ஆரோக்கியத்தை அளிப்பவன் சூரியன்!

ஆன்மிக கட்டுரைகள்
suryabhagvan - 1

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

“ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்” – “சூரியனிடம் ஆரோக்கியத்தை பிரார்த்திக்க வேண்டும்”

பூமிக்கும் பூமியிலுள்ள உயிர்களுக்கும் சக்தியளிப்பவன் சூரிய பகவான். சூரியன் மூலம் பிராண சக்தியும் ஆரோக்கியமும் கிடைக்கப் பெறுகிறோம். அதனால்தான் நோய் தீர்ப்பதற்கு சூரிய சக்தியைப் பெறும் வழிமுறைகள் பல நம் வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளன.

விடியற்காலையில் துயிலெழுந்து சூரியனை வழிபடுவது நம் தேசத்தின் சம்பிரதாயம். ஆதித்யனை வெறும் கிரகமாகவோ ஒரு ஜடப் பொருளாகவோ அன்றி சைதன்ய மூர்த்தியாக தரிசித்த உண்மையான விஞ்ஞானக் கண்ணோட்டம் நம் வேத மந்திரங்களில் வெளிப்படுகிறது. அதனையே புராணங்களும் ராமாயணம் போன்ற இதிகாசங்களும் ஆதித்ய ஹிருதயமாக வெளியிட்டன.

இதய நோய், தோல் வியாதி, கண் நோய்களை நீக்கும் சூரியக் கதிரின் ஆற்றலை கிரகிக்கும் வழிமுறைகளை ஆயுர்வேதம், யோக வித்யை, இயற்கை மருத்துவம் ஆகியவை பல விதங்களில் எடுத்துரைக்கின்றன.

arasavilli-suryanarayana-temple
arasavilli-suryanarayana-temple

பௌதீகமாகத் தெரியும் சூரிய சக்தியை மட்டுமின்றி, சூட்சுமமான தெய்வீக பாஸ்கர சைதன்யத்தை பதில்வினையாற்றச் செய்து அதன் மூலம் அற்புத பலன்களைப் பெரும் முழுமையான செயல் முறைகள் சூரிய உபாசனையில் உள்ளன.

ஞாயிறு அன்று ரவி ஹோரையில் சூரியோதயம் தொடங்குகிறது. எனவே அன்றைய நாளை ‘பாஸ்கர வாசரம்’ என்று குறிப்பிட்டனர். இந்த வழிமுரையை உலகில் அனைத்து காலக் கணக்கீடுகளும் அங்கீகரித்து ஏற்றன.

சூரிய வழிபாடு:-

ஞாயிற்றுக் கிழமையை நியமத்தோடு கழிப்பது, சூரிய தோத்திரங்களை பாராயணம் செய்வது, பாயசம் (கோதுமை ரவை) செய்து சூரியனுக்கு நைவேத்யம் செய்வது போன்றவை நல்ல ஆரோக்கியத்தை அளிப்பவை. சிவப்பு மலர்கள் சூரிய வழிபாட்டுக்கு உகந்தவை.

சூரிய நமஸ்கார வழிமுறை யோகாப்பியசத்தில் முக்கிய பாகமாக, உலக நாடுகளுக்குக் கூட ஆரோக்கியத்தை அளிப்பதாக உள்ளது.

சூரியனில் உள்ள இறை சக்தியைப் பெற்று அதன் மூலம் ஆரோக்கியத்தை அடையும் வழிமுறைகளை நம் புராண நூல்கள் அளிக்கின்றன.

“க்ரீம் அச்யுத அனந்த கோவிந்த”  என்ற மந்திரத்தை எப்போதும் ஜபம் செய்து வந்தால் கொடிய நோய்கள் கூட தீரும். சூரிய கிரகத்திற்கு அதி தேவதை ருத்ரன். அதனால் சிவ வழிபாடு, சிவார்ச்சனை, சிவ நாம ஜபம் போன்றவை ஆரோக்கியத்தை அளிக்கும். ஐஸ்வர்யத்தையும் முக்தியையும் கூட அருளும்.

மிருத்யுஞ்ஜயனாகவும், வைத்தியநாதனாகவும் வணங்கப்படும் சிவனின் நாமங்களை ஜபம் செய்தால் ஆரோக்கியம் முழுமையாக கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பாலாம்பிகேசாய நம: – வைத்யேஸாய நம:
பவரோக ஹராய நம: – ம்ருத்யுஞ்ஜயாய நம:

சிவ, கேசவ பேதம் இல்லை என்பது பாரதிய வேத சம்பிரதாயம். எனவே மேலே சொன்ன விஷ்ணு நாமங்கள் மூன்றையும் இந்த சிவ நாமங்களோடு சேர்த்து ஜபம் செய்தால் ஆரோக்கியச் செல்வத்தைப் பெறலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply