திருப்புகழ் கதைகள்: நின்னொடும் எழுவர் ஆனோம்!

ஆன்மிக கட்டுரைகள்

திருப்புகழ்க் கதைகள் 224
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

சுருளளக பார – பழநி
நின்னொடும் எழுவர் ஆனேம்

பரிவாலே பரவிய விபீஷணன் பொன் மகுடமுடி சூட நின்ற படைஞரொடி ராவணன் அவனுறவோடே எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட ரகுபதியி ராம சந்த்ரன் …… மருகோனே என்ற வரிகளில், இத்திருப்புகழில் வீடணன் இராவணனுக்கு அறிவுரை சொன்னது, இராவணன் அதனைக் கேட்காமல் இராமனுடன் போர்புரிந்து உயிரிழந்ததும் சொல்லப்படுகிறது.

அதாவது – மிகுந்த அன்புடன் துதி செய்த விபீஷணர், பொன்னாற் செய்யப்பட்ட மணிமகுடம் புனையவும், எதிர்த்து நின்ற அதிர சேனைகளுடன், இராவணன் தனது சுற்றத்தவர்களுடன், நெருப்பிற்கு இரையாகி மடியவும், தருமவிரோதம் இல்லாத தேவர்கள், இந்திரலோகத்தில் குடிபுகுந்து வாழவும், இராவணாதிகளிடம் பகை கொண்ட, இரகு குலத்திற்குத் தலைவராகத் திருவவதாரம் செய்த ஸ்ரீராமச்சந்தர மூர்த்தியினுடைய மருகரே – என்பது இவ்வரிகளின் பொருள்.

இலங்கைவேந்தன் இராவணனின் தம்பிகளில் ஒருவனும், எப்போதும் தர்மத்திலேயே தான் நிலைத்திருக்கவேண்டும் என்ற வரத்தையும் பெற்றவனுமான விபீடணன், இராவணனுக்குப் பல அறிவுரை சொல்லிப்பார்க்கிறான். சீதையைக் கவர்ந்தது, பிறகு இராமன் யாரென அறியாமல் அவருடன் போரிட அண்ணன் நினைப்பது எல்லாம் தவறென சொல்கிறான்.

கடும் சினம் கொண்ட இராவணன், ஒல்லை நீங்குதி, விழி எதிர் நிற்றியேல் விளிதியென்றனன் அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் எனச் சொல்வதாக கம்பன் எழுதுகிறார். விரைவில் நீங்கிபோவாய்; என் கண் முன்னால் நின்றால் (என் கையால்) இறந்திடுவாய் என்கிறானாம். அழிவுக்காலம் வரப்போவதால் இராவணன் அறிவினை நீங்கப் பெற்றானாம். விநாசகாலம் வந்தால் விபரீதபுத்தி தானே.

விபீஷணன் தனது தமையனிடம், இனிப் பேசிப்பயன் இல்லை என நினைத்து, தான் கூறியவை எல்லாம் நீதி நூல்களுக்குப் பொருந்தியதுதான் எனினும் தன் பிழை பொறுத்தருள வேண்டிக்கொண்டு வெளியேறுகிறான். திருப்பாவையில் ஆண்டாள் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்கிறாள். இராவணன் பொல்லா அரக்கன். அப்படியானால் வீடணன் நல்ல அரக்கந்தானே?

அசுரர் குலத்தில் பிரகலாதன் பிறந்ததுபோல அரக்கர் குலத்தில் பிறந்து நல்ல அரக்கராய் திகழ்ந்தவன் விபீடணன். அரக்கியாகிய சூர்ப்பனகையே இராமனிடம் கூறும்போது, விபீஷணன், அறம் வழி நடப்பவன் அரக்க செயல்கள் அற்றவன் என்று கூறுகிறாள். தன் தாய் நாடான இலங்கை, நண்பர்கள், செல்வம் என எல்லாவற்றையும் துறந்து இராமபிரானிடம் சரணடைய வருகிறான். தலைமேல் கை குவித்து கண்ணில் நீர் மல்க அடைக்கலம் தேடி வருகிறவனைப்பற்றி நண்பர்களிடம் இராமன் கருத்து கேட்கிறார்.

சுக்ரீவன் ஜாம்பவான் போன்றோர் இராவணனின் தம்பி என்பதாலேயே விபீடணன் மீது ஐயம் கொள்கின்றனர். அவரவர்களுக்குத் தோன்றிய கருத்துக்களை சொல்கிறார்கள் அனைத்துமே விபீடணன் மீதான அவநம்பிக்கையில் வெளிப்பட்ட வார்த்தைகள் தான். பாதகர் நம் வயிற் படர்வராமெனில் தீதிலராய் நமக்கன்பு செய்வரோ என்று கேட்கிறார்கள். அனைத்தையும் பொறுமையாய் கேட்ட ராமர் பிறகு அனுமனை நோக்கி கருத்து கேட்கிறார்.

வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியான் நுவல்வதாயினான்.

என்கிறார் அனுமனைக் கம்பன். பெரியோரிடம் பேசும் போது தலை வணங்கி கையால் வாயைப் பொத்திக்கொண்டு பேசுதல் மரபு என்பதை அறிகிறோம். பின்னர் அனுமன் கருதுவதை கம்பன் இப்படி சொல்கிறார்.

அனுமன் இராமனிடத்தில் என்ன சொன்னார்? நாளை காணலாம்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply