ஆசார்யர்கள் :: சில குறிப்புகள்!

வைணவ குருபரம்பரை

ஸ்ரீமணவாள மாமுனிகள் அரங்கன் திரு முன்னிலையில் ஓராண்டு காலம் திருவாய்மொழிப் பொருள் கூறியதாகவும், அரங்கன் ஒரு சிறு பிள்ளை வடிவில் தோன்றி,

“ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||”

என்னும் தனியனை அருளியதாக வரலாறு.
(தனியன் என்பது ஆசார்ய புருஷர்களுக்கான த்யாந ச்லோகம்)
மாமுனிகளுக்கான தனியனை இயற்றியதால் இவர் மாமுனிகளின் சீடராகிறார்; ஸ்ரீமந்நாராயணன், பெரிய பிராட்டி, சேனை முதலியார், நம்மாழ்வார் என்று தொடங்கும் குரு பரம்பரை மீண்டும் நாராயணனிடம் நிறைவு பெறுகிறது;

மாமுனிகள் அரங்கன் திருமுன்னிலையில் திருவாய்மொழிக்கு விரிவுரை செய்தருளிய ஆண்டு 1430 AD

உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த கிடாம்பி ஆச்சான் என்ற ஆத்ரேய ராமாநுஜரின் வம்சத்தில் தோன்றிய கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்வாமி தேசிகன்; அவரிடமே பயின்றவர்.
ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான வரதாசார்யரும், ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;

குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD )
பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே அவர்குருக்கள் நிரைவணங்கிப்
பின்னருளால் பெரும்பூதுர் வந்தவள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.
– தேசிகப் பிரபந்தம்

சில குறிப்புக்கள்

பல ஆசார்ய சிரேஷ்டர்கள் வேதநூற் பிராயம் எனப்படும் 100 வயது கடந்து வாழ்ந்துள்ளனர்.

திருமந்திரம் (அஷ்டாக்ஷரம்), த்வயம், சரம ச்லோகம் இவை வைணவ மரபு போற்றும் மறை பொருள் பொதிந்த ரகசியமாம்; ரஹஸ்யத்ரயம் என்பர்.

ஆளவந்தார் பரமபதமடையும் தருணத்தில் அவர்தம் சீடர்கள் சரம ஸந்தேசமாக (இறுதி உரை) ஏதாவது அருளுமாறு விண்ணப்பிக்க, ஆளவந்தாரும் திருமந்த்ரார்த்த ப்ரதிபாத்யனாக அரங்க நகரப்பனையும், த்வய ப்ரதிபாத்யனாகப் பேரருளாளனையும், சரமச்லோக ப்ரதிபாத்யனாகத் திருமலையப்பனையும் நினைத்திருக்க ஆணையிட்டார். ஆதலின் 108 திவ்ய தேசங்களில் இவை மூன்றும் முதன்மை பெறுகின்றன.

பின்னர் உடையவர் உகந்தருளியதால் திரு நாராயணபுரமும் (மேல் கோட்டை) முக்கியத்துவம் பெற்றது.

பெரிய நம்பிகள் சோழனின் அவையில் கண்களை இழந்தார்; திருவரங்கம் திரும்பும் வழியில் உயிர் துறந்தார். அப்போது அவர்தம் வயது 105 என்று ‘ப்ரபந்நாம்ருதம்’ தெரிவிக்கிறது – ’வத்ஸராணாம் ததா தஸ்ய பஞ்சோத்தரசதம் கதம்’.

திருக்கோட்டியூர் நம்பிகளும் 105 ஆண்டுகள் வாழ்ந்தவர்; இவ்விருவரும் ஆளவந்தாரின் சீடர்கள்; உடையவருக்கு ஆசார்யர்கள்.

உடையவர் மேல்நாட்டில் எழுந்தருளியிருந்தபோது் பெரிய நம்பிகள், திருக்கோட்டியூர் நம்பிகள், திருமாலையாண்டான், திருவரங்கப் பெருமாளரையர், திருக்கச்சி நம்பிகள் ஆகியோர் பரமபதம் அடைந்தனர். ஆளவந்தார் உயிர் துறக்கும்போது உடையவர் அரங்கம் வந்துசேரவில்லை; அதுபோலவே ஆளவந்தாரின் சீடர்களான இவர்களின் அந்திம தசையிலும் உடையவர் அருகில் இல்லை.

கூரத்தாழ்வான் உடையவரைக் காட்டிலும் வயதில் பெரியவர்; முன்பு தோன்றி முன்பே மரித்துப் பரமபதத்தில் ஆசார்யனை எதிர்கொள்ளக் காத்திருந்தார்.

மஹா விரக்தரான கூரேசருக்கு 60 வயது கடந்தபின் குழந்தைகள் பிறந்தனர்;  வடக்குத் திருவீதிப் பிள்ளையின் சரிதமும் இது போன்றதே.

பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.

ஸ்ரீ பராசர பட்டர் 28 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார் என்பது ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் தெரிவிக்கும் செய்தி.

நம்பிள்ளைகள்  2ம் ராஜராஜன், 3ம் குலோத்துங்கன் இவர்களின் காலத்தவராக இருந்திருக்க வேண்டும்.

பெரியவாச்சான் பிள்ளையும், வடக்குத் திருவீதிப் பிள்ளையும் ஒரே ஆண்டில் அவதரித்தவர்கள்.

நஞ்சீயர் நூறு முறை திருவாய் மொழிக்கு உரை கூறியவர்;  ஸ்வாமி தேசிகன் முப்பது முறைக்குமேல் ஸ்ரீ பாஷ்யத்திற்குப் பொருள் கூறியவர்;

ஸ்வாமி தேசிகன் தம் நிகரற்ற புலமையால் 100க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழிலும், வடமொழி யிலுமாக அருளிச் செய்துள்ளார்; அச்யுத சதகத்தை ப்ராக்ருத மொழியிலும் அருளினார். திருவாய்மொழி உற்சவம் தடையின்றி நடைபெற வழி செய்தருளினார்.

ஸ்வாமி தேசிகன் பரமபதம் சென்ற அடுத்த ஆண்டில் அவதரித்தவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள்.

பொதுவாகத் துறவியர் இல்லறத்தாருக்குச் சீடராவதில்லை. விதிவிலக்காகத் துறவியான நம்ஜீயர், பராசர பட்டரின் சீடராக இருந்தார்; ப்ரம்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர், ஸ்வாமி தேசிகனின் சீடர்.

ஸ்வாமி  நம்மாழ்வார்  அவதரித்த வைகாசி விசாகத்தில் தோன்றியவர்  திருவாய்மொழிப்பிள்ளை என்னும்  திருமலை ஆழ்வார்  (ஸ்ரீசைலேசர்) . இவர் பிள்ளை லோகாசார்யரின் சீடர்; ஸ்வாமி மணவாள மாமுனிகளின்  ஆசார்யர்.

’திவ்யஸூரி சரிதம்’, ‘யதிராஜ வைபவம்’ போன்ற நூல்கள் நாம் ஆசார்யர்களை அறிந்து கொள்வதற்கு உதவுகின்றன. இவை உடையவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை; ‘இராமாநுச நூற்றந்தாதி’ உடையவரின் பெருமைகளைக் கூறுவது.

‘பெரிய திருமுடி அடைவு’ என்னும் நூல் ஆசார்ய புருஷர்களின் வரலாற்றுக்  குறிப்பைத் தெரிவிப்பது.  ஆளவந்தாரின்  சீடரான மாறநேர் நம்பி அவதரித்தது பாண்டிய நாட்டின் ’பராந்தகபுரம்’  என்ற ஊர் என்பது இந்நூல் தெரிவிக்கும் செய்தி.

– தேவ்

Leave a Reply