திருப்புகழ் கதைகள்: கம்சனின் கதை!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் – 202
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

குன்றும் குன்றும் – பழநி
கம்சன்

ஓம் மஹாபுருஷாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத்

மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் ஆகும். இந்த அவதாரம் பசுக்களுடன், மனிதன் மிருகங்களை வீட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தத் தொடங்கியதையும் கால் நடை வளர்ப்பை மேற்கொண்டதையும் அன்று நிலவிய பொருளாதார மேம்பாட்டையும் காட்டும் அவதாரமாகும்.

ஆவணி மாத கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியில் இரவில் தேவகியிடத்தில் கிருஷ்ணர் அவதரித்தார். யுகங்கள் நான்கு; அவை கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பவையாகும். கிருத யுகம் என்பது 17,28,600 வருடங்கள் கொண்டது; திரோதா யுகம் 12,96,000 வருடங்கள் கொண்டது; துவாபர யுகம்: 8,64,000 வருடங்கள் கொண்டது; கலியுகம்:4,32,000 வருடங்கள் கொண்டது; இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம் ஆகும். பகவான், பல சதுர் யுகங்களில், பல முறை அவதாரம் எடுத்து உள்ளார்.

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்|
தர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

என்பது கீதாவாக்கியம். இந்த ஸ்லோகம் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் பலச்சுருதியிலும் இடம் பெறுகிறது. நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும், நான் யுகந்தோறும் பிறக்கிறேன் – என்பது இதன் பொருள். ஸ்ரீகிருஷ்ணாவதாரமும் தர்ம ரக்ஷணைக்காக எடுக்கப்பட்டதுதான்.

உக்ரசேனனின் மகன் கம்சன். இவன் வட மதுராவை ஆண்டு வந்தான். சகோதரி தேவகி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான். தேவகியை, சூரசேன மகாராஜாவின் மகனான வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான். திருமணத்தன்று இவர்கள் இருவரையும், கம்சன் தன் ரதத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்ற போது, வானில் இருந்து அசரீரி கம்சா, தேவகியின் எட்டாவது பிள்ளையால் நீ கொல்லப்படுவாய் என்று கூறியது.

இதனால் கடும் குழப்பமடைந்த கம்சன் தன் தங்கையை கொல்ல முற்பட, வசுதேவர் தடுத்து, “இவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் உன்னிடம் கொடுத்து விடுகிறேன். அவற்றைக் கொன்றுவிடு” என்று கூற, அதனை ஏற்று தேவகியை உயிருடன் விட்டான். எனினும் அவர்கள் இருவரையும் சிறை வைத்தான். தேவகிக்கு சிறையுள் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொலை செய்தான்.

krishnan
krishnan

ஏழாவது குழந்தையாக ஆதிஷேசன் கருவில் தங்கினான். ஏழாவது மாதத்தில் மகாவிஷ்ணுவின் மாயையால் வசுதேவரின் முதல் மனைவி ரோகினியின் கருவில் சேர்க்கப்பட்டு பலராமனாக அவர் பிறந்தார்.

தேவகிக்கு பிறக்க போகும் எட்டாவது குழந்தைக்காக ஆர்வத்துடன் காத்திருந்தான் கம்சன். வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் சிறைச்சாலையில் பிறந்தார். கம்சனிடமிருந்து குழந்தையைக் காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே, கிருஷ்ணரின் ஆணைப்படி வசுதேவர் அவரை யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர்- யசோதை வீட்டில் கொண்டுவிட்டுவிட்டார். கோகுலத்தில் இருந்த நந்த கோபரின் மனைவி யசோதை பெற்ற பெண் குழந்தையை தேவகியிடம் கொண்டு சேர்த்தார் வசுதேவர்.

கம்சன் பெண் குழந்தை என்றும் பாராமல் அதனை கொல்ல முயன்ற போது அது அவன் பிடியில் இருந்து தப்பி வானத்தில் பறந்து சென்றது. ”கம்சா!, நீ என்னை கொல்ல முடியாது. உன்னை கொல்பவன் ஏற்கனவே பிறந்து விட்டான்” என்று கூறி மறைந்தது.

கோகுலத்தில் பலராமனும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வளர்ந்து கன்றுகளை மேய்த்து வந்தனர். கம்சன் தன்னை அழிக்கப் பிறந்திருக்கும் குழந்தையை தேடி அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். எதுவுமே வெற்றி பெறவில்லை. கிருஷ்ணனை கொல்ல நினைத்த கம்சனின் முயற்சிகள் பலவும் வீணாகின.

குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார். இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை காப்பாற்றினார், யமுனை நதிக்கரையில் இருந்த கலிங்கன் (காளிங்கன்) என்ற பாம்பையும் அடக்கினார்.

இறுதியாக கம்சன், தூதர்களை அனுப்பி பலராமன், கிருஷ்ணன் இருவரையும் மதுராவிற்கு வரவழித்து மல்யுத்தம் மூலம் கொல்ல முயன்றான். மல்லர்கள் சாணூரன், முஷ்டிரன் இருவரும் கொல்லப்பட, கம்சன் தானே கிருஷ்ணனுடன் மோத முயன்றான்.

இறுதியில் கிருஷ்ணன், கம்சனை தரையில் தள்ளி அவன் மீது பாய்ந்து மேலே அமர்ந்ததும் பாரம் தாங்காமல் கம்சன் இறந்தான. பின்னர் பலராமனும், கிருஷ்ணனும் சிறையில் இருந்த தமது தாய், தந்தையரை விடுவித்தனர். அதன் பிறகு இருவரும் கோகுலத்துக்கு செல்லாமல் வசுதேவருடனே இருந்து வந்தனர்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply