விடுதலையும், மகிழ்வும் எதில் இருக்கிறது? ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

Bharathi theerthar - 7
Bharathi theerthar - 6

ஈச்வர ஸாக்ஷாத்காரத்தை முக்தி என்றும் கூறலாம். முக்தி என்றால் “விடுதலை” என்று அர்த்தம். எதிலிருந்து விடுதலை? பந்தங்களிலிருந்து விடுதலை.

“பந்தம்” என்று இங்கு எதைக் குறிப்பிடுகிறோம்? பிறப்பு –இறப்பு விஷயங்களே பந்தம் என அழைக்கப்படுகின்றன.

இப்போது இந்த வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. இதற்கு முன்பு எத்தனையோ பிறவிகள் கிடைத்தாயிற்று. இன்னும் எத்தனையோ பிறவிகள் வர இருக்கின்றன!

இங்கு ஒரு கேள்வி எழலாம். “பிறவிகள் ஏற்பட்டால் என்ன? இதனால் என்ன பெரிய பிரச்சினை வந்துவிடப் போகிறது?” என்று சிலர் நினைக்கலாம்.

மீண்டும் மீண்டும் பிறப்பு-இறப்புச் சக்கரத்தில் உழல்வதால் மனிதன் சந்தோஷத்தை இழந்துவிடுகிறான். இதுதான் பிரச்சினை!

மீண்டும் ஒரு கேள்வி எழலாம். “என்ன இது ஸ்வாமிகளே! சந்தோஷம் இல்லை எனக் கூறுகிறீர்களே? நாங்கள் செளக்கியமாகச் சாப்பிடுகிறோமே!” செளக்கியமாகத் தூங்குகிறோம். வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறோமே! என்று கேட்டால், இங்கு நாம் நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். நன்றாகச் சாப்பிட்டுத் தூங்குவது உண்மையான சந்தோஷத்திற்குக் காரணமாகி விடுமா? நிச்சயமாக இல்லை.

ஏனெனில், இவை நிரந்தரமானதல்ல. இம்மாதிரியான சந்தோஷங்களுக்கு ஒரு முடிவு உண்டு. அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் வைத்தியரிடம் போக வேண்டிய நிலை உண்டாகிவிடுகிறது.

உணவில் சுவை அதிகமாக அதிகமாக நாம் வைத்தியரிடம் போக வேண்டிய தேவையும் அதிகமாகிறது. எனவே இது போன்ற இன்பத்தால் என்ன பயன்? அவ்வாறே ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின்னர் நாம் எழுந்ததும், சரீர உபாதைகள், அலுவலக கஷ்டங்கள், குடும்பத் தொல்லைகள் என்று பல்வேறு எண்ணங்கள் நம் மனதிற்கு வந்துவிடுகின்றன.

நாம் அலுவலகத்திற்குச் சென்று அனைவரிடமும் படவேண்டிய கஷ்டத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, தூக்கமும் நிலையான சந்தோஷத்தைத் தருவதில்லை.

விடுதலையும், மகிழ்வும் எதில் இருக்கிறது? ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply