பட்டாடையை விட பரம பக்தன் தரும் நூலாடையை ஏற்ற விட்டல்!

ஆன்மிக கட்டுரைகள்

panduranga
panduranga

மதுரா நகர் மன்னரிடம், அமைச்சராக இருந்தவர் திருபுரசுந்தரர். சிறு வயதில் இருந்தே மிகுந்த தெய்வ பக்தி உள்ளவர்.

ஒரு கால கட்டத்தில், ‘இவ்வுலக இன்பங்கள் எதுவுமே நிலையானது அல்ல; பகவான் மட்டுமே நிலையானவர்…’ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, தன் பதவியைத் துறந்தார்.

அத்துடன் தன் செல்வங்கள் அனைத்தையும் ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்தவர், ஒரு யாசக பாத்திரத்துடனும், தன் மனைவியுடனும் திருத்தல யாத்திரைக்கு புறப்பட்டார்.
இருவருமாக, ஊர் ஊராக, வீதி வீதியாக பகவானின் புகழைப் பாடி யாசகம் செய்து, கிடைத்ததை கொண்டு வாழ்ந்து வந்தனர்.

பண்டரிபுரத்தை அடைந்ததும், அங்கேயே தங்கி, பாண்டுரங்கனின் மகிமையை சொல்லி, கதாகாலட்சேபம் செய்து வந்தனர். மக்கள் அவரை பாண்டுரங்க திருபுரதாசர் என அன்புடன் அழைத்தனர்.

இந்நிலையில் ஒரு நாள், பாண்டுரங்கனுக்கு சாற்றப்பட்ட ஆடைகள், பழசாகிப் போனதால், ஊர் முக்கியஸ்தர்களும், செல்வந்தர்களும் பாண்டுரங்கனுக்கு பளபளக்கும் பட்டாடைகளை காணிக்கையாக வழங்க முன் வந்தனர்.

அதற்காக, விசேஷ பூஜை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. தகவல் அறிந்த திருபுரதாசரும், பாண்டுரங்கனுக்கு ஒரு ஆடை வாங்க நினைத்தார்.

அதனால், தன்னிடமிருந்த பிச்சை பாத்திரத்தை விற்று, அதில் கிடைத்த சொற்ப காசைக் கொண்டு, ஒரு நூல், அங்கவஸ்தரத்தை வாங்கி வந்தார்.

அர்ச்சகரோ, செல்வந்தர்கள் அளித்த பட்டாடைகளை வாங்கி, ஸ்வாமிக்கு சாற்றினாரே தவிர, திருபுரதாசர் அளித்ததை அணிவிக்கவில்லை.

மாறாக, அதை வாங்கி, கோயில் அர்ச்சகர், சன்னிதியின் வெளியில் வீசியெறிந்தார். இதைப் பார்த்து, மிகுந்த மன வருத்தத்துடன் வெளியேறினார் திருபுரதாசர்.

அன்றிரவு நேரம் கடந்து விட்டதால், சன்னிதியிலேயே படுத்து விட்டார் அர்ச்சகர். நள்ளிரவில், சன்னிதிக்குள் திடீரென்று குளிர் காற்று வீச துவங்கியது.

இதனால், தூக்கத்திலிருந்து விழித்த அர்ச்சகர், கர்ப்பகிரகத்தில் பாண்டுரங்கனின் விக்கிரகம், குளிரில் நடுங்குவதைப் பார்த்து, திகைத்து, பயந்து போய் ஊர் மக்களை கூட்டி விட்டார். தகவல் தெரிந்து திருபுரதாசரும் அங்கு வந்தார்.

பகவானின் திருமேனி நடுங்குவதை பார்த்து, கூடியிருந்த அனைவரும், வீட்டிலிருந்த விலை உயர்ந்த சால்வைகளையும், கம்பளிகளையும் எடுத்து வந்து கொடுத்தனர்.

அவற்றை வாங்கி பகவானுக்கு போர்த்தினார் அர்ச்சகர். அப்போதும் நடுக்கம் நிற்கவில்லை. அனைவரும் பதறினர்.

அப்போது, கருவறையிலிருந்து, அசிரிரி….’பக்தர்களே… பயம் கொள்ளாதீர்கள்.

எவன் ஒருவன் என் மீது கொண்ட மாசற்ற அன்பால் சிறு துரும்பைக் கூட எனக்கு காணிக்கை ஆக்குகிறானோ, அதுவே என் மனதை குளிர்விக்கும்.

என் பக்தன் திருபுரதாசனின் அன்புக் காணிக்கையை அலட்சியப்படுத்தி, அவனை அவமானப்படுத்தியதன் விளைவால் என் உடல் நடுங்குகிறது.

அவர் அன்புடன் கொடுத்த வஸ்திரத்தால் என் திருமேனியை போர்த்துங்கள் என்ற அசிரீரி கேட்டது.

தன் தவறை உணர்ந்த அர்ச்சகர், திருபுரதாசரின் கால்களில் விழுந்து, மன்னிக்கும்படி வேண்டினார்.

தான் வீசியெறிந்த நூலாடையை தேடிப் பிடித்து, பகவானின் திருமேனியில் போர்த்தினார்; பகவானின் நடுக்கம் நின்றது.

உத்தம பக்தரான திருபுரதாசரின் அன்பு காணிக்கையின் அடையாளமாக தான், இன்றும் பண்டரிபுரத்தில் பகவானின் திருமேனியில், சாதாரண நூல் அங்கவஸ்திரம் சாற்றப்படுகிறது..

பட்டாடையை விட பரம பக்தன் தரும் நூலாடையை ஏற்ற விட்டல்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply