திருப்புகழ் கதைகள்: ராமாயணக் கதை!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 57
அனிச்சம் கார்முகம் (திருச்செந்தூர்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

போருக்குரிய சங்குகள் போல ‘ஓ’ என்று ஒலிக்கும் நீலநிறத்தையுடைய பெரிய சமுத்திரத்தை (வானர வீரர்களைக் கொண்டு) அணை கட்டி, பகைவர்களுக்குப் பயப்படாத இராவணனது உயர்ந்த மணிமகுடந்தரித்த பல தலைகளையும் அறுப்பதற்கு, அந்நாளில் ஒரே ஒரு அம்பினை விடுத்த இரகு வம்சத்தில் அவதரித்த இராமபிரானது திருமருகனாக விளங்குபவரே – என்று இராமாயணக் கதையை…

முனைச்சங் கோலிடு நீலம கோததி
அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் …… மருகோனே

என்ற இத்திருப்புகழில் உள்ள மூன்று வரிகளால் பாடுகிறார் அருணகிரியார். இராமாயண பாராயாணத்தைத் தினமும் செய்ய ஏதுவாக ஏகஸ்லோகீ ராமாயணம் என்பதை எழுதினர். அந்த ஸ்லோகம் பின்வருமாறு

ஆதௌ ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ ஸம்பாஷனம்
வாலி நிக்ரஹனம் சமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹரணம் ஏததி ராமாயணம்

இதனையே தமிழில்

தாதையார் சொலராமன் காடு போதல்
சார்ந்துளபொன் மானெனுமா ரீசன் சாதல்
சீதையார் பிரிவெருவை மரணம் பானு
சேயொடுநட் புக்கோடல் வாலி வீடல்
ஓதநீர்க் கடற்பரப்பை அநுமன் தாண்டல்
உயரிலங்கை நகரெரியால் வேகக் காண்டல்
பாதகராம் அரக்கரெலாம் இறக்கத் தாக்கல்
பாக்கிய ராமாயணச்சீர் காதை யீதே!
– என்று பாடியுள்ளனர்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கல்லாடர் என்ற புலவர் ஒரே சொற்றொடரில் இராமகாதையை இயற்றியுள்ளார். அந்த ஒரு வரி இராமாயணம் இதோ –

தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப,
உழல் தேர் பத்தினன் மகவு என நாறி,
முனிதழற் செல்வம் முற்றி,
பழங்கல் பெண் வர,
சனகன் மிதிலையில் கொடுமரம் இறுத்து,
அவன் மகட் புணர்ந்து,
எரி மழு இராமன் வில் கவர்ந்து,
அன்னை வினை உள் வைத்து ஏவ,
துணையும் இளவலும் தொடர கான் படர்ந்து,
மா குகன் நதி விட ஊக்கி,
வனத்துக்கராதி மாரீசன் கவந்தன் உயிர் மடித்து,
இருசிறை கழுகினார்க்கு உலந்தகடன் கழித்து,
ஏறி வளை மகனை நட்டு,
ஏழு மரத்துக்கு, அரிக்கு, கருங்கடற்கு ஓரோகணைவிடுத்து,
அக்கடல் வயிறு அடைத்து,
அரக்கன் உயிர் வௌவி,
இலங்கை அவரக்கற்கு இளையோன் பெறுகேனத்
தமது ஊர் புகுந்து முடிசுமந்தோர்.

ஆதிகாவியம் என்று போற்றப்படுவது வான்மீகி ராமாயணம் ஆகும். ராமாயணம் என்றால், அது ஆதிகவியான வால்மீகி முனிவர் எழுதியதைக் குறிக்கும். நமக்குத் தெரிந்த கம்ப ராமாயணம் தவிர, ராம சரிதமானஸ் எனும் துளஸி ராமாயணம், ஆனந்த ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், அத்புத ராமாயணம், அமல ராமாயணம், ரகு வம்சம் உட்பட 120 ராமாயணங் கள் உள்ளன.

இவை தவிர சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் ராமாயணம் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. இத்தகைய ராமாயணத்தை, சந்தக் கவியான அருணகிரிநாதரும் தமது திருப்புகழில் பல பாடல்களில் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்களில் மற்றவர்கள் சொல்லாத பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு திருப்புகழையும் பற்றி எழுதும்போது இராமாயணம் பற்ரி மீண்டும் மீண்டும் சொல்லாமல் இங்கே அருணகிரியார் பாடியுள்ள இராமாயணக் கருத்துக்களை ஒருசேரத் தொகுக்க முயன்றுள்ளேன்.

பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்று வால்மீகி முனிவரின் வரிசைப்படியே, அருணகிரிநாதரின் பாடல்களை நாளைப் பார்க்கலாம்.

திருப்புகழ் கதைகள்: ராமாயணக் கதை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply