ஆன்மிக புதன்: உண்ணும் முன் இறைவனுக்குப் படைப்பது எதற்காக?

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
prasadam - Dhinasari Tamil

-> கே.ஜி. ராமலிங்கம்

ஆன்மிகபுதன்: அன்னதாதா சுகீ பவ!

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே….

பெண்கள் தங்கள் இல்லங்களில் உணவு சமைக்கும் போது மனதில் நல்ல, தூய எண்ணத்துடன் சமைத்தால், அந்த வீட்டில் தெய்வாம்சம் நிறைந்திருக்கும். தீயவை நடக்காது. அதே நேரத்தில் உணவு பரிமாறும் போது நல்ல மனதுடன் பரிமாற வேண்டும்.

மகாபாரதக் கதையில் நடந்த நிகழ்வு – – –

குருஷேத்திர யுத்தத்தில் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில், தன் உடலை விட்டுவிட வேண்டும் என்று வரவிருக்கிற உத்தராயண புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அந்த நேரத்தில் (அவர் விரும்பும் போதே தன் உயிர் பிரிய வேண்டும் என்ற அரிய வரத்தை பெற்றவர்) அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் தருணம், அவரின் விடைபெறலுக்கு முன்பாக அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல், தர்மம் குறித்த போதனைகளைப் பெற தருமர் விரும்பினார். எனவே தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிஷ்மரிடம் சென்று அவரை வணங்கி “பிதாமகரே இறுதியாக தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்” என்று கேட்டார் யுதிஷ்டிரர்.

அப்போது உடனே திரௌபதி பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். அந்த சிரிப்பின் நெடியை உணர்ந்த யுதிஷ்டிரர் “நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் இது தகாத செயல்” என்று கோபத்துடன் சொல்ல,
“துரியோதனனின் சபையில் துச்சாதனன் என் ஆடையை இழுத்து மானபங்கம் செய்தபோது கண்ணனின் அன்பினாலும் கருணையாலும் என் மேலாடை முடிவில்லாமல் வந்துகொண்டே இருந்து என்னை காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? இன்றைக்கு போதனை செய்யவிருக்கும் தர்மவான் பீஷ்மர் அந்தச் சபையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாரே தவிர துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா..? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி உபதேசம் கேட்க நினைக்கும் உங்களைப் பார்த்து சிரிக்காமல் என்ன செய்வது” என்றார். யுதிஷ்டிரர் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். (நியாயம் தானே.!)

பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடன் புன்னகையோடு பதில் அளித்தார். “திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது தான். அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போது தான் உங்களுக்கும் உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும்.”

துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான். ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேறு வழியில்லாமல் அவன் சொல்லியபடி நடப்பார்கள். இதற்கு சல்லியனும் கர்ணனும் உதாரணங்கள். ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னமிட்டால் அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால் தான் திரௌபதியை மானபங்கம் செய்த போதும் எதுவும் பேச முடியாமல் வாய்மூடி மெளனம் சாதித்தேன். ஆனால் இப்போது அர்ஜூனன் கொடுத்த அம்புகளின் படுக்கையில் படுத்த பிறகு உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறி விட்டன. இப்போது என் உடலில் மனதில் தூய்மையை உணரும் ஆன்மா மட்டும் தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக நான் என்னைக் கருதிக்கொள்கிறேன்,” என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தையும், வாழ்க்கை நீதி நெறிகளையும் உபதேசம் செய்தார்.

இதனால் தான் முற்காலத்தில் இந்த காரணத்தை ஒட்டியே விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள், மற்றவர்களிடம் பெற்ற உணவை முதலில் இறைவனுக்கு படைத்துவிட்டு பிறகு உண்டார்கள்.

உண்மை. அதனால்தான் ஆண்களுக்கு அன்னமிடுவதில் சிறந்தவர்களாக இருப்பவர்கள் மூவர் என்று நமது தர்மம் உபதேசிக்கிறது. ஒன்று பெற்ற தாய் மகனுக்கு உணவளிக்கும்போது அவளின் எண்ணம் மகன் உணவை உண்டு நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் நல்ல வாழ்க்கை வாழவேண்டுமென எண்ணுவாள்.

இரண்டாவது கை பிடித்தவள் தன் கணவனுக்கு உணவு பரிமாறும்போது தனது நெற்றி திலகமும் தலையில் பூவும் என்றும் இருக்கவேண்டுமென நல்ல சிந்தனையுடன் பரிமாறுவாள்.

மூன்றாவது தன் மகள் பரிமாறும்போது தந்தை தன்னை எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தார் என்று எண்ணி பார்த்து அப்படி வளர்த்த தந்தை ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவேண்டுமென்று எண்ணுபவள். மற்றவர் அளிக்கும் உணவு அவர்களது எண்ணத்திலே உள்ளவற்றுடனே இருக்கும்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply