திருப்புகழ் கதைகள்: ஜபமாலை!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 147
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அபகார நிந்தை – பழநி
ஜபமாலை

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றி ஏழாவது திருப்புகழ் ‘அபகார நிந்தை’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “உபதேச மந்திரப் பொருளால் உனை நினைந்து உய்ய அருள்புரிவாயாக” என அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

அபகார நிந்தைபட் …… டுழலாதே
அறியாத வஞ்சரைக் …… குறியாதே
உபதேச மந்திரப் …… பொருளாலே
உனைநானி னைந்தருட் …… பெறுவேனோ
இபமாமு கன்தனக் …… கிளையோனே
இமவான்ம டந்தையுத் …… தமிபாலா
ஜெபமாலை தந்தசற் …… குருநாதா
திருவாவி னன்குடிப் …… பெருமாளே.

“யானை முகமுடைய கணேச மூர்த்தியின் இளைய சகோதரரே. இமவானாகிய மலையரசன் மகளாகிய உத்தமியின் திருக்குமாரரே. ஜெபமாலையை அடியேனுக்கு அருளிய சற்குரு நாதரே. திருவாவினன்குடியில் வாழ்கின்ற பெருமிதம் உடையவரே. தீமைகள் செய்து அதனால் பழிக்கு ஆளாகி அலையாமலும், மூடர்களாகிய வஞ்சகர்களுடன் இணங்காமலும் நீர் அடியேனுக்கு உபதேசித்த உபதேச மந்திரத்தையே தியானித்து உம்மையே நினைந்து திருவருளை அடியேன் பெறக்கடவேனோ?” – என்பது இப்பாடலின் பொருளாகும்.

என்னுடைய சிறு வயதில் எனக்கு என்னுடைய தாயார் சொல்லிக் கொடுத்த திருப்புகழ் இது. மிகச்சிறிய திருப்புகழ்; கடினமான தாளக்கட்டு கிடையாது; எனவே எளிதில் பாட இயலும். பாவங்களைச் செய்வோர் இம்மையில் பழியும் பாவமும் எய்துவார்கள். அங்ஙனம் பாவங்களைப் புரிந்தோர் நரகத்திற்குச் சென்றும், பின்னர் நீண்ட காலம் பல பிறவிகளில் பிறந்தும் உழன்றும் துன்புறுவார்கள். இவ்வாறு எண்ணில்லாத காலமாக ஆன்மாக்கள் உழலுகின்றன. இந்தச் செய்தியை அருணகிரியார் அபகார நிந்தைபட் …… டுழலாதே என்ற வரியில் குறிப்பிடுகிறார்.

நன்மை தீமையறியாத வஞ்சகர்களுடன் இணங்கக் கூடாது. தீ நட்பு நம்மை அழித்துவிடும் என்ற செய்தியை “அறியாத வஞ்சரைக் குறியாதே” என்ற வரிகளிலே அருணகிரியார் குறிப்பிடுகிறார். இதனையே திருவள்ளுவர் “தீ நட்பு” என்ற அதிகாரத்தில் நமக்கு எடுத்துரைக்கிறார்.

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். (குறள்-818)

நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்யவிடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கிவிட வேண்டும்

japamalai
japamalai

உபதேசம் மந்திரம் என்று சொல்லும்போது, ‘உப’ என்றால் சமீபம்; ‘தேசம்’ என்றால் இடம். இறைவனுடைய அருகில் நம்மை அழைத்துச் செல்லும் கிரியை உபதேசம் ஆகும். மந் என்றால் நினைப்பவரை; த்ரா-காப்பற்றுவது, அதாவது நினைப்பவரைக் காப்பாற்றுவது மந்த்ரம். இது குருநாதன் மூலம் செவியில் கேட்டு சிந்தனையில் வைத்து, உதடும் நாவும் அசையாமல் மனதால் ஜெபிப்பது.

‘இமவான் மடந்தை உத்தமி பாலா’ என்ற வரிகளில் “சிவநிந்தை செய்த தக்கனுடைய மகள் என்ற பெயர் இனி தாங்க மாட்டேன் என்று எம்பிராட்டி அவன் வளர்த்த உடம்பையும் பெயரையும் விடுத்து, பர்வதராஜநானாகிய இமவானின் குமாரியாக வந்ததனால் உத்தமியென்று பேர் பெற்றார்” என்ற செய்தியைச் சொல்லுகிறார்.
‘ஜெபமாலை தந்த சற்குருநாதா’ என்ற வரியில் அருணகிரிநாதருக்குத் திருவாவினன்குடியில் முருகப் பெருமான் ஜபமாலை தந்தருளினார் என்ற வரலாற்றைச் சொல்லியுள்ளார். ஜபமாலை 108 மணிகள் கொண்டது. ஜபம் புரிகின்றவர்களில், இம்மைப் பயன் கருதுவோர் கீழ் நோக்கியும், முத்தி நலம் கருதுவோர் மேல் நோக்கியும் நாயகமணி தாண்டாது ஜபிக்கவேண்டும். ஜபமாலை பிறர் கண்ணுக்குத் தோன்றா வண்ணம் பட்டுத் துணியில் மறைத்து, ஓசை உண்டாகாமல், மெல்ல பயபக்தியுடன் ஜபமாலையைப் பிடித்துக் கொண்டு ஜபிக்கவேண்டும்.

மந்திர ஜெபம் செய்யும் பொழுது கைகளில் ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்துவது வழக்கம். தாமரை மணிமாலை, ஸ்படிக மணி மாலை போன்றவையும் ஜெபம் செய்ய சிறந்ததாக இருந்து வருகிறது.

எனவே ஜெபம் செய்வதற்கு கைகளில் பிரத்தியேக ஆன்மீக சம்பந்தப்பட்ட மணி மாலைகளை வாங்கி வைத்துக் கொள்ளுவது நல்லது. அதேபோல் ஜெபம் செய்யும் பொழுது வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது. கம்பளித் துணி விரித்துக் கொள்ள வேண்டும் அல்லது தர்பை புல், தர்பை பாய் பயன்படுத்தலாம்.

இத்தகைய ஜப மாலைகளை கழுத்தில் எப்போதும் அணியும்போது பல கடுமையான நியமங்களைக் கடைபிடிக்கவேண்டும். பொய் சொல்லக் கூடாது; போதை வஸ்துக்களைப் பயன்படுத்தக் கூடாது; கோபப்படக் கூடாது; இனிமையான சொற்களைப் பேசவேண்டும்.

ஜபங்கள் பல வகைப்படும். ஒவ்வொன்றும் ஒருவகையில் சிறப்பானது,

அகண்ட ஜபம்: இதில் புனித மந்திரமானது ஒரு குறிப்பிட்ட நேரம் இடைவிடாமல் ஜபிக்கப்படுகிறது. இதை கூட்டு வழிபாடாகவும் செய்வது வழக்கம். மிக நீண்ட நேரம், பலரால் சேர்ந்து செய்யப்படும் ஜபம், ‘ஜபயக்ஞம்’ என்று அழைக்கப்படுகின்றது. இக்காலத்தில் நாம் செய்யும் “ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே” நாம் ஜபத்தை அகண்டநாம பஜனை எனச்சொல்லுகிறோம்.

அஜபா ஜபம்: இறைவன் நாமத்தை எந்த நேரமும் ஒவ்வொரு மூச்சுடனும் இடைவிடாமல் ஓதி வருவதே அஜபா ஜபமாகும்.

ஆதார சக்ரங்களில் ஜபம்: இந்த முறையில் நமது உடலிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி, சக்ஸ்ராரம் வரையிலுள்ள ஒவ்வொரு சக்ரத்திலும் மனதை நிலைநிறுத்தி ஜபமும், தியானமும் பழகப்படுகிறது.

புரஸ்சரணம்: இதில் ஒவ்வொரு நிலையையும் தாண்டி சக்ஸ்ராரத்தை அடைந்தவுடன் சாதகனானவன், மீண்டும் சகஸ்ராரத்தில் தொடங்கி ஒவ்வொரு ஆதாரமாக மனதை நிறுத்தி ஜபம் செய்வது புரஸ்சரணம் எனப்படும்.

வாசிக ஜபம்: உரக்க வாய்விட்டு ஜபம் செய்வது வாசிக ஜபம் எனப்படும். நாம் வாய்விட்டு சொல்லும்போது கேட்பவர்களுக்கும் பலன் கிடைக்கும்.

உபாம்சு ஜபம்: ஒலி வெளியே எழுப்பாமல், உதடுகளும் நாக்கும் அசைய மந்திரத்தை உச்சரிப்பது உபாம்சு ஜபம் எனப்படும்.

மானஸ ஜபம்: இந்த முறையில் புனித மந்திரம் மனதிற்குள்ளேயே ஜபிக்கப்படுகிறது.

லிகித ஜபம்: புனித மந்திரத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எழுதுவது என்பது லிகித ஜபமாகும்.

சாதாரண பூஜையைக் காட்டிலும் வாசிக ஜபம் பத்து மடங்கு மேலானது. அதைவிட உபாம்சு ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது, உபாம்சு ஜபத்தைக் காட்டிலும் மானஸ ஜபமானது 1000 மடங்கு உயர்ந்தது, அதிகமான விரைவாக பலனை தர கூடியது. என்று “மனு சம்ஹிதை” கூறுகிறது.

திருப்புகழ் கதைகள்: ஜபமாலை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply