சிந்துச் சந்தம் படைத்த சிற்பி :: அண்ணாமலை ரெட்டியார்

விழாக்கள் விசேஷங்கள்

புள்ளிக் கலாப மயில் பாகன் – சத்தி
புதல்வ னான கன யோகன்; – மலை
போலத் தான் திரண்ட கோலப் பன்னிரண்டு
வாகன் நல்வி வேகன்…

உற்சாகத்தைக் கிளப்பும் விதமாய் மேடையில் வலம்வரும் இந்தச் சிந்துச் சந்தத்தைப் படைத்தவர்- அண்ணாமலை ரெட்டியார். காவடிச் சிந்து புகழ் என்றே இசையுலக வரலாற்றில் பதியப் பட்டவர்.    

தென்பாண்டிச் சீமையில் உள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சென்னிக்குளம் என்ற சிற்றூரில் 1860ஆம் ஆண்டு சென்னவ ரெட்டியார் – ஓவு அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அக்கால முறைப்படி திண்ணைப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புத்தான் அண்ணாமலை ரெட்டியாருக்குக் கிட்டியது. அவருக்கு, சிவகிரி முத்துசாமிப் பிள்ளை என்பவர் ஆசிரியராக அமைந்தார். அவ்வாசிரியர் பல்வேறு நூல்களையும் அண்ணாமலையாருக்குக் கற்றுக் கொடுத்தார். ஒருநாள், அண்ணாமலையார் பாடத்தைக் கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனக் கருதிய ஆசிரியர், அவரைக் கண்டிக்கக் கருதினார். தாம் நடத்திய பாடத்தைத் திருப்பிக் கூறுமாறு ஆசிரியர் கேட்டார். விளையாடிக் கொண்டிருந்த அண்ணாமலையார், தங்கு தடையின்றி ஒப்பித்துவிட்டார். அதைக்கண்டு வியந்த ஆசிரியர் அவரைப் பாராட்டினாராம்.

ஒரு முறை அண்ணாமலையார், வீட்டுப்பாடம் எழுதி, அதன் கீழ் “தமைய பருவதம்” என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். தமைய பருவதம் என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை. ஆசிரியர் அண்ணாமலையை அழைத்து, “அண்ணாமலை! தமைய பருவதம் என்று இதன் கீழே கையெழுத்திட்டுள்ளாயே! அதன் பொருள் என்ன?” என்று வினவினார். அதற்கு அண்ணாமலையார், “தமையன் என்றால் அண்ணா; பருவதம் என்றால் மலை. அண்ணாமலை என்ற பெயரைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா” என்று பணிவுடன் கூறினார். அதைக் கேட்ட ஆசிரியர், “அப்பா அண்ணாமலை! உன் புலமைப் பசிக்கு நான் தீனிபோட முடியாது. நீ வேறு எங்கேனும் சென்று பயில்க” என்று ஊக்கப்படுத்தி, அவருக்கு விடைகொடுத்து அனுப்பினாராம்.

சென்னிக்குளத்தில் உள்ள மடத்திற்குச் சென்று அங்கு மேற்பார்வைப் பணியைச் செய்து கொண்டிருந்த சுந்தர அடிகளுடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து பல்வேறு நூல்களை வாங்கிப் படித்தார். அண்ணாமலையின் தமிழ் ஆர்வத்தைக் கண்ட அடிகளார், தாம் கற்றிருந்த நூல்களை எல்லாம் அவருக்குக் கற்பித்தார். விவசாயத்தில் விருப்பமில்லாத அண்ணாமலையார், தந்தையின் வற்புறுத்தலால் தோட்டத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சினார். கவிதைக் கன்னி அவரைக் கட்டித் தழுவலானாள். கடமையை மறந்தார். ஒரு மர நிழலில் கற்பனையில் ஆழ்ந்தார். வாய்க்காலில் வந்த தண்ணீர் தோட்டப் பாத்திகளில் பாயவில்லை. தரிசில் பாய்ந்தது. அதைக் கண்டு சீற்றம் கொண்ட அவரது தந்தை, அவரைக் கடிந்து கொண்டு, வீட்டுக்கு அவர் வந்தால் சாப்பாடு கிடையாது என்று கூறிவிட்டார். தந்தையாரின் சினத்துக்கு ஆளான அண்ணாமலை, சுந்தர அடிகளின் மடத்திற்கு வந்தார். அவரைக் கண்ட அடிகளார், அவருக்கு இரங்கி உணவும் தந்தார்.

தம் மகன் பிச்சைக்காரனைப் போல மடத்தில் சாப்பிடுவதா? எனக் கோபமுற்று அங்கு வந்து அண்ணாமலையை அடித்தார் தந்தை. இதனைக் கண்ட சுந்தர அடிகளார், “இவனை ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதாதீர்கள். இவன் புகழின் உச்சியைத் தொடப்போகிறான். நான் இவனை அறிஞனாக்கிக் காட்டுகிறேன்” என்று கூறி அண்ணாமலையின் தந்தையைச் சமாதானப்படுத்தினார்.

அண்ணாமலையை சேற்றூர் அரசர் வடமலைத் திருவநாத சுந்தரதாசுத்துரையிடம் அழைத்துச் சென்று அவரைப் பற்றி பாடல்கள் பாடுமாறு அண்ணாமலையைப் பணித்தார். அண்ணாமலையார் பாடிய பாடல்களைக் கேட்ட அரசர், “இந்தச் சிறுவன் இவ்வளவு சிறந்த பாடல்களை எங்ஙனம் இயற்ற இயலும்! இவன் பாடிய பாடல்கள் இவனுடையது அல்ல என்று கருதுகிறேன்” என்றார். அரசரின் உரையைக் கேட்ட அடிகள் மனம் வருந்தினார். எவ்வாறேனும் அண்ணாமலையின் திறமையை அரசர் உணரும் வண்ணம் செய்ய வேண்டும் என்று கருதினார்.

அரசரைப் பார்த்து, “இவன் செய்யுள் இயற்ற வல்லவனா? ஆற்றல் இல்லாதவனா என்பதைத் தாங்கள் பரிசோதித்து உணரலாமே” என்றார். அரசரும் அண்ணாமலையைப் பார்த்து, “காரிகை என்னும் சொல் ஒரே செய்யுளில் ஏழு இடங்களில் வெவ்வேறு பொருள்பட வருமாறு அகப்பொருள் துறை அமைய ஒரு கட்டளைக் கலிப்பா இயற்றுக” என்றார். அண்ணாமலை உடனே பாடினார். பாடலைக் கேட்டு மன்னர் அயர்ந்து போனார். அண்ணாமலையின் திறமை கண்டு வியந்தார். அவரது கவித்திறமை கண்ட அரசர், அவரை முகவூர் இராமசாமிப் புலவரிடம் இலக்கணம் கற்பதற்கு அனுப்பினார். அண்ணாமலையும் நாள்தோறும் அரண்மனையில் உணவருந்தி முகவூர் சென்று இலக்கணம் கற்று வந்தார். பல்வேறு இலக்கண, இலக்கிய அறிவும், இசைப் பயிற்சியும் பெறவேண்டும் என்று கருதிய அண்ணாமலையார், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று, அதன் தலைவராயிருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டார். மேலும், அப்போது ஆதீனத்தில் இருந்த உ.வே.சாமிநாதய்யரிடம் நன்னூலும், மாயூர புராணமும் பாடம் கேட்டார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை புரிந்த பல கலைஞர்களிடம் இருந்து பல இசை நுட்பங்களையும் அறிந்து கொண்டார். அத்துடன் இசையுடன் பாடல்களைப் பாடும் பழக்கமும் அண்ணாமலையாருக்குக் கைவரப் பெற்றது. ஆதீனத்தில் இருந்தபோது அண்ணாமலையார் சுப்பிரமணிய தேசிகர் மீது நூற்றுக்கணக்கான பாடல்கள் புனைந்தார்.திருவாவடுதுறையிலிருந்து சென்னிக்குளம் வந்து சேர்ந்த அண்ணாமலை, மீண்டும் சுந்தர அடிகளின் உதவியினால் ஊற்றுமலைக்குச் சென்று அங்கு அரசராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராக அமர்ந்தார்.

ஊற்றுமலையரசரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ் முதலிய சில பிரபந்தங்களைப் பாடினார்.மேலும், சங்கரன்கோவில் கோமதியம்மன் மீது சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் அண்ணாமலையார் படைத்தளித்தார்.

வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வீரகேரளம்புதூர் சுப்பிரமணிய சாஸ்திரியார், கரிவலம் வந்த நல்லூர் உத்தண்டம்பிள்ளை, பாண்டித்துரைத்தேவர் முதலியோர் அண்ணாமலையாருடன் பழகிய சம காலத்தவர் ஆவர்.

“சீர்வளர் பசுந்தோகை மயிலான் – வள்ளி
செவ்விதழ்அல் லாதினிய
தெள்ளமுதும் அயிலான்
போர்வளர் தடங்கையுறும் அயிலான் – அவன்
பொன்னடியை இன்னலற
உன்னுதல்செய் வாமே.”

என்று தொடங்கிய பாடலை, ஒரு முறை கழுகுமலைக்குக் காவடி எடுத்தபோது வழிநெடுகத் தொடர்ந்து பாடிக்கொண்டே சென்றார்.

பாடல் கேட்ட அனைவரும் “முருகா முருகா” என்று கூறி மெய் மறந்தனர்.

எத்தனையோ பாடல்கள்! ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு சந்தம்! வெவ்வேறு மெட்டு, வெவ்வேறு துறை. எல்லாம் புதுமை, எதுகை, மோனைகள் வந்து ஏவல் கேட்டன.

இயைபுத்தொடை அடிதோறும் அணி வகுத்து நின்றது. அன்றிலிருந்து, “வாக்கிற்கு அருணகிரி” என்ற வாசகம், “வாக்கிற்கு அண்ணாமலை” என்று விரிந்தது. பழைய பாடல்களின் சாயல் அறவே இல்லாத புதுவகை நாட்டுப் பாடலாகக் காவடிச்சிந்து மலர்ந்தது.

அண்ணாமலையார் பல்வேறு நூல்களை இயற்றி இருப்பினும் அவருக்குப் புகழ் சேர்த்தது காவடிச்சிந்துப் பாடல்களே ஆகும். காவடிச்சிந்து மட்டும் அவர் காலத்திலேயே அச்சாகிவிட்டது.

வழிநடையில் பாடப்பட்ட காவடிச்சிந்துப் பாடல்களை எல்லாம் ஊற்றுமலையரசர் திரட்ட முயன்றார். இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசுகவியாகப் பாடப்பட்டமையால் காற்றோடு கலந்து மறைந்து போயின. ஊற்றுமலையரசர் கிடைத்தவற்றை மட்டும் காவடிச்சிந்து எனப்பெயரிட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார். காவடிச்சிந்து நூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலையார், ஊற்றுமலையரசரையும், அச்சிட்ட நெல்லையப்பக் கவிராயரையும் பாராட்டி, ஐந்து கவிகள் பாடியுள்ளார். காவடிச்சிந்தின் இனிமையும் பெருமையும் நாடெங்கும் பரவின. அண்ணாமலையார் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

அண்ணாமலையாருக்கு அவரது தந்தையார், காலம் தாழ்த்தாது அவரது இருபத்து நான்காம் வயதில், குருவம்மா என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தார். புதுமனைவியுடன் ஊற்றுமலைக்கு வந்த அண்ணாமலை, நெடுநாள் இன்பமாக வாழ இயலவில்லை. அருந்தமிழ் பாடிய பெருந்தகையாளரை தீராத நோய் கவ்வியது. அப்போது அவருக்கு வயது இருபத்து ஆறு. தம் அவைக்கவிஞர் பிணியுற்றதறிந்த ஊற்றுமலையரசர், பலவித மருத்துவங்கள் செய்தும் நோய் நீங்கவில்லை.

1891ஆம் ஆண்டு தை மாதம் அமாவாசையன்று தமது 29வது வயதில் கழுகுமலைக் கந்தனைக் கருத்தில் கொண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். பொன்னுடம்பு நீங்கிப் புகழுடம்பு எய்தினார். காவடிச்சிந்து புகழ் அண்ணாமலையார் மறைந்தாலும், கழுகுமலைக் கந்தன் மீது அவர் பாடிய காவடிச்சிந்து என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Leave a Reply