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணன் தோற்றமாய் வடிப்பவர், ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.

ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ‘ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?’ என்று கேட்டார்.

‘தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான ஸ்ரீ கிருஷ்ணன் சிலை ஒன்றை உருவாக்கினார்.

அந்த ஸ்ரீ கிருஷ்ணன் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர். அப்படிக் கேட்டவர்களுள் அந்த கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.

முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்த கிருஷ்ணன் சிலையைப் பெற்றுக் கொண்டு கடையில் வைத்து அலங்காரம் செய்தார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், ‘இந்த அற்புதமான ஸ்ரீ கிருஷ்ணன் சிலைக்குரிய கல்லை நீங்கள் எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?’… என்று கேட்டார்.

krishna
krishna

அதற்கு சிற்பி, ‘வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரரோ மிகவும் வியந்தார்.

ஆம். ஐயன்மீர்… தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் பகவானை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உருவம் வெளிப்பட்டது!’ என்றார்.

தேவையற்ற வாதங்களை, வார்த்தைகளை, செயல்களை நம் வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவ்வொருவரும் நம்மை போற்றும் வகையில் இறை தொண்டனாய் வாழ்ந்து காண்பிக்கலாம்.

பார்க்கும் பார்வையில் பரம்பொருள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply