ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி

ஸ்ரீமத் ராமானுஜர்

3953

கொழுந்துவிட் டோ டிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத்

 

தழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னும், அருமுனிவர்

தொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சுடர்மிக்

கெழுந்தது,அத் தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே. 61

3954

இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றிஇன் றியான்இறையும்

வருந்தேன் இனியெம் இராமா னுசன்,மன்னு மாமலர்த்தாள்

பொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப்

பொருந்தே வரைப்பர வும், பெரி யோர்தம் கழல்பிடித்தே. 62

3955

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்

அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்

செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்

படியைத் தொடரும் இராமா னுச மிக்க பண்டிதனே. 63

3956

பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்

விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை

கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே

மண்டிவந் தேன்றது வாதியர் காள். உங்கள் வாழ்வற்றதே. 64

3957

வாழ்வற் றதுதொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்

தாழ்வற் றதுதவம் தாரணி பெற்றது, தத்துவநூல்

கூழற் றதுகுற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்

நாழற் றது,நம் இராமா னுசந்தந்த ஞானத்திலே. 65

3958

ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு

வானம் கொடுப்பது மாதவன் வல்வினை யேன்மனத்தில்

ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கத்

தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே. 66

3959

சரணம் அடைந்த தருமனுக் காப்,பண்டு நூற்றுவரை

மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த

கரணம் இவையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்

கரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே? 67

3960

ஆரெனக் கின்று நிகர்ச்சொல்லின் மாயனன் றைவர்த்தெய்வத்

தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்

பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர்

சீரினிற் சென்று பணிந்தது, என் னாவியும் சிந்தையுமே. 68

3961

சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்

அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்

தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து

எந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே. 69

3962

என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த

உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்

பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை

தன்னையென் பார்ப்பர் இராமானுச உன்னைச் சார்ந்தவரே? 70

Leave a Reply