திருப்புகழ் கதைகள்: பறித்த தலை அமணர்!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் – 195
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

குறித்தமணி – பழநி
பறித்த தலை அமணர்

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிநாற்பத்தியொன்பதாவது திருப்புகழ், ‘குறித்தமணி’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “முருகா, மாதர் மயக்கம் அற்று, புகழ் பெற, திருவடியைத் தந்து அருள்”என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

குறித்தமணிப் பணித்துகிலைத்
திருத்தியுடுத் திருட்குழலைக்
குலைத்துமுடித் திலைச்சுருளைப் …… பிளவோடே

குதட்டியதுப் புதட்டைமடித்
தயிற்பயிலிட் டழைத்துமருட்
கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் …… குறியாலே

பொறித்ததனத் தணைத்துமனச்
செருக்கினர்கைப் பொருட்கவரப்
புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் …… திடுமாதர்

புலத்தலையிற் செலுத்துமனப்
ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்
புரித்தருளித் திருக்கழலைத் …… தருவாயே

பறித்ததலைத் திருட்டமணக்
குருக்களசட் டுருக்களிடைப்
பழுக்களுகக் கழுக்கள்புகத் …… திருநீறு

பரப்பியதத் திருப்பதிபுக்
கனற்புனலிற் கனத்தசொலைப்
பதித்தெழுதிப் புகட்டதிறற் …… கவிராசா

செறித்தசடைச் சசித்தரியத்
தகப்பன்மதித் துகப்பனெனச்
சிறக்கவெழுத் தருட்கருணைப் …… பெருவாழ்வே

திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத்
தடுத்தடிமைப் படுத்தஅருட்
டிருப்பழநிக் கிரிக்குமரப் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – தலைமயிரைப் பறிக்கின்ற வஞ்சகர்களாகிய சமணர்களுடைய குருமார்களாம் அசடர்களின் விலா எலும்புகள் முறியுமாறு கழுக்களில் ஏறும்படியும், திருநீறு எங்கும் பரவுமாறும் அந்த மதுராபுரியில் சென்று, நெருப்பிலும், நீரிலும், பெருமை மிகுந்த திருப்பதிகத்தை எழுதிய ஏட்டைச் செலுத்திய ஞான வலிமையுடைய கவிராசரே.

அடர்ந்த சடையில் சந்திரனைத் தரித்த பிதாவாகிய சிவமூர்த்தி மதித்து உவக்குமாறும் சிறப்புறவும் பிரணவத்தின் உட்பொருளை உபதேசித்த கருணைப் பெருவாழ்வே. விளங்குகின்ற வயலூரில் அடியேனைத் தடுத்தாட் கொண்டு அடிமை கொண்டு அருளியவரே. திருப்பழநி மலைமீது நின்றருளிய குமாரக் கடவுளே. பெருமிதம் உடையவரே. பொதுமாதர்களிடத்திலே செலுத்துகின்ற மன மயக்கமானது ஒழியவும், சிறந்த புகழை அடையவும் அன்பு கூர்ந்து அருளி, உமது அழகிய பாத மலரைத் தந்தருளுவீர்.

இத்திருப்புகழில் இடம்பெறும் பறித்த தலைத் திருட்டு அமணக் குருக்கள் என்ற வரி சமணர்கள் தலைமயிரைப் பறிப்பதைத் தமது சமய ஒழுக்கமாகக் கொண்டவர்கள் என்பதை நாம் உணருகிறோம். இதனை திருஞானசம்பந்தர் அவர்கள் “முகடூர் மயிர் கடிந்த செய்கையார்“ என்றும் அருணகிரிநாதரே வேறு ஒரு திருப்புகழில் கேசம் பறி கோப்பாளிகள் எனக் குறிப்பிடுகிறார்.

களவுத் தனம் படைத்தவர்கள், வஞ்சனையால் பலப்பல கொடுமைகள் புரிபவர்கள். இவ்வாறு ஆறாம் நூற்றாண்டிலே சில சமணர்கள் இருந்தார்கள். அப்போது அக்கொடுமையை அகற்ற வந்த அவதாரம் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தருடைய காலத்திலே எண்ணாயிரம் சமணக் குருமாரர்கள் பாண்டி நாட்டிலேயிருந்து, சைவ சமயத்தை அழித்து, சமண சமயத்தைப் பரப்பினார்கள். அக்காலை ஞானசம்பந்தர் அவதரித்து, சமணசமயத்தை அழித்து, திருநீற்று நெறியை எங்கும் பரப்பினார்.

இந்தச் செய்தியை “தத் திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலைப் பதித்து எழுதிப் புகட்ட” என்று இத்திருப்புகழில் அருணகிரியார் குறிப்பிடுவார். அனல் வாதம், புனல் வாதம் புரிந்தபோது, தேவாரப் பதிகத்தை எழுதிய ஏட்டினை இட்டு, ஆளுடைய பிள்ளையார் வென்றார்.

தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம் மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின; உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழ ராஜனது திருமகளாய், பாண்டிமா தேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும், அவருக்கு ஸ்ரீதனமாக சோழராஜனால் தரப்பட்டு வந்து பாண்டிய அமைச்சராயிருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய் அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள்.

பிறகு என்ன ஆனது?

திருப்புகழ் கதைகள்: பறித்த தலை அமணர்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply