இத்தனை சிறப்புகளா? இந்த கோவிலுக்கு அறிந்து கொள்வோம்!

ஆலய தரிசனம் சிவ ஆலயம்

உத்திரகோச மங்கை!

*ஆதி சிதம்பரம் எனும் இந்த சிவ ஆலயம் மிகவும் பழமையானது!

*மிகவும் பழமையான திருக்கோயில் என்பதால் இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக “மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது” என்னும் பழமொழி இப்பகுதியில் வழக்கமாக உள்ளது.

*உத்தரம் – உபதேசம்; கோசம் – ரகசியம்; மங்கை – பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.

*மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

*உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

*உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என அழைக்கப்படுகிறது.

*மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் சிவபெருமான் ஏராளமான திருவிளையாடல் புராணங்களை நிகழ்த்தினார். திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இந்தத் தலத்தில்தான் நடந்தது.

*உத்தரகோசமங்கையில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இந்தத் தலம் ராமாயண காலத்தைய கல்வெட்டு என கருதப்படுகிறது.

*இந்தத் தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

*இங்கு இருக்கும் நடராஜர் சிலை,சிதம்பரம் நடராசர் சிலையை விட தொன்மையானது.

*இந்த திருத்தலத்தில் சிதம்பரத்தை போலவே நடராசர்தான் விசேசம்.இங்கே உள்ள பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.

*சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் ‘இலவந்திகைப் பள்ளி’ என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள்.

*மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்பு கொண்ட தலம் எனும் பெருமையும் உத்தரகோசமங்கைக்கு உண்டு. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று சிவனார் போற்றப்படுகிறார்.

*இந்தத் தலத்தில் சுவாமியை அம்பாள்
அனுதினமும் பூஜை செய்வதாக ஐதீகம்!

*இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் வராஹியை வழிபட்டால், தீராத பிரச்னைகள், திருமண்த்தடை போன்றவை விலகும்! ஆக, அந்தக் காலத்திலேயே வராஹி வழிபாடு இங்கே இருந்திருக்கிறது என அறியலாம்!

*இங்கே, ஸ்ரீமங்களநாதர் சன்னதி, மங்களேஸ்வரி சன்னதி, மரகதக்கல் நடராஜர் சன்னதி, சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனித்தனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்துமே மிக நேர்த்தியான கட்டுமானத்துடனும் சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது!

*காரைக்கால் அம்மையாரும் இங்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

*திருவாசகத்தில் 38 இடங்களில் இந்த கோயிலை பற்றி பாடப்பட்டு உள்ளது.

*மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் .

*பொதுவாக, தாழம்பூவை பூஜைக்குச் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இங்கே, பிரதோஷத்தன்று தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்த கோயிலில் சிவனாருக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை சார்த்தி வணங்கினால், தோஷங்கள் நீங்கும். தடைப்பட்ட திருமணமும் கைகூடும்!

*வாழ்வில் ஒரு தடவையாவது உத்திரகோசமங்கை சென்று வழிபட்டு வாருங்கள்!அப்படி சென்று வந்தால் நீங்கள் பாக்கியசாலி என்று அர்த்தம்.

தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

Leave a Reply