பக்தனுக்காக பகவான் வளர்த்த கேசம்!

ஆன்மிக கட்டுரைகள்

jakanathar
jakanathar
jakanathar

பூரியில் தலிசா மோஹபத்ரா என்ற பக்தர் வசித்து வந்தார். பகவான் ஜெகந்நாதரின் அர்ச்சகர்களுள் அவரும் ஒருவர்; சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த நிபுணர். நாள் முழுவதும், பகவான் ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவியின் மூர்த்திகளுக்கு தனிப்பட்ட முறையில் சேவை செய்து வந்தார். இந்த மூர்த்திகள் தான் அவருக்கு எல்லாம்.

ஒரு நாள் அரசர் தன் பரிவாரங்களுடன் பூரிக்கு வந்தார். அரசர் பகவான் ஶ்ரீ ஜெகந்தாதரை தரிசிப்பதற்கு விரும்பினார். வழக்கமாக கோயிலுக்கு தரிசிக்க வரும் அரசர் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு அலங்காரம் செய்யப்பட்ட மலர்மாலை மகாபிரசாதத்தை கேட்பது வழக்கம்.

“ஜெகந்நாதரின் பிரசாதம் அரசருக்கு கிடைக்காமல் போனால் அரசரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் ” என்று மோஹபத்ரா நினைத்து தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி, அதை பகவான் ஜெகந்நாதருக்கு அணிவித்தார்.

அரசர் சந்நிதிக்கு வந்து மூர்த்திகளை தரிசித்தார். வழக்கம் போல், தரிசனம் முடிந்த பிறகு, அரசர் அர்ச்சகரிடம், ‘எனக்கு மலர் மாலை பிரசாதம் கிடைக்குமா’ என்று கேட்டார்.

தன் கையை கழுவிக் கொண்டு, திருமேனியிலிருந்து மலர்மாலை பிரசாதத்தை கழற்றி அரசரிடம் கொடுத்தார். அரசர் பிரசாதத்தை பணிவுடனும் பக்தியுடனும் பெற்றுக் கொண்டு, அரண்மனைக்குத் திரும்பினார்.

மலர்மாலை நேர்த்தியாய், விசேஷ நறுமணம் கொண்ட வெள்ளை பூக்களால் தொடுக்கப்பட்டிருந்தது. சிம்மாசனத்தில் உட்கார்ந்த அரசர் மலர் மாலையை உற்றுப்பார்த்தார்.

நீண்ட கரு முடி ஒன்று அதில் ஒட்டியிருந்தது கவனித்தார். “இது மிகவும் வினோதமாயிருக்கிறது. எப்படி இந்த தலைமுடி மாலையில் இருக்கமுடியும்?

ஜெகந்நாதருக்கு தலையில் முடியே கிடையாதே. இந்த பிராமணர் தன் கழுத்திலிருந்த பூமாலையைக் கழற்றி, பகவான் ஜெகந்நாதருக்கு அணிவித்து, பிறகு ‘இது ஜெகந்நாதருடைய பிரசாதம்’ என்று சொல்லி கொடுத்துவிட்டார் போலும், என்று அரசர் சந்தேகம் கொண்டார்.

மோஹபத்ராவை உடனடியாக அரண்மனைக்கு அழைத்து வரக் கட்டளையிட்டார். மோஹபத்ராவை அரசர் முன் அழைத்து வந்தபோது, அரசர் மிகுந்த கோபத்தில் இருகிறார் என்று தெரிந்து. “பகவானுக்கு அர்ப்பித்த மாலையில் ஒரு நீண்ட தலைமுடி இருந்ததைப் பார்த்தேன்.

எப்போதிலிருந்து பகவானுக்கு தலையில் கேசம் முளைக்க ஆரம்பித்தது என்று கூறவும்? உண்மையைச் சொல்லாவிடில் மரணத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.” என்றார் அரசர். மோஹபத்ரா அச்சம்மேலிட, அவர் பிரார்த்தித்தார்.

“பிரபோ, தயவுசெய்து ரட்சிக்கவும். எனக்குத் தெரியும் இந்த அரசர் கடுமையானவர் என்று. எந்த மாதிரி தண்டனையை அவர் தருவாரோ, யார் கண்டது! ஒரு பொய்யைச் சொல்லி தண்டனையிலிருந்து தப்பிப்பதுதான் சிறந்தது.” ஆகவே மோஹபத்ரா அரசரிடம் சொன்னார்: “ஆம், நிஜம்தான். இப்போது சிறிது காலமாக பகவானின் சிரசில் தலைமுடி வளர்ந்து வருகிறது.”என்றார்.

அரசர் சொன்னார்: “அர்ச்சகரே “நாளை நான் கோயிலுக்குப் வரும்போது. பகவான் ஜெகந்தாதரின் தலையில் முடி வளர்ந்திருப்பதை நீங்கள் எனக்கு காட்டவில்லை எனில் உன் தலை தப்பாது என கோபமாக கூறினார்

தலிசா மோஹபத்ரா பகவான் முன் விழுந்து சேவித்தார். “ஓ பிரபோ, தாங்கள் பாவக்ரஹி, என் கழுத்திலிருந்த மாலையை தங்கள் கழுத்தில் மாற்றத் துணிந்த நான் , . அரசரால் தண்டிக்கப்படுவதில் விருப்பமில்லை. தாங்கள் கருணைவாய்ந்தவர். இன்று இரவு முடிந்தவுடன் அரசன் என்னை அழைத்துப் போய், கடும் தண்டனை தருவார்.

அரசன் பிடித்துக் கொண்டு போவதற்கு முன்னால் நான் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வது சிரேஷ்டமானது.” இவ்வாறு புலம்பிய பிறகு மோஹபத்ரா கோயில் கதவைச் சாத்திவிட்டு, தன் வீட்டிற்குச் சென்றார்.

பகவான் ஜெகந்நாதர், தன்னை காப்பாற்றுவதற்கு ஏற்பாடு செய்யாவிட்டால், இரவு முடியும்போது விஷமருந்தி உயிரை விட்டுவிடுவதென்ற முடிவுடன் தன் பக்கத்தில் விஷம் அடங்கிய சீசா ஒன்றை கையில் வைத்துக்கொண்டு. ஏதாவது அற்புதம் நடக்கும் என்று எதிர்பார்த்து தூங்கச் சென்றார்.

பக்தனின் மனதை பகவான் ஜெகந்நாதர் அறிந்தார். தலிச மோஹபத்ரா தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்கு பகவான் வந்தார். பகவான் அவருக்கு கனவில் தோன்றி கூறினார்: “ஏன் நீ இவ்வளவு பயந்து போயிருக்கிறாய்? எனக்கு சேவை செய்த உனக்கு பயப்பட ஒன்றுமேயில்லை.

நான் இந்த நீலாசலத்தில் இருக்கும் வரை, இந்த அரசரால் உன்னை என்ன செய்ய முடியும்? கோடி அரசர்கள் வந்தாலும் உனக்கு தீங்கிழைக்க முடியாது, ஏன் இந்த அரசரை பார்த்து இவ்வளவு அஞ்சுகிறாய்? நான் என்ன வழுக்கையனா?

என் தலையில் கேசம் இருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அஞ்சாதே. நாளை கோயிலுக்குப் போகவும், என் தலையில் கேசம் நிறைய படர்ந்திருப்பதை நீபார்ப்பாய். அதை நீ அரசருக்கு காட்டலாம்.” என்றார்.

மோஹபத்ரா கண்விழித்துப் பார்த்தார். அருகில் யாரும் இல்லை. கனவு மூலமாக பகவான் தனக்கு கருணை காட்டினாரோ என்று நினைத்தார்.

அதிகாலை அரசர் கோயிலுக்கு வந்தார். “பகவானுடைய தலையில் முடியைக்காட்டும்” என்று மோஹபத்ராவிடம் அதிகாரத் தொனியில் பேசினார். பயமில்லாமல், “உங்களுக்கு காட்டுவதற்கு என்ன இருக்கிறது? நீங்களே பகவானுக்கு நெருக்கமாய் போய் கேசம் இருக்கிறதா இல்லையா என்று பார்த்துக் கொள்ளவும்,” என்று கூறினார்.

அரசர் திருமேனிக்குப் பின்னால் போய் நீண்டு சுருண்ட கருமுடி திருமூர்த்தியின் இடுப்பைத் தொடுவதைப் பார்த்து திகைத்தார். பூஜாரியிடம் அரசர் கேட்டார்:

“பகவான் சிரசில் நீங்கள் இந்த முடியை பசை கொண்டு ஒட்டிவைத்தீரா? அல்லது இது பகவான் தாமே வளர்த்துக் கொண்ட நிஜ முடியா?” என்று கேட்டார். “முடி நிஜமா போலியா என்பதை நீங்களே பரிசோதித்துப் பார்க்கலாம். என்றார்

மோஹபத்ரா ” ஜெகந்நாதரின் சிரசிலிருந்த சில முடிக் கற்றைகளை அரசர் இழுத்து பார்த்த போது உடனடியாக திருமேனியின் சிரத்திலிருந்து, ரத்தம் கசிய ஆரம்பித்தது. இதைப் பார்த்ததும் அரசர் மூர்ச்சையடைந்து தரையில் விழுந்தார்.

கண் விழித்ததும் அரசர் ஓடி சென்று மோஹபத்ராவிடம் பாதத்தைப் பற்றிக் கொண்டார். “தயவு செய்து என்னைக் காப்பாற்றவும். நான் மாபெரும் மூடனும் . பகவானுக்கு பெருத்த அபசாரம் இழைத்தவனும். ஆவேன்

அதனால் பக்தவத்சலனான பகவான் ஜெகந்நாதரின் கருணையை அறியாமல் இருந்தேன். இப்போது எனக்குப் புரிகிறது பகவானுக்கும் பக்தனுக்கும் வித்தியாசமில்லை என்று, தன் பக்தனுக்கு இழைத்த எந்த அபசாரத்தையும் தனக்கு இழைக்கப்பட்ட அபசாரமாகவே பகவான் எடுத்துக் கொள்கிறார். அரசர் மோஹபத்ராவின் பாதத்தில் விழுந்தார்.

பக்தனுக்காக பகவான் வளர்த்த கேசம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply