திருப்புகழ்க் கதைகள்: சப்த சிவ தாண்டவங்கள் (2)

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் 235
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்-

தலைவலி மருத்தீடு – பழநி
சப்த சிவ தாண்டவங்கள் 2

சிவனுக்கும், காளிக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. கடுமையான போட்டியில் இருவரும் சமநிலையில் இருந்தார்கள். அப்போது காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார் சிவன். முனிவர்களும், தேவர்களும் இருந்த சபையில் காலை உயர்த்த விரும்பாத காளி, போட்டியில் பின்தங்கினாள். (இந்த வரலாறு கூறப்படும் தில்லை நடராஜர் கோயிலிலேயே காளி பல வடிவங்களில் காலைத் தூக்கி நடனமாடும் சிற்பங்கள் உண்டு) சிவபெருமான் போட்டியில் வென்றார். காலை உயர்த்தி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தாண்டவமாடியமையினால் சிவபெருமான் ஊர்த்தவ தாண்டவ மூர்த்தி என்றும், ஊர்த்தவ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார். இதே வரலாற்றை உடைய மற்றொரு திருத்தலம் சென்னைக்கருகே உள்ள திருவாலங்காடு ஆகும். தருகாவனத்து முனிவர்கள் ஆணவத்தினால் இறையருளைப் பெறாமல் இருந்தார்கள். அவர்களின் ஆணவத்தினை யானையாக மாற்றி சிவன் வெற்றிக் கொண்டார். ஆணவம் அழிந்த முனிவர்கள் சிவ பெருமானை வணங்கி முக்தி பெற்றனர். இந்த தாண்டவத்தில் சிவன் யானையின் மீது ஆடுவார். இது கஜ சம்ஹார தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

<

p class=”has-regular-font-size”>தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தையும், ரிஷிபத்தினிகளின் ஆணவத்தையும் அடக்க பிட்சாடனராய் வந்த இறைவன், தன்னுடன் விஷ்ணுவையும் மோகினி உருவில் அழைத்து வருகிறார். ரிஷி, முனிவர்களின் கர்வம் அடக்கப் படுகிறது. அப்போது இறைவன் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் எனச் சொல்லப் படுகிறது. நாராயணனும், தான் தான், நாராயணியாக இருப்பவளும் தான் தான் என இறைவிக்குப் புரியாதா? உமையொரு பாகத்து இறைவனின் நடனத்தைத் தான் மட்டும் கண்டு களிக்க ஆசைப் பட்டாள் இறைவி, அவளின் ஆசையை நிறைவேற்ற இறைவன் ஆடியது தான் கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது.

இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. ஐந்தொழில்களையும் குறிக்கும் நடனம் காளிகா தாண்டவம் எனப் படுகிறது. இது திருநெல்வேலியில் காணப்படுகிறது.

இராவணன் இயற்றிய சிவதாண்டவ ஸ்தோத்திரம்

இராவணன் சிவனின் மிகத் தீவிர பக்தன். ஒருமுறை அவன் தென் முனையில் இருந்து கைலாய மலைக்கு புஷ்பக விமானத்தில் வந்தான். கைலாயம் வந்தடைந்து, சிவனின் அருமை பெருமைகளை அவன் பாட ஆரம்பித்தான். ராவணனின் கையில் ஒரு மத்தளம் இருந்தது. அதை வைத்து தாளம் எழுப்பி, முன்னேற்பாடு ஏதுமின்றி அங்கேயே அப்படியே 1008 பாடல்களை அவன் இயற்றினான். இதுவே சிவ தாண்டவ ஸ்தோத்திரமாக ஆனது. இந்த இசை கேட்டு சிவன் மனமகிழ்ந்தார். அதில் மெய் மறந்து போனார். இராவணன் இயர்றியதாகக் கூறப்படும் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தின் முதல் பாடல் –

ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே
கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்
டமட் டமட் டமட் டமன் னிநா தவட் டமர் வயம்
சகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம்.

இப்பாடலின் பொருளாவது – ஜடாமுடியில் இருந்து ஊற்றும் நீர் அவர் கழுத்தை பிரதிஷ்டை செய்ய, அக்கழுத்தில் பாம்பு மாலையாய் வீற்றிருக்க, டமரு மத்தளம் “டமத் டமத் டமத்” என்று சப்தம் எழுப்ப,
சிவபெருமான் புனிதத் தாண்டவம் ஆடுகிறார். நம் அனைவருக்கும் அவர் வளம் அள்ளி வழங்கட்டும்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply