திருப்புகழ் கதைகள்: வாரம் உற்ற…

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பாகம் 317
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

வாரம் உற்ற – சுவாமி மலை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி முப்பத்திமூன்றாவது திருப்புகழான “வாரம் உற்ற” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, மாதர் மயக்கம் அற அருள்புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி

     னீடு மெய்த்து யர்ந்து …… வயதாகி

வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை

     மார்க ளுக்கி சைந்து …… பொருள்தேடி

ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த

     மாப ணிக்கள் விந்தை …… யதுவான

ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ

     டாவி மெத்த நொந்து …… திரிவேனோ

சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து

     சூழ்சு ரர்க்க ணன்பு …… செயும்வீரா

சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த

     சூத னுக்கி சைந்த …… மருகோனே

ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று

     தானி றைக்க வந்த …… தொருசாலி

யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு

     மேர கத்த மர்ந்த …… பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – சூரபன்மனை வெருட்டி ஒட்டி அவனை அடியுடன் பிளந்து, தேவர்கட்கு அன்பு காட்டிய வீரமூர்த்தியே; பன்றி உருவங் கொண்டு நீரில் மூழ்கிய பூமியை எடுத்துவந்த தேர்ப்பாகனாகிய திருமாலின் அன்புடைய திருமருகரே; ஏர்கள் எதிர்த்து வரவும், நீர்கள் தேங்குமாறு கட்டியும், மிகுதியான நீரை இறைத்தும் தொழில் புரிய, வளர்ந்த ஒப்பற்ற நெற்பயிர் நன்கு உயர்ந்துள்ள சிறந்த கழனிகள் சூழ்ந்துள்ள திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே;

     அன்பு பூண்ட தன்மையில் மாதங்கள் செல்ல அன்பினால் வளரும் உடலானது தொடர்ந்து வளர்ந்து வயது நிரம்பி, வாலப்பருவம் அடைந்து அங்கும் இங்கும் திரிந்து, அழகிய மை பூசிய கண்களையுடைய பெண்களிடம் நேசம் வைத்து, அவர்கள் பொருட்டுப் பொருள் தேடி, மாலைகள் மிகுந்த பொன்னால் செய்து விளங்கும் நல்ல ஆபரணங்கள, விசித்திரமான காதில் அசையும் ஓலை முதலியன அணிந்த அப்பெண்களுடன் முத்தமிட்டு உயிர் மிகவும் நொந்து திரியலாமோ? – என்பதாகும்.

     இப்பாடலின் முதல் பத்தியில் வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பில் நீடு மெய் துயர்ந்து வயதாகி என்ற வரிகளில் அருணகிரியார் நாம் வளர்ந்து பெரியவர்கள் ஆவது எப்படி என்பதை விளக்குகிறார். வாரம் என்றால் அன்பு எனப் பொருள்கொள்ளலாம். அவ்வாறு பொருள்கொண்டால், அன்பு பூண்ட தன்மையில் மாதாமாதம் உடல் வளர்கின்றது என்று பொருள்படும். அன்றி வாரம் என்பதைக் கிழமை எனக் கொண்டு வாரம் சேர்ந்த தன்மையினால் மாதமாகின்றது என்றும் கொள்ளலாம். ஏழுநாள் கொண்டது வாரம்; நான்கு வாரம் கொண்டது மாதம்.

     இந்த உடம்பை மெய் என்று கூறுவர். வாழ்வே மாயம் திரைப்படத்தில் வாலி அவர்கள் எழுதிய பாடலொன்றில் மெய் என்று மேனியை யார் சொன்னது? என்று எழுதியிருப்பார். தோன்றி மறைகின்ற இந்தப் பொய்யுடலை மெய்யென்று எப்படிக் கூறலாம்?  ஊருக்குப் புறப்படும்போது ‘போகின்றேன்’ என்று அமலங்கமாகக் கூறாமல் “வருகின்றேன்” என்று மங்கலமாகக் கூறுவது போலவும், “தாலி பெருகிற்று” என்று கூறுவது போலவும், பொய்யை ‘மெய்’ என்று கூறுவது மங்கல வழக்கு என்று கூறுவார்கள். இப்படிக் கூறுவதும் நியாயந்தான்.

     ஆனால் வேறு ஒரு சிறந்த நியாயம் இதில் உள்ளது. விளக்கு என்ற சொல் எரிகின்ற சுடரையே குறிக்கும். “சந்தனம் இது” “சாணம் இது” “கட்டை இது” “கள்வன் இவன்” என்று விளக்குவது அந்தச் சுடர் தானே. ஆனால் நாம் பித்தளையால் செய்த ஒரு தண்டினை விளக்கு என்று கூறுகின்றோம். சுடர் தங்குகின்ற இடம் அப் பித்தளைத் தண்டு ஆதலின் தானியாகு பெயராக அத் தண்டு விளக்கு எனப் பெயர் பெற்றது. அது போல் மெய்ப்பொருளாகிய இறை தங்குகின்ற இடம் உடம்பு. ஆதலின் (மெய் தங்கும் இடம்) மெய் எனப்பெற்றது. எனவே மெய் என்பது தானியாகு பெயர் எனக் கொள்க.

     இத்திருப்புகழின் சூகரத்தொடம்பு தானெடுத்து வந்த சூதனுக்கி சைந்த மருகோனே என்ற வரியில் வாராஹ அவதாரம் பற்றிக் குறிப்பிடுகிறார். அதனை நாளை காணலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply